ஜெர்மனி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜெர்மனி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 30 மே, 2015

நௌஸ்வான்ஸ்டைன் காஸில் (Neuschwanstein Castle)

தென்கிழக்கு ஜெர்மனியில் அமைந்திருக்கும் மாநிலம் பவாரியா (Bavaria). நான் வசித்துவரும் பாடன்வுர்டெம்‌பர்க் (Baden-wuerttemberg) மாநிலத்தின் அண்டை மாநிலம் இது. ஜெர்மனியின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான ம்யூனிக் (Munich) இம்மாநிலத்தின் தலைநகரம். அழகிய இந்த மாநிலத்தில் அமைந்த ஒரு கோட்டைதான் நௌஸ்வான்ஸ்டைன்.

19-ஆம் நூற்றாண்டில் ரோமனெஸ்‌க் ரிவைவல் (Romanesque Revival) கட்டிட கலையின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ள கோட்டை இது. இது ஃப்யுஸ்ஸென் (Fuessen) என்னும் இடத்தில் ஹோஹெங்ஸ்சுவன்கௌ (Hohenschwangau) கிராமத்தில் அமைந்துள்ளது. பவாரிய மன்னர் லுட்விக் 2 (Ludwig 11) நிர்ணயித்த கோட்டை இது. கட்டி முடிப்பதற்கு வருடங்கள் 17 பிடித்த இந்த கோட்டை சிறிய மலை குன்றில் அமைந்துள்ளது. டிஸ்னிலான்ட்-ல் (Disneyland) அமைந்திருக்கும் ஸ்லீப்பிங்க் ப்யூட்டீ (Sleeping Beauty) கோட்டைக்கான முன்மாதிரி இந்த கோட்டைதான். இந்த பூவுலகில் அதிக பார்வையாளர்கள் வந்து செல்லும் கோட்டையும் இதுதான். மேலும் அதிகப்படியான தகவல்களுக்கு கூகிள் (Google) மற்றும் விக்கி (wiki) பக்கங்களை நாடவும்.

2012-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நண்பர்கள் யூதா வசந்த் மற்றும் ஆனந்த்துடன் இந்த கோட்டைக்கு முதன் முறை சென்றேன். உலகின் அற்புதங்களில் ஒன்றான இந்த கோட்டை எனக்கு மிகவும் பிடித்து போனதால் அடுத்த முறை மனைவி, குழந்தை ற்றும் நண்பன் நட்ராஜ் குடும்பத்தோடு அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் மறுபடியும் அங்கு சென்றேன். அளவுகடந்த சுற்றுலா பயணிகளின் காரணமாக, அனுமதி சீட்டு கிடைக்காததால் கோட்டைக்கு உள்ளே செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினோம். மீண்டும் 2015-ல் மே மாதம் மனைவி மற்றும் குழந்தையை அழைத்துக்கொண்டு இந்த கோட்டைக்கு வந்தேன். 2012-ல் ஏமாற்றத்தோடு திரும்பிய என் மனைவிக்கு இந்த முறை இந்த பயணம் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

அனுமதி சீட்டு பெற்ற பிறகு கோட்டையை காண மலையேறி சென்றோம். மழையும் இல்லாமல் வெயிலும் இல்லாமல் மந்தமாக இருந்த கால நிலை ஒத்துழைக்க எளிதாக கோட்டையை அடைந்தோம். வந்த வழியில் ஜாமூன் போன்ற மென்மையான இளஞ்சூடான உருண்டைகளை வாங்கி பசியாறினோம், என் குழந்தைக்கு மிகவும் பிடித்து போனது அந்த உணவு. கோட்டைக்கு முன் சில புகைப்படங்களை எடுத்துவிட்டு உள் சென்றோம். இந்தியர்கள், சீனர்கள், ஐரோப்பியர்கள் என்று உலகின் பல பக்கங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் நிரம்பி வழிந்து கொண்டிருந்ததை காண முடிந்தது.


எங்கள் முறை வந்தவுடன் கோட்டைக்குள் சென்றோம். நாங்கள் உட்பட கிட்டத்தட்ட 25 பேர் கொண்ட கூட்டத்திற்கு இளம்பெண் ஒருவர் வழிகாட்டியாக வந்து கோட்டையின் வரலாற்றை விளக்கியபடியே சுற்றி காண்பித்தார். கோட்டைக்குள் புகைப்படம் எடுக்க தடை என்பதால் சொந்த கண்கள் கொண்டு கோட்டையை முழுவதும் ரசிக்க முடிந்தது. கோட்டை கட்டி முடியும் தருவாயில் மன்னர் லுட்விக் மர்மமான முறையில் இறந்து  போனதால், மன்னர் வம்சம் வாழ்வதற்கு முன்னமே பொதுமக்கள் பார்வைக்கு வந்துவிட்டது இந்த கோட்டை.

பலதளங்கள் கொண்ட இந்த கோட்டை சுண்ணாம்பு கற்கள், செங்கற்கள், மார்பிள் கற்கள், மரப்பலகைகள் கொண்டு மிகவும் நேர்த்தியாகவும் வலிமையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தர்பார், இசை வளாகம், மன்னர் அறை, விருந்தினர் அறைகள், மரக்கட்டில்கள், மேஜைகள், நாற்காலிகள். தொங்கும் விளக்குகள், ஓவியங்கள் என்று அனைத்தும் நிறைந்துள்ளன. குறிப்பாக மன்னரின் கட்டில் வேலைப்பாடுகள் செய்ய மட்டும் 4 வருடங்கள் எடுத்துக்கொண்டது என்பதை கேட்ட பொழுது, ஒட்டு மொத்த கோட்டையை இழைப்பதற்கு எவ்வளவு சிரத்தை எடுத்து இருப்பார்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. தினமும் சராசரியாக 6000 சுற்றுலா பயணிகள் வருகை தந்தாலும், மெருகு குறையாத வகையில் மிகவும் கவனமாக பாராமரிக்க பட்டு வருவதை காண முடிந்தது.

இறுதியாக சமையல் அறையை பார்த்துவிட்டு, கோட்டையை ஒத்த நினைவு பொருள் வாங்கிவிட்டு, 1 மணிநேர சுற்றலுக்கு பிறகு வெளியே வந்தோம். கோட்டையின் பிரம்மாண்டத்தை காண்கையில் பார்த்த இடங்கள் மிகவும் குறைவாக தெரிந்ததால், சில இடங்கள் பொது மக்கள் பார்வைக்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்று புரிந்து கொள்ள முடிந்தது.

மலை உச்சியில் அமைந்துள்ள மனித படைப்பின் உச்சமான இந்த படைப்பு சொல்லொண்ணா ஆச்சர்யத்தை எனக்கு அளித்தது என்றால் என் மனைவிக்கும் அதே உணர்வுதான். இது போன்ற கலைபடைப்புகளை பார்க்கும் பொழுது நிர்மாணித்தவர்களை "அவன் ரசிகன்-டா" என்று நம்மூர் சொலவடையில் கூறுவது மன்னர் லுட்விக்-கு மிகப் பொருந்தும். கோட்டைக்கு உள்ளே அற்புதம் என்றால், கோட்டைக்கு உள்ளே இருந்து ஏரிகள், காடுகள் கொண்ட பவாரியன் வெளி அழகை ரசிப்பது அதியற்புதம்.


அடுத்து, இந்த கோட்டையின் அழகை எட்ட நின்று ரசிப்பதற்காகவே இரு மலை குன்றுகளுக்கு இடையே உருவாக்கப்பட்ட மரின்ப்ருக்க (Marienbrucke) பாலத்தை நோக்கி எங்கள் கால்கள் நடந்தன. அந்த பாலத்திற்கு நடுவில் சென்று கோட்டையை பின்னணியாக கொண்ட புகைப்படங்களை சுட்டு தள்ளினோம். மிகச்சிறிய பாலம் என்றாலும் உயரமான இடத்தில் அமைந்திருப்பதால் என் கால்கள் நடுங்குவதை தடுக்க முடியவில்லை.  

இந்த கோட்டையின் அழகுக்கு அழகு சேர்ப்பது அது அமைந்திருக்கும் இடம்தான், அந்த அழகை ரசித்தபடியே கீழே இறங்கினோம். துள்ளி ஓடி வந்து கொண்டிருந்த என் மகளிடம் கேட்டேன், 'நாம எங்கே போயிட்டு வரோம்?', யோசித்தபடியே அவள் கூறினாள் 'பெரிய haselnuss', ரசித்து சிரித்த படியே 'அது castle மகளே' என்றேன்.

யுபெர்லிங்கென் (Ueberlingen) வரும் வழியில் காஃப்பய்ரென் (Kaufbeuren) என்னும் இடத்தில் முதியவர் கூட்டம் ஒன்று பீர் அருந்தியபடியே அப்பாக்கள் தினம் (Father's Day, 14 மே 2015) கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். எங்களை கண்டவுடன் அழைத்த அவர்கள், என்ன வேண்டுமானாலும் வாங்கி கொள்ளுங்கள் என்றனர். அன்பு தொல்லைக்கு செவிமடுத்து காபி வாங்கி பருகினோம். அக்கூட்டத்தில் இருந்த பெண்மணி எங்களை பற்றி கேட்டறிந்து கொண்டு, 'salute to IT people' என்று சல்யூட் செய்தார். கணிப்பொறியாளன் என்பதற்காக நான் மகிழ்ந்த ஒரே தருணம் அதுதான்.

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

யூபெர்லிங்கென் (Ueberlingen) - பூலோக சொர்க்கம்

அழகான ஏரி, கண்கவர் மலர் தோட்டங்கள், பசுமையான பழத்தோட்டங்கள், நீண்ட நெடிய மரங்களை கொண்ட காடுகள், ஏரிக்கரையில் அமைந்த வீடு, அந்த வீட்டில் நமக்கு பிரியமானவர்களுடன் நாம், எல்லோரும் காணும் கனவு இதுதான். அத்தனையும் நிஜமாக அமைந்த ஒரு இடம்தான் யூபெர்லிங்கென்.

பணி நிமித்தமாக கடந்த 2010 மற்றும் 2012 ஆம் ஆண்டுளில் ஜெர்மனி (Germany) நாட்டின் யூபெர்லிங்கெனில் வசிக்க நேரிட்டது. தற்போதைய 2014 ஆண்டிலும் இங்கு வசிக்க நேர்ந்தது இனிய அனுபவமாக இருக்கிறது. கடந்த வருடங்களில் இன்ஸ்ப்ருக் (Innsbruck, Austria), பாரிஸ் (Paris, France), இன்டர்லேகன் (Interlaken, Switzerland), வெனிஸ் (Venice, Italy), பெர்லின் (Berlin, Germany) என்று சில சுற்றுலா பயணங்கள் சென்றிருந்தாலும், அவற்றை எல்லாம்விட யூபெர்லிங்கென் சிறந்த சுற்றுலாதலமாக உணர்ந்தபடியால் அதைப்பற்றி எழுத முனைந்ததில் விழைந்த கட்டுரைதான் இது. இதை ஒரு பயணக்கட்டுரையாக எழுத முயற்ச்சிக்காமல், இங்கு வாழ்ந்த/வாழ்கின்ற அனுபவத்தை எழுத விழைகிறேன்.
யூபெர்லிங்கென் நகரம் தென்மேற்கு ஜெர்மனியில் பேடன்-வுர்ட்டேம்பெர்க் (Baden-Wuerttemberg) மாநிலத்தில் கான்ஸ்டன்ஸ் ஏரிக்கரையில் (Lake Constance) அமைந்துள்ளது. நீண்ட நெடிய வரலாறு கொண்ட இந்த நகரம், முன்னொரு காலத்தில் ரோமானியர்களால் (Romans) ஆளப்பட்டு பின்னர் சுதந்திரமடைந்து ஜெர்மனி ஆட்சியின் கீழ் வந்து, தற்பொழுது மிக முக்கியமான சுற்றுலாதலமாக விளங்குகிறது. கான்ஸ்டன்ஸ் ஏரியை போடன்ஸீ (Bodensee) என்றும் குறிப்பிடுவார்கள். ஜெர்மனி, ஸ்விட்சர்லான்ட் (Switzerland) மற்றும் ஆஸ்ட்ரியா  (Austria) ஆகிய மூன்று நாடுகளையும் போடன்ஸீ இணைக்கிறது.


யூபெர்லிங்கெனை சுற்றி திராட்சை தோட்டங்கள் எங்கும் நிறைந்திருக்கின்றன. பல நூற்றாண்டுகளாக திராட்சை உற்பத்திக்கு பெயர் பெற்ற இடம் இது. ஆப்பிள் (Apple) தோட்டங்களும் நிறைய உள்ளன. இதை தவிர்த்து ஸ்ட்ராபெர்ரி (Strawberry), ஹிம்பெர்ரி (Himberry), ப்ரோம்பெர்ரி (Bromberry) மற்றும் செர்ரி (Cherry) பழங்கள் விளைகின்ற பூமி இது. ஹாஸல்நஸ் (Haselnuss), வால்நஸ் (Walnuss) போன்ற கொட்டைகளும் இங்கு விளைகின்றன.

இங்கு மனைவி மற்றும் குழந்தையுடன் வாழ்ந்த நாட்களை வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாத வகையில், மனம் முழுவதும் இனிமையான நினைவுகளை யூபெர்லிங்கென் வழங்கியுள்ளது.

யூபெர்லிங்கெனில் மார்ச் (March) மாதத்தில் நடைபெறும் குளிர்கால விழா மிகவும் அருமையாக இருக்கும். ஆண்கள் அனைவரும் கருப்பு நிற உடையால் கண்களை தவிர்த்து உடல் முழுவதும் மறைத்து ஊர்வலமாக வருவார்கள். சவுக்கு போன்ற ஒன்றை வைத்து காற்றில் அடித்து ஒலி எழுப்புவார்கள். பெண்கள் சிகப்பு நிற உடை அணிந்து வருவார்கள். வேடிக்கை பார்ப்பவர்களுக்கு இனிப்புகளை வாரி வழங்குவார்கள். குளிரில் நடுங்கிக்கொண்டே இரண்டு முறை இந்த கொண்டாட்டத்தை கண்டு களித்திருக்கிறேன்.

இலையுதிர் காலம், வசந்த காலம், வெயில் காலம், மழை காலம், பனி காலம் என்று எல்லா விதமான கால மாற்றங்களையும் மிகவும் துல்லியமாக பார்த்து உணர்ந்து அனுபவிக்கும் வகையில் வருடம் முழுவதும் கால நிலை அமைந்திருக்கும். குளிர் காலங்களில் குறைந்தபட்சம் -20 டிகிரி வரை வெப்பநிலை இருக்கும். அதிகபட்சம் 30 டிகிரி வரை கோடைகாலங்களில் இருக்கும்.


வருடத்தின் பெரும்பாலான மாதங்கள் கடும் குளிர் நிரம்பி இருந்தாலும், மே (May) மாதம் முதல் ஆகஸ்ட் (August) மாதம் வரை சூரியன் முகம் காட்டும். இந்த மாதங்களில் கோடையை அனுபவிக்க
ஐரோப்பிய (Europe) மக்கள் யூபெர்லிங்கென் நோக்கி படை எடுப்பார்கள். அதனால் தங்குவதற்கு இந்த மாதங்களில் வீடு கிடைப்பது மிகவும் சிரமம். 2012 ஆம் வருடம் மனைவி மற்றும் மகளுடன் வசிப்பதற்கேற்ற இடம் இங்கு கிடைக்காததால் அருகாமையில் இருக்கும் ஃப்ரிக்கிங்கன் (Frickingen) என்ற இடத்தில் 2 மாதங்கள் தங்கி இருந்தோம். ஃப்ரிக்கிங்கன் ஆப்பிள் தோட்டங்கள் நிரம்பிய மிகவும் அழகான கிராமம். ஆப்பிள் தோட்டங்களில் என் மகள் தவழ்ந்து விளையாடிய தருணங்கள் மறக்கமுடியாதவை.

அதன்பிறகு இரண்டு மாதங்கள் ஆன்டல்ஷாஃபன் (Andelshofen) என்னும் இடத்தில் குடியிருந்தோம். இங்கு நிறைய ஸ்ட்ராபெரீ பழத்தோட்டங்கள் இருக்கின்றன. ஒரு நாள் நாங்கள் தங்கி இருந்த வீட்டு உரிமையாளருடைய தோட்டத்தில் பழங்கள் பறித்து என் மகளுக்கு கொடுத்தேன். பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் சுவையில் மயங்கிய என் குழந்தை செடிகளில் இருந்து பழங்களை பறித்து உண்ண
த் தொடங்கினாள். ஒரு கட்டத்திற்கு மேல் பழத்தை பறிக்க பொறுமை இல்லாமல் செடியில் இருந்து நேரடியாகவே சாப்பிட்டாள். என் காமிரா (Camera) கண்களுக்குள் சிக்கிய அந்த தருணம் ஒரு கவிதை.

யூபெர்லிங்கெ
னுக்கு அருகில் திரைபெர்க் (Triberg) என்னும் இடத்தில் ப்ளாக் ஃபாரஸ்ட் (Black Forest) அருவி அமைந்துள்ளது. இங்கு ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் (Cake) தவிர்த்து குக்கூ க்ளாக் (Cuckoo clock) மிகவும் பிரசித்தம். இங்கு வாங்கிய குக்கூ சுவர் கடிகாரம் கன்னியாகுமரியில் என்வீட்டு வரவேற்பு அறையை அலங்கரித்துக்கொண்டிருக்கிறது.

கோடைகாலமான ஜுலை (July), ஆகஸ்ட் மாதங்களில் போடன்ஸீயில் நீச்சல் அடிப்பது எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. சிறிய வயதில் ஊரில் குளம் குட்டைகளில் நீச்சலடித்த சுகானுபவங்களை மீட்டு கொடுக்கிறது போடன்ஸீ. போடன்ஸீ தெர்மே (Therme) என்னும் புகழ்பெற்ற ஸ்பா (Spa) இங்கு அமைந்துள்ளது. உடல் ஆரோக்கியத்திற்கான ஸானா (Sauna), மஸாஜ் (Massage) மற்றும் வெந்நீர் குளியல் இங்கு பிரசித்தம். இங்கு பலமுறை சென்றிருந்தாலும் ஒவ்வொரு முறையும் தெர்மே புத்துணர்ச்சி தரத்தவறுவது இல்லை.

யூபெர்லிங்கெனில் இருந்து போடன்ஸீ ஏரியை தாண்டி கான்ஸ்டன்ஸ் (Konstanz) என்னும் நகரம் உள்ளது. அங்கு மனைவி குழந்தையுடன் சென்று ஸீ வர்ல்ட் (Sea World) என்னும் மீன் அருங்காட்சியகத்தில் பென்குயின் (Penguin) பார்த்தது மறக்க முடியாதது. யூபெர்லிங்கெனுக்கு அருகில் மீர்ஸ்பர்க்-ல் (Meersburg) மிகவும் பழமை வாய்ந்த கோட்டை (Castle) ஒன்று உள்ளது. பழம்பெருமை மாறாமல் இருக்கும் அந்த கோட்டை காணத் தகுந்த இடங்களில் ஒன்று.

போடன்ஸீ ஏரியில் மீன்களை தவிர்த்து வாத்துகள் அதிகமாக வசிக்கின்றன. ஜெர்மனியின் முக்கிய பறவையான அன்னபறவையையும் (Swan) இந்த ஏரியில் காணலாம். ஒருமுறை குடும்பமாக எரிக்கரையில் அமர்ந்திருந்தோம். கரைக்கு வந்த அன்னபறவை ஒன்று நாங்கள் கொடுத்த ப்ரெட் துண்டுகளை சாப்பிடத்தொடங்கியது. திடீரென்று என் மகள் கையில் இருந்த ப்ரெட் துண்டை கொத்தி தின்றது. அந்நிகழ்வுக்கு பிறகு அன்னப்பபறவையை கண்டாலே என் மகள் அழுதாள்.


யூபெர்லிங்கெ
னுக்கு அருகில் இருக்கும் மிகப்பெரிய நகரம் ஃப்ரிட்ரிச்ஷாஃபென் (Friedrichshafen). இங்கு வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் கார் ட்யூனிங்க் ஷோ (Car Tuning Show), ஏர் ஷோ (Air Show) போன்றவை மிகவும் பிரசித்தம். ஃப்ரிட்ரிச்ஷாஃபென் செல்லும் வழியில் சேலம் (Salem) என்று ஒரு இடம் உள்ளது. முதலில் நம்மூரை போல் இங்கேயும் ஒரு சேலம் என்று ஆச்சர்யப்பட்டபோது, இது சேலம் இல்லை ஸாலம் என்று உச்சரிக்க வேண்டும் என்று அறிந்து கொண்டேன்.


எதிர்வருபவர் நமக்கு தெரியாதவராக இருந்தாலும் ஹலோ (Hello) சொல்லி மரியாதை செய்யும் வழக்கத்தை இங்கு எல்லோருமே கடைபிடிக்கிறார்கள். முதலில் இதைக் கண்டு வியப்பாக இருந்தாலும், மிகவும் நல்ல பழக்கம் என்று புரிந்ததால் எளிதில் கைக்கொள்ள முடிந்தது. உடல் ஆரோக்கியம் பேணுவதில் ஜெர்மனியர்கள் அதிக அக்கறை காட்டுகிறார்கள். நம்மூரில் நாம் மிதிவண்டியை (Cycle) மறந்து வரும் நிலையில் இங்கு ஸைகிளிங்க் (Cycling) முக்கிய பொழுது போக்காக உள்ளது.

வாரம் முழுவதும் நன்கு உழைக்கும் மக்கள், வார இறுதி சனிக்கிழமையில் மது, உணவு என்று கொண்டாடிவிட்டு, ஞாயிற்றுக்கிழமை முழுவதும் வீட்டுக்குள் அடைந்து விடுகிறார்கள். அன்று உணவகங்களை தவிர்த்து வேறு எந்தக் கடைகளும் திறப்பதில்லை. ஆட்டோமொபைல் துறையில் முன்னணி நாடான ஜெர்மனியில், மக்கள் அனைவரும் சட்ட திட்டங்களை மதித்து நடப்பதால் இயந்திரத்தனமான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பது மிகை இல்லை என்றாலும், சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வாழ்க்கையை கொண்டாடவும் தவறுவது இல்லை.

இங்கு பெரும்பாலும் தாய் மொழியான ஜெர்மன் மொழிதான் பேசப்படுகிறது. இளம் தலைமுறையினர் ஆங்கிலம் பேசுகிறார்கள். இந்தியர்களாகிய நாம் ஜெர்மன் மொழியில் பேசினோம் என்றால், நம்மை தங்கள் சக நாட்டவராகவே பாவிக்கிறார்கள். உலகமயமாக்கலின் விளைவாக பல நாடுகளுக்கு நாம் சென்று பணியாற்றினாலும், அந்தந்த நாடுகளின் மொழி அறிந்து கொண்டோம் என்றால் நல்ல அங்கீகாரத்தை பெறலாம்.

யூபெர்லிங்கெனுக்கு அருகில் போடன்ஸீ ஏரியை தாண்டி மைனௌ (Mainau) என்று அழைக்கப்படுகிற அழகிய தீவு ஒன்று அமைந்துள்ளது. இத்தீவு முழுவதும் மலர்கள் மலர்கள் மலர்கள். காலநிலையினை பொறுத்து மலர் வகைகள் மாறுபடும். இம்முறை ஏப்ரல் (April) மாதத்தில் சென்ற பொழுது தீவு முழுவதும் துலிப் (Tulip) மலர்களால் நிறைந்திருந்தது. சுற்றுலா பயணிகளில் நிறைய இந்திய புது மண தம்பதிகளை பார்க்க நேர்ந்தது மகிழ்ச்சி அளித்தது. இத்தீவுக்கு அருகே ரேசெநௌ (Reichenau) தீவு உள்ளது, இந்தத்தீவு காய்கறி தோட்டங்களால் ஆனது.

நமது உணவு முறைக்கும், ஜெர்மனிய உணவு முறைக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அரிசி சாதம், அதற்கான குழம்பு வகைகள், அரிசி மற்றும் கோதுமையாலான உணவு வகைகள் என்பது நமது உணவு முறை. இதை தவிர்த்து பழங்கள் காய்கறிகள் மற்றும் மாமிசம் போன்றவையும் நமது உணவுமுறையில் உண்டு. கிட்டத்தட்ட இந்த வகையில்தான் ஜெர்மனிய உணவு முறை என்றாலும், சாப்பிடும் முறை மிகவும் வித்தியாசப்படுகிறது. பொறித்த/வேகவைத்த மாமிசத்துண்டு, பச்சையான இலை தழை காய்கறிகளாலான சாலட், பழங்கள், ப்ரெட் வகைகள் இதுதான் ஒரு வேளைக்கான உணவு பழக்கம்.
  
பாலின பாகுபாடின்றி தனக்கு தேவையான உணவை தானே சமைத்துக்கொள்கிறார்கள். நம்மை போலல்லாமல் எப்பவாவது ஒரு முறை  சாதமும் சேர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் தினம் உருளைக்கிழங்கு உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள். எனக்கு தெரிந்த அளவில் உருளைக்கிழங்கு ஒரு உலகளாவிய உணவு என்று உரக்கச் சொல்லுவேன்.

நாம் அதிகமாக தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள். ஆனால் இங்கு பெரும்பாலும் குளிர் பானங்கள், பழச்சாறுகள், மற்றும் சோடா கலந்த தண்ணீர் அருந்துகிறார்கள். இதய வடிவிலான பிரெட்செல் (Pretzel) என்று அழைக்கப்படும் ப்ரெட் உணவு குறைந்த விலையில் கிடைக்கும். இந்த உணவு கிட்டத்தட்ட ஐரோப்பிய நாடுகளின் தேசிய உணவு என்று சொல்லத்தக்க வகையில் எல்லா இடங்களிலும் கிடைக்கப் பெறுகிறது.


ஆண் பெண் பேதமின்றி பள்ளி பருவத்திலேயே மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு ஆட்பட்டுவிடுகிறார்கள். வளர வளர பெரும்பாலானோர் இந்த பழக்கத்தை கைவிட்டுவிடுகிறார்கள். 'களவும் கற்று மற' என்று நம் முன்னோர் சொன்னதை இவர்கள் சரியாக கடைபிடிக்கிறார்கள்.

பெரும்பாலும் திருமணம் செய்யாமலேயே கணவன் மனைவியாக குழந்தையுடன் வாழ்கிறார்கள். பாய் ஃப்ரென்ட் (Boy Friend) அல்லது கர்ல் ஃப்ரென்ட் (Girl Friend) என்று அறிமுகம் செய்கிறார்கள் என்றால் அவர்கள் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்கிறார்கள் என்று புரிந்து கொள்ளலாம். திருமண பந்தத்தில் இருந்து விடுபடுவது மிகவும் செலவு வைக்கும் என்பதால் இப்படி ஒரு ஒப்பந்தம். திருமணம் புரிந்த ஜோடிகளை போல பெரும்பாலான இவர்களும் வாழ்வு இறுதி வரை ஒன்றாக வாழ்கிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது சம்பிரதாயமான முறைகளை தாண்டியும் நம்பிக்கை வெற்றி பெறுகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

டிஸெம்பர் (December) மாதத்தில் பனி மழை பொழிந்து எங்கும் பனியால் சூழப்பட்டு கருப்பு வெள்ளை காட்சிகளாகவே தெரியும். முதல் பனியில் நடக்கும்பொழுது பஞ்சில் நடப்பது போல் அருமையாக இருக்கும். தொடர்ந்து வரும் நாட்களில் பனி இறுகி பாறைபோல் ஆகிவிட, வழுக்கி விழாமல் செல்ல கவனமாக நடக்க வேண்டும். 

பனி சூழ்ந்த சாலைகளை போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் சரிசெய்ய தினமும் காலையில் பனிக்கட்டிகளை அள்ளி செல்லும் லாரியை தவறாமல் பார்க்கலாம். வீட்டின் முன்னால் குவிந்திருக்கும் பனியை விலக்கி வழி ஏற்படுத்துவது மக்களின் அன்றாட கடமை ஆகிவிடும். இது போன்ற காட்சிகளை நம்மூரில் கற்பனையில் கூட பார்க்க முடியாது. நம்மூரை போலல்லாமல் இங்கு பெரும்பாலான வீடுகள் பனிக் காலத்திற்கு ஏற்ற வகையில் ஓடு வேய்ந்த கூரை வீடுகளாகவே அமைக்கப்பட்டுள்ளன. கம்பி தடுப்புகள் இல்லாத வெறும் கண்ணாடியாலான ஜன்னல்கள் மற்றுமொரு சிறப்பு அம்சம்.

இந்திய வெப்ப சூழ்நிலையில் வளர்ந்துவிட்ட நமக்கு, குளிர்காலத்தை இங்கு எதிர்கொள்வது சிரமமான காரியம்தான். கண்களை தவிர அனைத்தையுமே அங்கி, கையுறை, பூட்ஸ் (Boots), தொப்பி போன்ற குளிர் தாங்கும் வெப்ப அணிகலன்களால் மறைத்தாலும் குளிர் உள்ளே போய் எலும்பை குத்துவதை தவிர்க்க முடியாது. வீடுகளில் ஹீட்டர் (Heater) இருப்பதால் ஓரளவு சமாளித்துக் கொள்ளலாம்.

சக குடும்ப உறுப்பினராகவே பாவித்து செல்ல பிராணியான நாய் வளர்ப்பது, கிட்டத்தட்ட எல்லோருமே இங்கு வழக்கமாக வைத்திருக்கிறார்கள். நாம் செல்லும் இடங்களுக்கு எல்லாம் செல்ல பிராணிகளுக்கும் அனுமதி உண்டு. பஸ் (Bus) மற்றும் டிரெய்னிலும் (Train) நாய்களை கூட்டி செல்லலாம். மனிதர்களை விட ஒழுக்கமாக அந்த நாய்கள் நடந்து கொள்வதை பார்க்கும் பொழுது ஆச்சரியமாக இருக்கும். குறிப்பிட்ட நேரத்தில் வரும் பஸ்ஸும் டிரெய்னும் இன்னுமொரு ஆச்சர்யம்.

கோடைக்காலத்தில் ஒரு படகை வாடகைக்கு எடுத்துக்கொண்டு போடன்ஸீ ஏரியில் பயணிப்பது மிகவும் அலாதியான அனுபவம். அமைதியான ஏரி, தெளிவான குளிர்ந்த நீர், மிதமான சூரியன், மெல்லிய காற்று என்று மிகவும் அற்புதமாக இருக்கும். தெளிந்த வானிலை அமைந்த தருணங்களில் ஏரிக்கு அந்தப்புறம் பனியால் சூழப்பட்ட ஆல்ப்ஸ் (Alps) மலை தொடரின் காட்சி சொல்லொண்ணா அழகைத் தரும்.

தேனிலவு செல்வதற்கு மிகவும் சிறந்த இடம் யூபெர்லிங்கென். மிக அருகாமையில் ஸ்விட்சர்லான்ட் மற்றும் ஆஸ்ட்ரியா நாடுகள் அமைந்துள்ளதால், ஆல்ப்ஸ் மலைசிகரங்களில் அமைந்த மலைவாசத்தலங்களுக்கு செல்வதோடு மட்டுமல்லாமல் போடன்ஸீரிக்கரையில் அமர்ந்து உலகை மறந்து பொழுதுபோக்க மிகவும் அருமையான இடம்.



மாலை வேளைகளில் போடன்ஸீரிக்கரையில் காலாற நடந்து செல்வது மிகவும் உன்னதமான அனுபவம். ஒவ்வொரு முறை நான் நடைபயணிக்கும் பொழுதும் என் உதடுகள் தானாகவே முணுமுணுக்கும் "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!".