தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 11 ஏப்ரல், 2011

குற்றம் - நடக்கப்போவது என்ன? தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2011

ஆளும் தி.மு.க தலைமையில் ஒரு கூட்டணி, அ.தி.மு.க தலைமையில் ஒரு கூட்டணி, தாங்கள்தான் தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்று கூறிக்கொள்ளும் காங்கிரஸ், பா.ம.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகள் மேற்கண்ட எதாவது ஒரு அணியில் ஐக்கியமாகிவிட, தேர்தல் அரசியலின் சூட்சுமம் தெரியாத ம.தி.மு.க ஒதுங்கிவிட, கம்யூனிஸ்ட் கட்சிகள் அ.தி.மு.க அணியில் சேர்ந்துகொள்ள, மூன்றாவது அணி என்று பெயரளவில் பா.ஜ.க போட்டியிட, தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

ஒரு சாதாரண குடிமகன், நல்லவன், பொதுநலம் மிக்கவன், ஆளுமை பண்பு உடையவன். தன்னுடைய தொகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பவன். தன்னால் இயன்ற அளவு பொது சேவை செய்து வருபவன். தொகுதி முழுவதும் அறிமுகம் உடையவன். ஆனால், எந்த அரசியல் கட்சியையும் சாராதவன். இப்படிப்பட்ட ஒருவன் தேர்தலில் போட்டியிடுகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள், அவனால் வெற்றி பெற முடியாது என்பது மட்டுமல்ல, அவன் கட்டிய வைப்புத்தொகை (deposit) கூட அவனுக்கு கிடைக்காது என்பதுதான் நிதர்சனம்.

அரசியல்வாதியின் வாரிசு, சினிமா நடிகன் இவர்கள்தான் மக்கள் பணி செய்ய முடியும் என்கிற அவல நிலைதான் தற்பொழுது இருக்கிறது. கட்சிகளும் உண்மையான தொண்டனை கண்டுகொள்வதில்லை. வாரிசுகளை தவிர்த்து, யாரால் கோடிகணக்காக செலவு செய்ய முடியும், யாரால் குறிப்பிட்ட சாதி அல்லது மத ஓட்டுகளை பெற முடியும், யாருக்கு போதுமான படைபலம் உள்ளது என்ற அடிப்படையிலேயே கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்கின்றன.

ஒரு வேட்பாளருடைய தேர்தல் செலவிற்கு தேர்தல் கமிஷன் தற்பொழுது நிர்ணயித்துள்ள தொகை 16 லட்சம். ஆனால், பிரபல கட்சி வேட்பாளர்கள் 2 கோடி முதல் 20 கோடி வரை செலவு செய்கிறார்கள் என்றாலும், 16 லட்சம் கணக்கு காட்ட முடிகிறது என்றால் சட்டசபை உறுப்பினர் ஆவதற்கு முன்னதாகவே ஊழல் ஆரம்பித்து விடுகிறது. மக்களாட்சியின் அடிப்படையே இந்த இடத்தில இருந்துதான் ஆட்டம் காண்கிறது. இவ்வளவு பணம் ஒரு வேட்பாளருக்கு எப்படி கிடைக்கிறது. சொந்த பணம், கட்சி நிதி, ஆட்சியில் இருந்த பொழுது ஊழல் செய்த பணம், என்று பல வகைகளில் இந்த பணம் வருகிறது. இத்தனை கோடிகள் செலவு செய்து அதை அடுத்த 5 வருட ஆட்சிக் காலத்தில் சம்பாதிக்க முற்படும்போது 'மக்களாட்சி' வியாபாரமாக மாறி விடுகிறது.

உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தற்பொழுது உங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்றால், கடந்த தேர்தலின்பொழுது அவர் தாக்கல் செய்த சொத்து விவரத்தையும், தற்பொழுது தாக்கல் செய்துள்ள சொத்து விவரத்தையும் ஒப்பிட்டு பாருங்கள். தன்னுடைய மக்கள் பணிக்காக மாதம் 30 ஆயிரம் ஊதியம் பெற்ற ஒரு சட்டமன்ற உறுப்பினரின் சொத்து மதிப்பு இடைப்பட்ட காலத்தில் எப்படி இவ்வளவு உயர்ந்தது என்று ஆச்சர்யப்பட்டு போவீர்கள்.

தேர்தலின் பொழுது ஓட்டுக்காக மக்கள் காலில் விழுந்து ஓட்டு சேகரிக்கும் வேட்பாளர்கள், சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று விட்டால், மக்கள் தொண்டன் என்பதை மறந்து, 'நானே அரசன்' என்கிற மனநிலைக்கு வந்து விடுகிறார்கள். அரசாங்க அதிகாரிகளும் காலில் விழாத குறையாக இவர்கள் உத்தரவுக்கு காத்திருக்க, சாதாரண மனிதர்கள் போல இவர்கள் நடந்து கொள்ள மாட்டார்கள் என்கிற அதிகாரம் தெரிந்தோ தெரியாமலோ இவர்களுக்கு வழங்கப்பட்டுவிட, பதவி மோகம் இவர்களை ஆட்கொண்டு விடுகிறது. அதனால், சாகும் வரை பதவியில் இருந்துவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள்.

முன்பெல்லாம் கட்சி நிதிக்காக உண்டியல் ஏந்தி பொதுமக்களிடம் நிதி திரட்டப்படுவதை நாம் நிறைய பார்த்திருக்கிறோம். ஆனால், தற்பொழுது அப்பழக்கம் கிட்டத்தட்ட வழக்கொழிந்து விட்டது. பெரிய பெரிய தொழில் நிறுவனங்களிடம் கட்சிகள் நிதி பெற்று கொள்கின்றன. இதற்கு கைமாறாக கட்சிகள் ஆட்சிக்கு வந்தபின் தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்கின்றன. அதுமட்டுமல்லாமல், மக்களுக்காக செய்யப்படும் எல்லாவிதமான வளர்ச்சி திட்டங்களிலும் ஊழல் செய்வது, அரசியல் வாதிகளின் குடும்பத்திற்காக மட்டுமல்ல, கட்சிக்கும் சேர்த்துதான். உண்டியல் ஏந்தித்தான் அரசியல் நடத்த வேண்டும் என்கிற நிலை மீண்டும் வர வேண்டும், அப்பொழுதுதான் ஊழல் குறைவதற்கான சூழ்நிலை உருவாகும்.

எவ்வளவுதான் ஊழல் புகார்கள் எழுந்தாலும், அரசியல்வாதிகள் ஊழல் செய்ய துணிகிறார்கள் என்றால், என்ன காரணம். பிக்பாக்கெட் திருடனுக்கு கிடைக்கும் தண்டனை கூட ஊழல் அரசியல்வாதிகளுக்கு கிடைப்பதில்லை. நீதிமன்றம் தண்டிப்பதை விட்டுவிட்டு, அரசியல்வாதிகளை எச்சரித்து விடுதலை செய்யும் கொடுமையை என்னவென்று சொல்வது. ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கோரி, பிரபல சமூக சேவகரும், காந்தியவாதியுமான அன்னா ஹசாரே போராடி வருவது வரவேற்கத்தக்கது.

மக்களாட்சி முறை கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து மன்னராட்சி முறை நோக்கி சென்று கொண்டு இருக்கும் அவலத்தை நாம்தான் தடுத்து நிறுத்த வேண்டும். ஒவ்வொரு தேர்தல் வரும்பொழுதும் அடுத்த முன்னேற்றத்திற்கான படி என்று எண்ண தோன்றாமல், 'குற்றம் - நடக்கப்போவது என்ன' என்ற பீதிதான் கிளம்புகிறது.

இம்முறை தேர்தல் நியாயமாக நடைபெற, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாரபட்சம் பார்க்காமல், பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் எடுத்து வருகிறது. இம்முயற்சி மக்களாட்சியை மீட்டெடுக்க ஓரளவேனும் உதவும்.

மக்களாட்சியின் தற்போதைய நிலை குறித்து சிந்தித்தால் வெறுப்புதான் மிஞ்சும், ஒதுங்கி போக மனம் எண்ணும். நாம் ஒதுங்கி செல்லச் செல்ல சீரழிவு அதிகமாகி கொண்டேயிருக்கும். மக்களாட்சி தழைத்தோங்க நம்மால் முடிந்தவற்றை நாம் செய்யலாம். ஓட்டுக்கு பணம் பெறுவதை தவிர்க்கலாம். இலவசங்களை பொருட்படுத்தாமல், கட்சி, சாதி, மத வேறுபாடு இல்லாமல் நல்ல வேட்பாளருக்கு வாக்களிக்கலாம். எந்த ஒரு வேட்பாளரும் தகுதி இல்லை என்று எண்ணும் பட்சத்தில் 49-ஓ பயன்படுத்தலாம். மக்களாட்சி தத்துவத்தை சரியான பாதையில் பயணிக்க வைக்க 'ஓட்டு' என்னும் ஆயுதத்தை தவறாமல் பயன்படுத்துவோம்.

செவ்வாய், 24 மார்ச், 2009

ஓட்டு போடு

நண்பர்களே, இந்தியா உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. ஜனநாயகம் சிறப்பாக செயல்படுவதற்கு மிக முக்கிய காரணம் மக்கள். மக்களை ஆள்வதற்கு, மக்களை தேர்ந்தெடுக்க, மக்களால் பயன்படுத்தப்படும் ஜனநாயக நடைமுறை தேர்தல். தேர்தல் நடைமுறை சிறப்பாக நடைபெறுவதற்கு மக்களுக்கு அளிக்கப்பட்ட ஆயுதம் ஓட்டு. இன்னும் சில மாதங்களில் மக்களவை தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் நாம், செய்ய வேண்டிய ஓட்டளிக்கும் கடமை குறித்த சிந்தனைதான் இந்தக் கட்டுரை.

ஓட்டு போடுவது மக்களின் உரிமையும் கடமையும் ஆகும். ஆனால் சராசரியாக எந்தத் தேர்தலிலும் வாக்காளர்களில் 40 முதல் 45 சதவீதம் பேர் ஓட்டு போடுவதில்லை. ஏன் ஓட்டு போடுவதில்லை என்று ஆராய்ந்து பார்த்தால் அதற்க்கான காரணங்கள் பல. பல பேர் சொல்லும் காரணம், "எனக்கு அரசியல் பிடிக்கவில்லை; எந்த அரசியல் கட்சியும் சரியில்லை; எந்த வேட்பாளரும் சரியில்லை; அதனால் ஓட்டு போட எனக்கு பிடிக்கவில்லை". இன்னும் சிலர், எதற்கு விடுமுறை நாளை வீணடிக்க வேண்டும் என்று ஓய்வு எடுப்பார்கள். இந்த இரு அணுகுமுறைகளும் ஆபத்தான விஷயங்கள்.

அரசியலை மக்கள் வெறுப்பதற்க்கான காரணங்களை சிறிது அலசுவோம். ஜனநாயகம் பிறந்த ஆரம்ப காலக்கட்டங்களில் மக்கள்பணி செய்வதற்க்காக சேவை எண்ணத்துடன் கூடிய தலைவர்கள் பலர் இருந்தார்கள். சிறப்பாக மக்கள் பணி செய்தார்கள். பின்னாட்களில் மக்களுக்கு பணி புரிவதற்க்கான எண்ணம் குறைந்து பணம், புகழ் விரும்பிய தலைவர்கள் பலர் தோன்றினார்கள். தற்பொழுது ஆள்பலம், பணபலம் கொண்டவர்களின் தொழில்கூடமாக மாறிவிட்டது அரசியல். இதில் நம்மைப்போன்ற மக்கள் இந்த நிலைகண்டு வருந்தி அரசியலையே வெறுத்து ஒதுக்கி, ஓட்டு உரிமையைக்கூட செய்ய விரும்பாமல் இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறோம்.

அரசியல் இல்லாமல் நம் நாடு இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. நம் நாட்டின் முன்னேற்றம் அரசியல்/அரசியல்வாதிகளின் கையில்தான் இருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. எனவே வீழ்ச்சி பாதையில் சென்று கொண்டு இருக்கும் ஜனநாயகத்தை மீட்க குடிமக்களாகிய நாம் அரசியலுடன் நம்மை தொடர்புபடுத்திக் கொள்வது மிகவும் இன்றியமையாத ஒன்று. தற்போதைய அரசியல் சூழ்நிலை, சேவை எண்ணம் கொண்ட சாமான்யரும் அரசியலில் பங்கு பெறுவதற்கு ஏற்ற வகையில் இல்லை. எனவே நேரடி அரசியலில் ஈடுபடாவிட்டாலும், நமது ஓட்டு உரிமையை முறையாக பயன்படுத்துவதன்மூலம் அரசியலை மேம்படுத்த முயலலாம்.

அரசியலே சரியில்லை என்று அலுத்துக் கொண்டு நாம் ஓட்டு போடாமல் இருந்தால், அரசியல் கட்சிகளுக்கு எந்த நஷ்டமும் கிடையாது. ஆனால் நாம் ஒதுங்கிப் போக போக அரசியலின் தரம் தாழ்ந்துகொண்டே போகும். நேர்மையற்ற அரசியல்வாதிகள் பெருகிக் கொண்டே போவார்கள். அதனால் நம்முடைய வாக்கை முறையாக பதிவு செய்து, நல்ல வேட்பாளரை தேர்வு செய்வதன் மூலம் அரசியலின் தரத்தை மேம்படுத்தலாம். யார் ஆட்சி செய்தால் எனக்கு என்ன, என்று ஓட்டு போடாமல் இருப்பது அரசியலின் தரத்தை மேம்படுத்த விடாமல் தடுப்பதாகும்.

சரி, ஓட்டு போடலாம் என்று முடிவு செய்தாகி விட்டது, ஆனால் எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை, என்ன செய்வது என்று ஒரு குழப்பம் வரலாம். இந்த மாதிரி ஒரு மோசமான சூழ்நிலை வரும் பொழுது பயன்படட்டுமே என்று நமது அரசியல் சட்டங்களை வகுத்தவர்கள் வகுத்த முறைதான் 49 ஓ. அப்படி என்றால் என்ன என்று பார்போம். எல்லா வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமையை நமக்கு இந்தப் பிரிவு கொடுத்திருக்கிறது. வாக்குச் சாவடிக்கு சென்று ஓட்டு போடுவதற்காக விரலில் மை வைக்கபட்ட பிறகு, எந்த வேட்பாளருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்று நாம் தெரிவிக்கலாம். அதை ஓட்டுச் சாவடி அதிகாரி பதிவு செய்தாக வேண்டும். இதுதான் தேர்தல் விதிகள் (1961)ன் 49 (ஓ) பிரிவு. வாக்காளர் இதற்காக எந்த விண்ணப்பத்தையும் நிரப்பத் தேவையில்லை. ஓட்டுச் சாவடி அதிகாரியிடம் சொன்னால் போதும். அவர் தன்னிடம் உள்ள பாரம் 17 ஏ என்ற பதிவேட்டில் இதை எழுதிக் கொள்வார். அதில் நாம் கையெழுத்திட்டால் போதும்.


எதற்க்காக இந்த முறை என்ற கேள்வி எழுகிறது அல்லவா? எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை என்றால் அதை அரசியல் கட்சிகளுக்கு நாம் உணர்த்தவேண்டும். அதற்கு சிறந்த வழி ஓட்டு போடாமல் இருப்பது அல்ல. 49 ஓவின் கீழ் பதிவு செய்வதே சரியான முறையாகும். ஒரு தொகுதியில் ஜெயிக்கிற வேட்பாளரை விட , 49 ஓவுக்கு அதிக ஓட்டு விழுந்தால், எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அவ்வாறு நடக்கும் பட்சத்தில் அந்த தொகுதியில் மறுதேர்தல் நடத்த வேண்டும், ஏற்கனவே போட்டியிட்ட யாரும் போட்டியிட முடியாது என்பது விதி. விளைவாக, 'இனி நேர்மையான அரசியல் செய்ய வேண்டும், நல்ல வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்; இல்லாவிட்டால் மக்கள் ஆதரவு கிடைக்காது' என்பது அரசியலில் உள்ளவர்களுக்கு உறைக்கும்.

நமது அரசியல் தலைவர்கள் மிகவும் புத்திசாலிகள். இப்படி ஒரு பிரிவு (49 ஓ) அரசியல் சாசனத்தில் இருக்கிறது என்பதை மக்கள் இவ்வளவு நாளும் தெரியாத வகையில் பார்த்துக்கொண்டார்கள். தற்பொழுது சமூக ஆர்வலர்கள் மூலமாக இந்த விஷயம் மிகவும் விரைவாக மக்களிடையே பரவிக்கொண்டு இருக்கிறது. தற்பொழுது இந்திய தேர்தல் ஆணையம் மின் வாக்கு இயந்திரத்தில் 49 ஓவுக்கு ஒரு தனி பட்டனை வேட்பாளர் பட்டியலுடன் இணைப்பது குறித்து பரிசீலித்து வருகிறது. அவ்வாறு நடக்கும் பட்சத்தில் மிகவும் ரகசியமான வாக்கு முறையில் இதுவும் வந்து விடும். மக்களும் எந்தவிதமான பயமின்றி மிகவும் எளிதாக இந்த பிரிவை பயன்படுத்தலாம்.

இந்த முறை (49 ஓ) வருவது ஒருபுறம் இருக்கட்டும். இதனை பயன்படுத்தினால் அரசியல் சீரடையும் வாய்ப்பு ஒருபுறம் இருக்கட்டும். எல்லா தேர்தல்களிலும் தேர்தலை புறக்கணிக்காமல் வாக்களிக்கும் ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் சிறிது சிந்தித்து வாக்களிப்பது மிகவும் அவசியம். தன் ஜாதி, தன் மதம், தன் கட்சி என்று பாகுபாடு பார்க்காமல் சிறந்த வேட்பாளரை தேர்ந்து எடுப்பது மிகவும் அவசியமான ஒன்று. ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சிக்கு இதுதான் தேவை. அதனால் கண்டிப்பாக ஓட்டு போடுவோம், போடுகின்ற ஓட்டை திறமையான நேர்மையான சேவை எண்ணம் கொண்ட நல்ல வேட்பாளருக்கு போடுவோம்.