வியாழன், 22 ஜூன், 2023

தவமின்றி கிடைத்த வரம்

என்னுடைய தந்தை, பணி நிமித்தமாக பெரும்பாலும் வெளியூரில் இருந்த காரணத்தால் அம்மா, அக்கா, தங்கை என்று இந்த மூன்று பெண்களுடன்தான் என்னுடைய பால்ய வாழ்க்கை அமைந்தது. அதுபோல் தற்பொழுதும் மனைவி, இரு பெண் குழந்தைகள் என்று மூன்று பெண்களுடன் என்  வாழ்க்கை இனிதாகவே சென்று கொண்டிருக்கிறது.

நெருதா, என் இரண்டாவது மகள். 22 ஜூன் 2023 அன்று 5 வது பிறந்தநாள் காணும் எனது மகள் குறித்ததொரு நினைவோட்டம். மனித வாழ்வில் சுயமாக சிந்தித்து செயலாற்றும் பருவம் வருவதற்கு முன்னான காலகட்டம் மகத்தானது. நமக்கு நினைவில்லாத நமது அந்த குழந்தை பருவத்தை நம் குழந்தையின் வழியாக நாம் கண்டடைகிறோம்.

10 வருடங்களுக்குமுன் மஹதியின் குறும்புகள், மழலையை ரசித்துக்கொண்டிருந்த நான், தற்பொழுது நெருதாவின் மூலம் இரட்டிப்பு மகிழ்ச்சியைப் பெற்றுக்கொண்டிருக்கிறேன். நெருதா, இளையமகள் ஆதலால், அடம் அதிகம், சேட்டை அதிகம், அழுகை அதிகம், சிரிப்பு அதிகம். பெரும்பாலும் மஹதியை ஒத்திருந்தாலும், சிற்சில வேறுபாடுகளையும் கவனிக்க முடிகிறது. சரியாக 5 வருடங்களுக்கு முன் இதேநாள், பெங்களுருவில் அதிகாலையில்  நான் பார்த்து மகிழ்ந்த பிஞ்சுவின் முகம் அப்படியே மனதில் இருந்தாலும், இந்த ஐந்து வருடங்களின் மாற்றங்களையும் உணரமுடிகிறது. உலகிலேயே மிருதுவானது குழந்தையின் ஸ்பரிசம், அழகானது மென்சிரிப்பு மற்றும் வேறெங்கும் உணரமுடியாதது அந்த மழலையின் நறுமணம்.

பொம்மைகள், குழந்தைகளுக்கு விளையாட்டு பொருள் மட்டுமல்ல, அவர்களுடைய ஆராய்ச்சி பொருளும் அதுதான். பொம்மையை பிரித்து பார்க்க முயல்வது குழந்தைகளின் இயல்பு. ஆனால் பெற்றோர் கோபப்படுவார்கள், ஏனென்றால் அது அவர்களுக்கு செலவு. நெருதா பொம்மையை உடைத்தபோதெல்லாம், அவள் அக்கா மஹதியின் மேல் பழி போட்டாள். ஒரு நாள் அவளிடம் கேட்டேன், "மக்ளே, எதுக்கு நீ உடைச்சிட்டு அக்கா மேல பழி போடுற". அதற்கு அவள் "ஏன்னா, நீங்க திட்டுவீங்க, அதான் அக்காமேலே பழி போடுறேன்" என்றாள். குழந்தைகளின் பொய்கள் கூட மிக அழகானவை.

மொழியின் இலக்கணம் நாம் அறிவோம். நாம் பேசுவதைக் கேட்டு, சொல்வதைக் கேட்டு பேசிப்பழக ஆரம்பிக்கும் குழந்தைகள் இலக்கணம் அறியாது. கடந்த காலத்திற்கு செல்ல நினைப்பதும், எதிர்காலத்திற்கு செல்ல விளைவதும் நமது கனவுகளில் ஒன்று. ஆனால், குழந்தைகள் தங்களுடைய மழலை மொழியால் மிக எளிதாக காலத்தை முன்னும் பின்னுமாக கலைத்து  போடுவதில் வல்லவர்கள். எங்க போயிட்டு வந்தன்னு பாட்டி கேட்டபொழுது "நாளைக்கு ஜூஸ் குடிச்சிட்டு வீட்டுக்கு வந்தோம்" என்று நெருதா சொன்ன பொழுது டைம் மெஷினை தேடினேன் நான். குழந்தைகள் இலக்கணம் மீறிய கவிதைகள்.

நிலவைக் காட்டி குழந்தைகளுக்கு கதை சொல்வது வழக்கமான ஒன்றுதான். இந்த எல்லையில்லா பிரபஞ்சத்தை குறித்த சுவாரஸ்யங்களும் கதைகளும் எண்ணிலடங்காதவை. ஒருநாள் இரவு நிலா, நட்சத்திரங்களை நெருதாவுக்கு காட்டிக் கொண்டிருக்கையில் "அப்பா, அந்த ஸ்டார் ஓடி போயிடிச்சு" என்று குதூகலித்தாள் என் மகள். என்னவென்று கூர்ந்து பார்த்தால் அது ஒரு ஆகாய விமானத்தின் ஒளி.

அர்த்தம் புரியாமல் குழந்தைகள் பேசுவது வாடிக்கை, நமக்கு அது வேடிக்கை. தூங்குவதற்கு முன் "அப்பா, ஸ்டோரி கேளுங்க" என்று நெருதா கூறியபொழுது  'ஓ, பேபி நமக்கு கதை சொல்ல போகுது' என்று ஆவலாக கேட்க தயாரானேன், "அவள் கதை கேட்கிறாள், சொல்லுங்க" என்று அவள் அம்மா புரிய வைத்தாள். நான் என்னதான் விதவிதமாக கதை சொன்னாலும் சில வேளைகளில் அவள் சொல்லும் கற்பனை கதைகள் அவ்ளோ அழகாக இருக்கும்.

ஒருநாள்  தூங்கிக்கொண்டிருந்த பொழுது "அப்பா, எரிங்க" என்ற குரல் கேட்டு எழுந்தேன். எழுந்திருங்க எனபது மருவி எரிங்க என்றானதைக் கேட்டு சிரித்தேன். இதுகூட பரவாயில்லை, "நான் எரிஞ்சிட்டேன்" என்று அவள் சொல்லும்பொழுது இன்னும் நன்றாகவே இருக்கும்.

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

திருவள்ளுவரின் என்னவொரு அனுபவமிக்க வரிகள்!

மூஞ்சல் (ஊஞ்சல்), கோலிஸ்  (போலீஸ்), உருவி (உதவி), உருண்டி (உருண்டு)...என்று வார்த்தைகளை மாற்றி சொல்லும்பொழுது எதைச் சொல்கிறாள் என்று கண்டுபிடிப்பது அவள் அக்காவுக்கும் அம்மாவுக்கும் எனக்கும் நல்ல விளையாட்டு.

பள்ளி முடிந்து வந்தவுடன் A, B, C, D அல்லது பள்ளியில் நடந்த விஷயங்கள் என்று ஏதாவது சொல்லுவது நெருதாவின் வழக்கம். 'இதையெல்லாம் யாருகிட்ட கத்துக்கிட்ட' என்று கேட்டபோது "நானா கத்துக்கிட்டேன்" என்று பதில் வந்தது. 'ஆமால்ல', நாம என்னதான் கற்றுக்கொடுத்தாலும் குழந்தைகள் அவங்களா கத்துக்கிறதுதான் அதிகம்.

ஒருமுறை நெருதாவுடன் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபொழுது, வானத்தை பார்த்துக்கொண்டே கூறினாள் "நாம பறக்குறோம்" எப்படி என்று கேட்டதற்கு, நகர்ந்துகொண்டிருக்கும் மேகங்களை சுட்டிக் காட்டினாள். இதற்கு என்ன அர்த்தம் என்று இன்றும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

'மேக் பண்றது', நெருதா அடிக்கடி பயன்படுத்தும் சொல். அவளுக்கு பிடித்தமான ஒரு வீடு, ஒரு மரம், ஒரு சூரியன் சேர்ந்த படத்தை வரைந்து "அப்பா நான் மேக் பண்ணியிருக்கேன்" என்பாள். விளையாடும்பொழுது "அப்பா நான் கிட்சன் மேக் பண்ணிருக்கேன்" என்று சொல்வாள்.

நாம் பேசும் சொற்களை கவனித்து அப்படியே பயன்படுத்துவது குழந்தைகளின் வழக்கம். "கடுப்பாகுது" நெருதா அடிக்கடி பயன்படுத்தும் அப்படியான ஒரு வார்த்தை. நாங்கள் ஜெர்மன் கதைகளை பேசும்போது உண்மையிலேயே கடுப்பாவாள். என்னை ஏன் கூட்டிப்போகவில்லை என்று சண்டையிடுவாள். நீ பிறப்பதற்கு முன் உன்னை எப்படித்தான் கூட்டிப் போவது. நீ வளர்ந்த பிறகு எங்களையும் சேர்த்து கூட்டிப்போ என்று சமாளிப்போம்.

எறும்பு, தேனீ போன்ற சிறு சிறு பூச்சிகளை கண்டால் தெறித்து ஓடுவாள். ஒரு முறை எறும்பு கடித்துவிட்டதால் சத்தமிட்டுக்கொண்டே ஓடி வந்தவள், "அப்பா, கடிச்சு விடுங்க" என்று கேட்கவும், நான் முழிக்கவும், வழக்கம்போல் அவள் அம்மா "சொறிஞ்சு விடுங்க" என்று சொல்ல, 'ஓ, அதைத்தான் கேட்டாளா' என்று சிரித்துக்கொண்டேன்.

அலுவலக பணியில் ஒரு பெரும்கூட்டத்தையே கட்டி மேய்க்க வேண்டி இருந்ததால் வீட்டில் இரு குழந்தைகளிடம் செலவிட நேரம் இல்லாமலே இருந்தது. இந்நிலையில் மூத்த பெண் மஹதிக்கான சிகிச்சைக்காக ஒரு வாரம் பாண்டிச்சேரி செல்ல திட்டமிட்டோம். 2022 தீபாவளியை ஒட்டி இந்த பயணம் அமைந்தது. தினம் காலை லாலேந்தல் வீதியில் இருக்கும் கண் பார்வை முன்னேற்ற மையத்திற்கு மஹதியும் அவள் அம்மாவும் சென்றுவிட, நானும் நெருதாவும் பாண்டிச்சேரி கடற்கரை வீதியில் நடை பயணம் செய்வோம். நெருதா சொன்ன கதைகள், கேட்ட கேள்விகள் என்று அவளின் குழந்தைதனத்தை  நன்றாக புரிந்த கொண்ட நாட்களாக அமைந்தன. 'அவள், இவ்ளோ பேசுவாளா' என்று ஆச்சரியமடைந்த நாட்கள்.

கடற்கரையின் ஒரு ஓரத்தில் இருந்த குகையை பார்த்துக்கொண்டே, "இதை யார் கட்டியிருப்பார்கள்" என்று நான் கேட்க, சற்றும் தாமதிக்காமல் "கரடிதான் கட்டியிருக்கும்" என்று பதில் வந்தது. 'அது என்ன பில்டிங்', 'இந்த தாத்தா (காந்தி சிலை) யாரு', 'இந்த நண்டெல்லாம்  எங்கே போகுது' என்று கேட்டுக்கொண்டே வருவாள். பலூன் பார்த்துவிட்டால் அடம்பிடிப்பாள்.

இந்த பாண்டிச்சேரி பயணத்தில் என் அப்பா, அம்மா, என் மனைவியின் அப்பா இணைந்துகொள்ள, அனைவருக்கும் மறக்க முடியாத சுற்றுலாவாக அமைந்தது. பாண்டிச்சேரியின் சிறப்புகளில் ஒன்றான போன்லெ குல்ஃபீ நெருதா, அவள் அக்கா மற்றும் அம்மாவுக்கு மிகவும் பிடித்து போனது. பாரதியார் நினைவில்லம், ஆரோவில், பொட்டானிக்கல் கார்டன், பாரதி பூங்கா, தினமும் கடற்கரை என்று நெருதாவின் மழலை மொழிகளை கேட்டுக் கொண்டே எல்லா இடங்களையும் கண்டு களித்தோம்.

குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுப்பது மிகவும் கடினமான வேலை. நெருதா அவளுக்கு பிடித்தமான உணவை மட்டும் உண்பதில் மிகவும் பிடிவாதமானவள். முறுகலான தோசை விரும்பி சாப்பிடுவாள். "பசிக்குது, எதாவது  கொடுங்க" என்று கேட்கிறாள் என்றால் வழமையான உணவை தவிர்த்து சாக்லேட், பிஸ்கட் போன்ற வேறு ஏதோ எதிர்பார்க்கிறாள் என்று அர்த்தம். சில நேரங்களில் எனக்கு ஜங்க் ஃபுட் வேணும் என்று கேட்டு வாங்கி உண்பாள். குழந்தைகளின் சாப்பாட்டு விருப்பங்கள் மாறிக்கொண்டே இருக்கும். தற்பொழுது பூரி விரும்பி சாப்பிடுகிறாள்.

சின்ன பெண்ணை 'பேபி' என்று அழைப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அதை தேவைக்கு ஏற்ப எடுத்துக்கொள்வாள். அக்காவை கொஞ்சாமல்  தன்னை மட்டுமே கொஞ்ச வேண்டும் என்று எதிர்பார்க்கும்பொழுது 'பேபி' என்று கூறுவதை மிகவும் விரும்புவாள். "பேபி, தனியா போகாத, அக்காகூட சேர்ந்து சைக்ளிங் போ" என்று கூறினால், "நான் ஒன்னும் பேபி இல்லை, நான் தனியாத்தான் போவேன்" என்று பதில் வரும். சில சமயங்களில், "நான் வளர்ந்துட்டேன், பேபி சொல்லக் கூடாது" என்று மறுப்பும் வரும்.

'கண்ணம்மா, கண்ணம்மா அழகு பூஞ்சிலை' என்ற பாடல் நெருதாவுக்கு  மிகவும் பிடித்தமான பாடல். அடிக்கடி விரும்பி கேட்பாள். தன்னைத் தவிர யாரையும் கொஞ்சக்கூடாது என்பதன் காரணமாக சிறுகுழந்தைகளுடன்  விளையாட மறுப்பாள். அதையும் மீறி, தன் வயதை ஒத்த அத்தை மகன் யுகனை பிடிக்கும் என்பதால் அவனுடன் விளையாடுவாள். அம்மா அப்பா சொல்லைக் காட்டிலும் அக்காவின் சொல்லுக்கு முக்கியத்துவம் கொடுப்பாள். என்னதான் அவர்கள் இருவரும் சமயங்களில் அடித்துக்கொண்டாலும் பாசக்கார சகோதரிகள்தான்.

'ஊருக்கு போகணும், மண்ணுல விளையாடணும்', நெருதாவோட ஆசைகளில் ஒன்று. வீட்டுக்குள்ள மண்ணு வரக் கூடாது, ரோட்டுல மண்ணு இருக்கக் கூடாதுனு, மனுஷன் எல்லா இடத்தையும் காங்கிரீட் காடுகளாக மாற்றிக்  கொண்டிருக்கிறான். இப்போதாவது, 'சாண்ட் பிட்'  என்று ஒரு இடத்தை உருவாக்கி குழந்தைகளை விளையாட விடுகிறோம். இன்னும் சில தசாப்தங்கள் கடந்தால், 'இதுதான் மண்ணு' என்று மியூசியம் சென்றுதான் பார்க்க முடியும் என்று தோன்றுகிறது. உசரவிளை தாத்தா வீட்டில் மண்ணில் விளையாடுவது நெருதாவுக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு. நெருதாவுக்கு தண்ணீரை கண்டால் பயம். கடந்த விடுமுறையில்  தேரிமேல்விளை தாத்தா தோட்டத்து 'பம்ப்-செட்' குளியலில் போனது அந்த பயம்.

கொரோனா காலத்தில் நெருதாவை நர்சரி பள்ளியில் சேர்த்தோம். ஒரு வருடம் முழுவதும் பள்ளிக்கு போகாமலேயே மடிக்கணிணியில் பாடம் படித்தாள். பள்ளிக்கு நேரிடையாக 'எல் கே ஜி' முதல் சென்றாள். பள்ளியில் ஆங்கிலம், வீட்டில் தமிழ் என்று சில நாட்கள் குழம்பியே போனாள். இப்பொழுது தேறிவிட்டாள் என்றாலும், ஆங்கில வார்த்தைகளை தமிழ் என்று சொல்வதும், தமிழ் வார்த்தைகளை ஆங்கிலம் என்று நினைப்பதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. சில சமயங்களில் தமிழ் வார்த்தைகளை, "அப்பா, இது கன்னடாவா" என்றுகூட கேட்கிறாள்.

ஸ்கூல் பஸ்சில் ஜன்னலோர இருக்கையை தேடி உட்காருவது நெருதாவின் வழக்கம். அப்பா காரில் நான்தான் முன்னாடி இருப்பேன் என்று எப்போதும் அடம். வீட்டில் இளைய பிள்ளை எல்லாவிஷயத்திலும் அடம்பிடிப்பது நாம் கொடுக்கும் இடம்.

ஒருநாள், மறுநாள் நடக்கவிருந்த உறவினரின் திருமணத்திற்காக அம்மாவும் அக்காவும் மெஹெந்தி போட்டுக் கொண்டிருந்தார்கள். நெருதா காத்துக்கொண்டிருந்தாள். நான் போட்டுவிடுகிறேன் என்று கூப்பிட்டேன். அதற்கு அவள் "பரவாயில்லை, அப்பா கேவலமா வரைவீங்க, நான் அம்மாகிட்ட போட்டுக்கிறேன்" என்று நழுவி விட்டாள்.

இரண்டு பெண்கள் கொண்ட தந்தைகளை கேட்டுப் பாருங்கள். மூத்த பெண் பேசாமலே கொல்வாள், இரண்டாமவள் பேசியே கொல்வாள். எப்படி இருந்தாலும் இரு பெண்களின் தகப்பன் என்றுமே ராஜாதான்.

'உனக்கு  அப்பா பிடிக்குமா, அம்மா பிடிக்குமா', எல்லா குழந்தைகளிடமும் கேட்கப்படும் கேள்வி. 'எனக்கு அப்பாவையும் பிடிக்கும். அம்மாவையும் பிடிக்கும்' என்று கவனமாகவே பதிலளிப்பாள் நெருதா.

'நீ வளர்ந்து என்னவாக போறே' எல்லா குழந்தைகளிடமும் கேட்கப்படும் மற்றொரு கேள்வி. இந்த கேள்விக்கான பதில் மாறிக் கொண்டே இருக்கும். குழந்தைகள், தான் பார்த்து ஆச்சர்யப்படும் நபர்களை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்வார்கள். டீச்சராக வேண்டும் என்பதுதான் குழந்தைகளின் முதல் ஆசையாக வரும். 'நான், ஹார்ட் டாக்டர் ஆவேன்' என்பது நெருதாவின் குறிக்கோள்களில் ஒன்று. காரணம் கேட்டால், "ஹார்ட் இருந்தாதான் எல்லாரையும் லவ் பண்ண முடியும்" என்று விளக்கம் வேறு கொடுப்பாள்.

அவரவர் குழந்தை, அவரவர்களுக்கு தங்கம். குழந்தையின் செயல்பாடுகள், பேச்சுகள், அறியாமையின் வெளிப்பாடுகள். சிலசமயம் அதி புத்திசாலித்தனமாக இருக்கும், சிலசமயம் வேடிக்கையாக இருக்கும். குழந்தைத்தனத்தை ரசியுங்கள். மத்தபடி, அவர்களின் வருங்காலம் அவர்கள் கையில். அவர்களுக்கு நல்வழிகாட்டுவது மட்டும்தான் நம் வேலை.

முத்தாய்ப்பாக, சீலே நாட்டோட தேசியக் கவி, நோபல் பரிசு பெற்ற மக்கள் கவிஞர் பாப்லோ நெரூடாவின் கவிதை வரிகள் என் சின்ன கண்ணம்மா நெருதாவிற்காக...

 <---

நீ ஒரு கடல் ரோஜா, கோமேதகம், அல்லது
தணலாய்ப் பெருகும் செம்மலர்களால் ஆன அம்பு என்பதற்காக,
நான் உன்னை நேசிக்கவில்லை.

ரகசியமாக, நிழலுக்கும் ஆன்மாவுக்கு இடையிலாக,
குறிப்பிட்டப் புரியாத விஷயங்களை ஒருவன் நேசிப்பதைப் போல,
நான் உன்னை நேசிக்கிறேன்.

ஒரு செடி மலர்ந்திடாது ஆனால் மறைவாக, தனக்குள் மட்டும், பூக்களின் ஒளியைக் ஏந்திக் கொண்டிருப்பதைப் போல
நான் உன்னை நேசிக்கிறேன்.

பூமிக்குள் இருந்து கிளம்பும் அந்த இறுக்கமான நறுமணமாக
என் உடலுக்குள் மங்கலாக வசிக்கும், உன் அன்புக்கு நன்றி.

நான் உன்னை நேசிக்கிறேன், எப்படி, அல்லது எப்போது,
அல்லது எங்கிருந்து என்பதை அறியாமல்.

நான் நேரடியாக உன்னை நேசிக்கிறேன் சிக்கல்களோ செருக்கோ இன்றி
நான் இவ்வாறாக உன்னை நேசிக்கிறேன் ஏனெனில் வேறெவ்வாறாகவும் எனக்கு நேசிக்கத் தெரியவில்லை,

இந்த வகையைத் தவிர்த்து வேறெப்படியுமின்றி,
வெகு நெருக்கத்தில் எனது மார்பின் மேலுள்ள உனது கரம் என்னுடையதாக,
வெகு நெருக்கத்தில் உன் கண்கள் எனது கனவுகளுடன் மூடிக் கொள்ள.

 --->

என்னுடைய வாழ்வினை மேலும் அர்த்தப்படுத்திக்கொண்டிருக்கும், எனது ரெண்டாவது மகள் நெருதா எக்குறையுமின்றி பல்லாண்டு வாழ இத்தந்தையின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

திங்கள், 21 நவம்பர், 2022

Prathap Singh M

Prathap Singh M (05-Apr-1982 to 20-Oct-2022)

 


In March 2022, when I (Bhupesh) got a call from Prathap, I was happy as usual to receive since he was the only friend who call frequently to keep the friendship vibes alive. But when I heard the news from his mouth that he was under treatment in a hospital in Vellore, I was upset since this should not have happened for such an ideal guy.

We both are from Kanyakumari district studied together in Dr. Sivanthi Aditanar College of Engineering 1999-2003 batch. We were roommates in the hostel and I spent most of my college life with his company. Prathap was an incredibly talented guy who enjoyed the college life along with the studies. We were a gang of six I, Prathap, Sundaraj, Mahendran, Syed and Selva roamed together and had lots of fun during college days. I am a guy with limited friendship since I jell with only people of my frequency, but Prathap was an easy-going guy who maintained friendship with everyone in the college.

Prathap possessed a smiling face, usually never got angry and very patient listener, so everyone liked him. He was very bold too and we witnessed this on few occasions during the college days. He was very particular about his dressing style and always come to classroom with shirt tuck it in. He used to maintain his body well. He was famous for his one liner witty counter dialogues and he delivered those comments with an innocent face without any smile. This nature brought him female friends too.

During exam days, everyone studies overnight with less sleep. But Prathap was as usual even during the exam times and several times I witnessed he covered only 50% of the syllabus, attended the exam and still scored 75% of marks. This was due to whatever he studied he was very thorough on that subject. He was one of the favorites of college professors.

We have done the final year project together and he has done major part of the project single handedly alone with microcontroller programs. He was a particularly good programmer but not much interested in the software programming side and loved to work in the electrical core area.

After engineering, we came together to Bangalore in search of job. Normally, guys from Kanyakumari district are familiar with frequent rains and there was no surprise we both liked this city for the same reason.

I entered software industry and he pursued his career in core electrical industry. We had lots of good times as roommates in Indiranagar. He was an ardent fan of Kamal Hassan and the movie ‘Panchatanthiram’ and ‘Anbe Sivam’ played very often in room. He was very fond of Kerala style food. We had been few trips with friends to places like Goa, Rameshwaram. I never forget the fun we had during his office annual day.

We used to discuss on politics and religious thoughts and this was a custom from college days. He respected other beliefs, never hurt other sentiments even though he was a sincere follower of Christianity. He was proud of an Indian citizen and in fact he tried for jobs in Indian air force in the beginning of his career.

His Bangalore life was short since he moved to Saudi Arabia and worked there for a long time. He brought me a Sony still camera from there which picturized my memories before the smartphone arrived. He was the first person got married (Nov’ 2008) in our gang and we attended his marriage function in Yettacode.

People of Kanyakumari district always longing to be in same weather and he got to know that Brunei country is having similar weather and he moved there after the birth of his first son. There he worked for a concern for few years and then he started his own startup called 'Daniel Engineering and Supply Sdn Bhd'. Initially he struggled for a year to brought up his startup and he succeeded later as an entrepreneur. He was the backbone of all budding technicians and engineers in his company. He had dreams to open the branch of his company in Chennai.

He was a good father and always worked hard for the betterment of both of his Sons. Even though we settled in different countries we were in constant touch and maintained the friendship. He loaned me when I purchased an apartment in Bangalore. We met at times in native whenever he visited India during vacation. Corona stopped him to visit for a long time.

When I and Subburajan went to meet Prathap in Vellore in April 2022, we shocked on seeing him. He was a physically fit guy, but the disease deteriorated him very badly. He was confident of recovery and his voice was sound as usual irrespective of his physical condition. We spent a day with him and returned to Bangalore with saddened heart and repeatedly telling ourselves this should not have happened to him.

3 months back Prathap came to Bangalore to continue his chemo treatment. This was the place he started his career and no one imagined that this would be the last place where he dwelled. Those days were painful and I have seen his sufferings with uncontrollable tears. His wife and his sons took care of him very well and he ordered online all items whatever required for their sons.

I suggested him to go native and continue the treatment from there. But he does not want anyone to show sympathy on him. He was a successful professional among his village people. He wanted to recover and go back to native as the same person perceived by his village people.

One day, we talked about college days and professional journey. He talked about the varieties of food he had in Saudi and he felt bad that he was not able to have anything now. We had spoken lot of usual things like politics, spirituality and he was happy that day.

The last few weeks he suffered very badly. He said that he was feeling pain even in his bones. He was not able to have food due to vomiting/digestion issues. His body weight was drastically reduced. He was unable to speak properly. He faced problem in walking with breathing issue, so we took him to the hospital and admitted for the recovery. The very next day he called me and said I am ok now. His voice was sound this time and I was happy that he will recover and be with us for more years.

On 20th October 2022 evening 9:00 PM, I got the news from his wife that my friend was no more. It was a heartbroken moment. It is a huge loss and he left so soon leaving another 50% of his life as an entrepreneur, son, husband, father and friend.

He was a man of positivity, and he was hopeful of his recovery and come back to normal life even at the last moment. I received call from many college mates on the very next day who talked with me after 2003, that showed his spread of love among the people.

It is an unbearable loss for his family. I lost my best friend, life without such a caring friend is something missing. We lost a wonderful soul due to a deadly disease and no clue from where it was occurred. I wish such disease should not come even for our enemy.

Prathap, your goodwill will save your family.

Rest in peace dear friend.

ஞாயிறு, 2 டிசம்பர், 2018

கொடியில் காயும் பொம்மைகள்


வீட்டிலிருந்த பஞ்சு பொம்மைகள் அனைத்தையும் எடுத்து நீரில் ஊறவைத்துக்கொண்டிருந்தேன்.

அதைப் பார்த்துக்கொண்டிருந்த என் பெரிய மகள் என்னிடம் கேட்டாள் "அப்பா, ஏன் பொம்மை எல்லாம் தண்ணியில கழுவுறீங்க".

"மக்ளே, இதெல்லாம் நீ வைச்சு விளையாடின பொம்மைகள், ரொம்ப நாளா பெட்டியில் இருந்ததால தூசி அடைஞ்சிருக்கும். கழுவி காய வச்சு குட்டி பாப்பாவுக்கு விளையாட கொடுக்கலாம்." என்றேன்.

"தங்கச்சி பாப்பாவுக்கு புது பொம்மை வாங்கி கொடுக்கலாம்ல." என்று கேட்டாள்.

"சரிதான், ஆனால் அக்காவோட பொம்மையை வச்சு விளையாடுறதுலதான் தங்கச்சிக்கு சந்தோசம்" என்று சமாளித்தேன்.

"அப்போ எனக்கு புது பொம்மை வாங்கி கொடுத்திருங்க" என்று சிரித்தாள்.

அவளை திசை திருப்பும்பொருட்டு, "பாப்பா என்ன செய்துட்டு இருக்கா-னு பாத்துட்டு வா" என்று அனுப்பினேன்.

ஓடிச்சென்று  உடனே திரும்பி வந்தவள்,
"அப்பா, பாப்பா கை சூப்பிக்கிட்டு இருக்கா" என்றாள்.

"அப்பா, குட்டி பாப்பா எவ்ளோ சேட்டை பண்றா, அம்மா சரியா தூங்ககூட முடியாம பாப்பாவை கவனிச்சுக்கிறாங்க, நானும் இதே மாதிரிதான் குட்டி வயசுல இருந்தேனா?" என்று வினவினாள்.

"ஆமா மக்ளே, எல்லா குழந்தைகளும் சின்ன வயசுல அப்படிதான். இப்போ அம்மாவும் நானும் எப்படி உங்களைப் பாத்துகிறோமோ, அதேமாதிரிதான் நான் குழந்தையா இருந்தபோது உன்னோட தாத்தாவும் பாட்டியும் அக்கறையா என்னை பார்த்திருப்பாங்க. இந்த உலகத்துல அம்மா அப்பாவோட அன்பாலும் அரவணைப்பாலும் வளர்ற எல்லா குழந்தைகளும் கொடுத்து வச்சவங்க."

ஒன்றாவது வகுப்பு படிக்கும் பிள்ளைக்கு என் விளக்கம் புரிந்தும் புரியாமலும் இருக்க, அதைக்கடந்து அடுத்த கேள்விக்கு தாவினாள் என் மகள்.

"அப்பா, தங்கச்சிக்கு ஏன் நெருதா-னு பேர் வச்சிங்க?"

"பாப்லோ நெரூடா-னு ஒரு கவிஞர் இருந்தார். சீலே நாட்டோட தேசியக் கவி. நோபல் பரிசு பெற்ற மக்கள் கவிஞர். அவரோட பெயரை அடிப்படையா வைச்சுதான் இந்த பெயர்" என்று சொல்லிவிட்டு,

"ஏன், பெயர் நல்லா இல்லையா?" என்று கேட்டேன்.

"நல்லாத்தான் இருக்குப்பா, ஆனா என்பெயரை ஒட்டி பெயர் வச்சிருக்கலாம்ல" என்று கேட்க,

"மக்ளே, உனக்கு அவள் தங்கை என்றாலும், நீங்கள் இருவரும் தனித்துவமானவர்களாகத்தான் வளரணும்" என்றேன்.

"அப்படினா?"

"நீ மஹதி, மகத்தானவள், ஆளப்பிறந்தவள்.
அவள் நெருதா, நெருப்பானவள், ஆக்கப்பிறந்தவள்."

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

மைனா

இந்தியாவில் எமர்ஜென்சி நடந்து கொண்டிருந்த நேரம். அது ஒரு பள்ளி விடுமுறைக் காலம். தங்கம், தனது தம்பி சேகரை தேடிக்கொண்டு புளியந்தோப்புக்கு வந்தாள். அங்குதான் வழக்கமாக சேகர் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருப்பான். ஆனால் அங்கு யாரும் இல்லாததால் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு திரும்பினாள்.

"ஏட்டி தம்பி எங்க" என்று கேட்ட தாய் செல்லம்மாவிடம் "அவன் எங்க போனான்னு தெரியலம்மா" என்று பதில் சொல்லிவிட்டு தாய்க்கு சமையலில் உதவி செய்ய ஆரம்பித்தாள். அவள் தந்தை சின்னையா சந்தையில் மாம்பழங்களை விற்றுவிட்டு இரவு உணவுக்காக வௌமீன் வாங்கி வந்திருந்தார். துருவிய தேங்காயுடன் மிளகு பொருட்களை சேர்த்து தாய் கொடுக்க, மீன்கறிக்காக அம்மியில் வைத்து அரைக்கத் தொடங்கினாள் தங்கம். அரிவாள் மனையில் மீனின் செதில்களை நீக்கிவிட்டு, சிறு சிறு துண்டுகளாக வெட்டி நன்கு கழுவி எடுத்துக்கொண்டு வந்தாள் செல்லம்மா. சிறிது நேரத்தில் மீனின் தலை, புளி மற்றும் தேங்காய் கலந்த குழம்பும், மீனுடல் துண்டுகளுடன் மாங்காய் துண்டுகள் மற்றும் அரைத்த தேங்காய் சேர்த்து வைத்த கூட்டும், சம்பா அரிசியில் வடித்த சோறும் தயாரானது.

"பசிக்குது, சோறு போடும்மா" என்றாள் தங்கம். "பொறுடி, தம்பி வரட்டும்" என்று தாய் பதிலுரைத்தாள். சிறிது நேரத்தில் சேகர் இரு கைகளையும் சேர்த்து பொத்தியபடியே வந்தான். அவனை கோபமாக திட்ட எழுந்த தங்கம், அவன் வந்த கோலத்தை பார்த்து ஆர்வமாக "தம்பி, என்னலே அது" என்று கேட்டாள். அவன் நடு வீட்டிற்குள் வந்து "அக்கா, விளக்க எடுத்துட்டு வா" என்றவுடன் தங்கம் ஓடிப்போய் மண்ணெண்ணெய் விளக்கை எடுத்து வந்தாள். விளக்கின் அருகில் வந்து, கைகளை விரித்து சிறிய பறவைக் குஞ்சு ஒன்றை தரையில் வைத்தான்.

தங்கம் கண்கள் விரிய ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டே "ஏல எங்க எடுத்த, என்ன குஞ்சு இது" என்று கேட்டாள். அதற்கு சேகர், "நம்ம ராஜனோட அண்ணன் இருக்கான்ல, அவன் நொங்கு பறிக்க பனைமரத்துல ஏறுனான். அங்க கூட்டுல இந்த குஞ்சு இருந்துச்சு, அதை எடுத்துட்டு வந்தான், நான் ஆசைப்பட்டு வாங்கிட்டு வந்தேன்". அவர்கள் தந்தை வந்து பார்த்துவிட்டு, "மக்ளே, இது மைனா குஞ்சு, மைனாவை வீட்ல வளக்குறது சரியா வராது, ஏழு தத்து கழிஞ்சாதான் அது நிலைக்கும், பேசாம திரும்ப மரத்துல விட்ருங்க" என்று சொன்னார்.

சேகர் அப்பாவின் பேச்சைக்கேட்டு கலவரமடைந்து அம்மாவை பார்க்க, "இப்போ இங்க இருக்கட்டும், காலைல பாத்துக்கலாம், எல்லாரும் சாப்பிட வாங்க" என்று அம்மா கூறியது ஆறுதலாக இருந்தது. பனை ஓலையால் வேயப்பட்ட சிறிய பெட்டி ஒன்றை எடுத்து, காற்று புகும் வகையில் கவிழ்த்து மைனாக்குஞ்சை மூடி வைத்துவிட்டு சாப்பிட சென்றான் சேகர்.

வேகவேகமாக சாப்பிட்டு முடித்து வந்த சேகருக்கு, மைனாக்குஞ்சுக்கு என்ன உணவளிப்பது என்று தெரியவில்லை. அம்மாவிடம் கேட்டான், அம்மா தண்ணீர் மட்டும் வை என்றாள். கொஞ்சம் தண்ணீர் கையில் எடுத்து மைனா குஞ்சு முன் உடைந்த ஓட்டு துண்டு ஒன்றில் ஊற்றி வைத்தான். தான் இடம் மாறி வந்து விட்டதை உணர்ந்து நடுங்கிக் கொண்டிருந்த மைனாக்குஞ்சு தன் மிகச்சிறிய அலகைக் கொண்டு இரு நீர்துளிகளை குடித்தது. அதை கண்டு குதூகலித்தனர் அக்காளும், தம்பியும்.

அடுத்த நாள் காலை, சேகர் அம்மாவின் அறிவுறுத்தல்படி கடைக்கு சென்று இரண்டு மட்டி பழங்களை வாங்கி வந்தான். ஒரு பழத்தில் சிறிது பிய்த்து மைனாக்குஞ்சு முன் வைத்தான். அது ஆர்வத்துடன் கொத்தித் தின்றது. மரக்குச்சிகள் எடுத்து வந்து ஒரு சிறிய கூண்டு செய்து அதனுள் மைனாக்குஞ்சை பாதுகாப்பாக அடைத்துவைத்தான்.

அக்காவும் தம்பியும் அன்று முழுவதும் அந்த சின்னங்சிறிய பறவையின் செய்கைகளை ரசித்தபடியே இருந்தனர். அது 'க்கிவ்', 'க்கிவ்' என்று கத்தியபடியே அவர்கள் கைகளில் ஏறி விளையாடியது. அன்று இரவு வியாபாரம் முடிந்து திரும்பிய சின்னையா அக்காவும் தம்பியும் மைனாக்குஞ்சை கொஞ்சிக் கொண்டிருந்ததை பார்த்தார். ஏதோ சொல்ல வாயெடுத்தவர் பிள்ளைகளின் ஒளி பொருந்திய முகங்களை கண்டு, லேசாக புன்னகைத்துக்கொண்டார். அதன் பிறகு தினமும் சந்தையில் இருந்து வரும்பொழுது வாழைப்பழங்கள் கொண்டு வரத் தொடங்கினார்.

ஒருவாரம் கடந்த நிலையில், மைனாக்குஞ்சு கொஞ்சம் வளர்ந்து விட்டது. அதற்கு என்ன பெயர் வைப்பது என்று அக்காளும் தம்பியும்  குழம்பி போனார்கள். அது 'ஆணா', 'பெண்ணா' என்பதை எப்படி கண்டறிவது என்றும் அவர்களுக்கு தெரியவில்லை. தந்தையிடம் கேட்டான் சேகர், அவர் குஞ்சு பருவத்தில் பாலினம் அறிவது கடினம் என்று கூறினார். இறுதியில் இருவரும் ஒருமனதாக 'கிட்டு' என்று பெயர் சூட்டினார்கள்.

'கிட்டு' என்ற பெயர் அதன் நினைவில் நிற்கும் வகையில் தொடர்ந்து அந்த பெயரிலேயே அழைத்தார்கள். ஒரு மாத முடிவில் ஓரளவு வளர்ந்து, சிறு தொலைவு பறக்கவும் கற்றுக் கொண்டது கிட்டு. கூண்டை திறந்து வெளியே விட்டால் சில நிமிடங்கள் அருகிலேயே பறந்து விட்டு மீண்டும் கூண்டிற்கு வந்து விடும். கிட்டு கூண்டிற்குள் அங்கும் இங்கும் குதித்துக்கொண்டே இருந்ததால் சிறிய கூண்டு போதுமானதாக இல்லை. தந்தையிடம் அடம்பிடித்து பெரிய இரும்பு கூண்டு ஒன்றை வாங்கி கிட்டுவை இடம்பெயர்த்தான் சேகர்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தான் சேகர். இந்த வருடம் அவனுக்கு பள்ளி இறுதி ஆண்டு என்பதால் கவனமாக படிக்க ஆரம்பித்தான். பகல் வேளையில் சேகர் பள்ளிக்கு சென்று விடுவதால் கிட்டுவை கவனித்து கொள்வது தங்கத்தின் வேலை. பள்ளி முடிந்து வந்தவுடன் கிட்டுவுடன் சிறிது நேரம் விளையாடிவிட்டுதான் பாடம் படிப்பான் சேகர்.

'கிட்டு' தற்பொழுது அதன் பெயரை நன்கு உள்வாங்கிக்கொண்டது, கூப்பிட்டவுடன் திரும்பி பார்க்கும். தினமும் காலையில் ஒரு சிறிய மண்பானை மூடியில் தண்ணீர் ஊற்றி வைப்பாள் தங்கம். கிட்டு அதில் நின்று கொண்டு, கால்களை குறுக்கி கழுத்தளவு மூழ்கி சிறகடித்துக்கொண்டே குளிக்கும்.

குஞ்சாக இருந்த பொழுது ஒருமாதிரி சாம்பல் நிறத்தில் தெரிந்த கிட்டு, வளர்ந்த பிறகு ஒவ்வொரு நிறத்தையும் துல்லியமாக பார்க்கும் வகையில் இருந்தது. தவிட்டு நிற உடல், கருமை நிற தலை மற்றும் வால், மஞ்சள் நிற அலகு மற்றும் கால்கள். இது மட்டுமன்றி, கண்களை சுற்றி மெல்லிய மஞ்சள் வளையம், சிறகுகளின் விளிம்பு மற்றும் உள்ளே மெல்லிய வெண்மை நிறம் என இருந்த வண்ணக்கலவையான கிட்டுவை தொட்டு தொட்டு ரசிப்பாள் தங்கம்.

பழங்கள் மட்டுமல்லாமல், கிட்டுவுக்கு நீரில் ஊறவைத்த பொரிக்கடலையை நன்கு மசித்து கொடுப்பாள் தங்கம். கிட்டுவும் மிகவும் ஆர்வத்துடன் உண்ணும். நன்றாக ஆறிய கருப்பட்டி காப்பியும் விரும்பி குடிக்கும் கிட்டு. நன்கு உண்டுவிட்டு, சீரான இடைவெளியில் குட்டித்தூக்கம் கொள்வது கிட்டுவின் இயல்பு. அதன் இரு கால்களிலும் அடையாளத்திற்காக இரும்பு வளையத்தை அணிவித்திருந்தான் சேகர்.

சில மாதங்களுக்கு பிறகு, ஒரு மதிய வேளையில் தங்கம் தாயுடன் சேர்ந்து பசு மாட்டிற்கு புல் பறிக்க தென்னந்தோப்பிற்கு சென்று விட்டாள். வீட்டில் யாரும் இல்லை. பசியை உணர்ந்த கிட்டு 'க்கிவ்' என்று கத்த ஆரம்பித்தது. சிறிது நேரத்திற்கு பிறகு, வீட்டின் அருகில் வரும் பொழுது "அக்கா" என்ற மெல்லிய குரல் கேட்பதை தங்கம் கேட்டாள். ஆனால், வீட்டின் முன்னால் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு கொல்லைப்புறம் போனாள். அவளை பார்த்தவுடன் கூண்டில் இருந்த கிட்டு மீண்டும் "அக்கா" என்று அழைத்தது. ஒருகணம் ஆச்சர்யத்தில் அதிர்ந்து போனாள். உடனே,  சுதாரித்துக்கொண்டு ஓடோடி சென்று கிட்டுவை கையில் எடுத்துக்கொண்டாள்.

கிட்டு முதல் முறை பேசியதை கேட்டு மகிழ்ச்சி அடைந்த தங்கமும் சேகரும் அதற்கு சிறு சிறு  வார்த்தைகளை கற்றுக் கொடுக்க முயற்சி செய்தார்கள். கிட்டுவும் "அக்கா வா", "அண்ணா வா" என்று பேச கற்றுக் கொண்டது. இது மட்டுமல்லாமல், பசித்தால் "காப்பி தா" என்று சொல்லவும் பழகிக்  கொண்டது.

கிளியை பேச வைப்பது மைனாவை பேச வைப்பதை காட்டிலும் எளிது. கிளி, நாம் சொல்வதை திருப்பி சொல்லும் திறமை கொண்டது. ஆனால், மைனா சூழ்நிலைக்கு ஏற்ப தனக்கு தெரிந்ததை பேசும் நுண்ணறிவு கொண்டது என்பதை அக்காவும், தம்பியும் பலவேளைகளில் கண்டு கொண்டார்கள். மேலும், கிளியைவிட மைனா மிகவும் துல்லியமாக பேசுவதையும் கேட்டு வியந்தனர். பெரும்பாலும், அவர்கள் பேசுவதை அவர்கள் குரல் சாயலிலேயே கிட்டு திருப்பிச் சொல்லும். 

ஒருநாள் மாலை வழக்கம் போல் தங்கம் கிட்டுவை திறந்து விட்டாள். இரவு சூழ்ந்த பிறகும், கிட்டு கூடு திரும்பவில்லை. பக்கத்து தோப்புகளில் அக்காவும் தம்பியும் "கிட்டு", "கிட்டு" என்று கத்தியபடியே தேடிப் பார்த்தார்கள். கிட்டு கிடைக்காததால் சாப்பிடாமல் கவலையோடு காத்திருந்தார்கள். தங்கள் வீட்டில் ஒரு உறுப்பினர் போல் ஆகிவிட்ட கிட்டுவை காணவில்லை என்பதையறிந்து "மக்ளே, கவல படாதிங்க, கண்டிப்பா வந்திரும்" என்று தைரியமூட்டினார் சின்னையா.

அடுத்த நாள், அதிகாலையிலேயே அக்காவும் தம்பியும் ஓடோடிச் சென்று கூண்டை பார்த்தனர், கிட்டு இன்னும் வரவில்லை. பகல் முழுவதும் நண்பன் ராஜனோடு சேர்ந்து கிட்டுவை தேடினான் சேகர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. நாய் அல்லது பூனையிடம் அகப்பட்டு இறந்திருக்குமோ என்று பயந்தார்கள் அக்காவும், தம்பியும். "அது நல்லா வளர்ந்துடுச்சு, ஜோடி தேடி போயிருக்கும், அதை மறந்திட்டு வேலைய பாருங்க" என்று ஆறுதல் கூறும் வகையில் கண்டித்தாள் செல்லம்மா.

மறுநாள், இனிமேல் கிட்டு திரும்பி வராது என்று முடிவுடன் பள்ளிக்கு சென்றான் சேகர். பள்ளியில் பாடத்தில் கவனம் செல்லவில்லை. பள்ளி முடிந்து வீடு திரும்பிய அவன், "அக்கா", "அண்ணா" என்று பழகிய குரல் கேட்க கொல்லைப்பக்கம் ஓடினான். தங்கமும் ஓடி வந்தாள். அங்கு வீட்டின் ஓட்டு கூரைமேல் கிட்டு அமர்ந்திருந்தது. பறந்து வந்து சேகரின் தோள் மேல் அமர்ந்து படபடவென சிறகடித்தது. நெடு நாள் பிரிந்திருந்த நண்பனை கண்டுவிட்ட மகிழ்ச்சியில் இருவர் கண்ணிலும் கண்ணீர்த்துளிகள் துளிர்க்க ஒருவர் மற்றவருக்கு தெரியாமல் மறைத்துக்கொண்டார்கள்.

"எங்க போன கிட்டு, நாங்க எவ்ளோ பயந்துட்டோம் தெரியுமா" என்று கேட்ட சேகரை ஏதோ புரிந்தவாறு தலையை ஆட்டியது கிட்டு. "இனிமேல் போகக்கூடாது" என்று கண்டிப்புடன் கூறினாள் தங்கம். அந்த வீடு திரும்பலுக்கு பிறகு கிட்டு வீட்டை விட்டு சென்றதே இல்லை.

கிட்டு தரையில் நடக்கும் அழகே தனி தான். ஓரிரு அடிகள் நடந்து, பின்னர் குதித்து, திரும்பவும் ஓரிரு அடிகள் நடந்து, குதித்து... என்று செல்லும். வெட்டுகிளியை கண்டால் மிகவும் உற்சாகமடையும், பாய்ந்து சென்று வெட்டுக்கிளியை பிடித்து உண்ணும். தலையை மேலும் கீழும் அசைத்துக்கொண்டே விசிலடிப்பது போல் 'கிட்டு' பாடுவதை மொத்த குடும்பமும் சேர்ந்து ரசிப்பார்கள்.

பள்ளி இறுதி தேர்வுகள் முடிந்து விடுமுறை ஆரம்பித்துவிட்டது. நண்பர்களுடன் விளையாட செல்கையில், ஒருசமயம் கிட்டுவையும் கூண்டுடன் எடுத்து சென்றான் சேகர். சேகரின் நண்பர்கள் தங்கள் பெயர்களை சொல்ல, 'கிட்டு' திருப்பி சொல்வதைக் கேட்டு நண்பர்கள் உளமகிழ்ந்து போனார்கள்.

இன்னும் ஒரு சில நாட்களில் தேர்வு முடிவுகள் வர இருந்தன. சேகருக்கு ஒரு பொறி தட்டியது. நாம் ஏன் தேர்வு முடிவுகளை கிட்டுவை கொண்டு அறிய முயற்சிக்கக்கூடாது என்று தோன்றியது. உடனே தன் நண்பன் ராஜனையும் அழைத்தான். தங்கம் இரண்டு சீட்டுகளை எழுதி கொண்டு வந்தாள். ஒன்றில் 'வெற்றி' என்றும் இன்னொன்றில் 'தோல்வி' என்றும் எழுதி இருந்தாள். கிட்டு முன் இரண்டு சீட்டுகளையும் போட்டு முதலில் சேகருக்காக எடுக்கச்  சொன்னாள். கிட்டு ஒரு சீட்டை எடுத்துக்கொடுத்தது. அதை பிரித்து காண்பித்தாள் தங்கம். அதில் 'வெற்றி' இருந்தது. மிகவும் மகிழ்ச்சி அடைந்தான் சேகர். சீட்டுகளை கலைத்து போட்டு மீண்டும் ராஜனுக்காக எடுக்க சொன்னார்கள். கிட்டு எடுத்துக்கொடுத்த சீட்டை காண்பித்தாள் தங்கம். அதில் 'தோல்வி' என்று இருப்பதைக் கண்டு கலங்கி போனான் ராஜன். இதை கவனித்துக்கொண்டிருந்த செல்லம்மா "பறவை சொன்னா சரியாயிருமா, நீ நல்லா எழுதி இருந்தா தோக்க மாட்ட" என்று ஆறுதல்படுத்தினாள். ஆனால், கிட்டு கணித்தது போலவே முடிவுகள் அமைந்தன.

அன்று இரவு நன்றாக மழை பெய்தது. 'கிட்டு' மழையில் நனையக்கூடாது என்பதற்காக கூண்டை திறந்து கிட்டுவை பிடித்து வீட்டிற்குள் கொண்டு விட்டான் சேகர். குளிரின் காரணமாக விடிந்தது தெரியாமல் தூங்கி கொண்டிருந்தாள் தங்கம். "ஏட்டி, எழும்பு, நிறைய வேலை கிடக்கு" என்ற தாயின் குரலை கேட்டு எழுந்தாள். மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்து வீட்டு முற்றத்தை பெருக்கினாள். சேகர் 'பியுசி' படிக்க விண்ணப்பித்திருந்த கல்லூரிகளில் இடம் கிடைத்திருக்கிறதா என்றறிய பேருந்தில் கிளம்பி சென்றான்.

வெயில் லேசாக எழும்பி வர ஆரம்பித்தவுடன், குளிப்பதற்காக தனது வழக்கமான இடத்தில் வந்து பார்த்தது கிட்டு. அங்கு மண்சட்டி மூடி இல்லை. காலையில் மழையால் மண் பொதிந்திருந்த அந்த மூடியை கழுவுவதற்காக எடுத்து வைத்திருந்தாள் செல்லம்மா. வேலை கவனத்தில் கிட்டு குளிப்பதற்காக தண்ணீர் எடுத்து வைக்க மறந்து விட்டாள் தங்கம். தண்ணீர் நிறைந்த மூடி இல்லாதது கண்டு சுற்றும் முற்றும் பார்த்தது கிட்டு. அருகில் ஒரு சரிந்த மண்பானை தெரிந்தது. அந்த மண்பானை விளிம்பில் அமர்ந்து உள்ளே எட்டிப்பார்த்தது. மழைநீர் அதில் நிரம்பி இருந்தது. இதைத்தான் நாம் குளிப்பதற்காக வைத்திருக்கிறார்கள் போலும் என்றெண்ணி உள்ளே  குதித்தது கிட்டு. வழக்கமாக காலளவு தண்ணீரில் நின்று குளிப்பதை போல அந்த பானையினுள் நிற்க முயற்சி செய்தது கிட்டு. ஆழத்தை உணர்ந்து சுதாரிப்பதற்குள் தண்ணீரில் மூழ்கி விட்டது கிட்டு.

சிறிது நேரத்திற்கு பிறகு, தங்கம் ஞாபகம் வந்தவளாய் மண்சட்டி மூடியை கழுவி, அதில் தண்ணீர் நிரப்பி கொல்லைப்புறம் கொண்டு வந்தாள். கிட்டுவை காணாமல் "கிட்டு", "கிட்டு" என்றழைத்தாள். சில நிமிட காத்திருப்புக்கு பின்னும் 'கிட்டு' வராமல் போகவே, தேடத் தொடங்கினாள். பக்கத்தில் இருந்த அந்த சரிந்த பானையில் ஏதோ மிதப்பது போல் தெரிய ஓடிச் சென்று பார்த்தாள். கிட்டு மிதப்பது கண்டு பதறிப்போய், உடனே கையில் எடுத்தாள். எந்த சலனமும் இல்லாமல் மரத்துண்டு போல் அசைவின்றி கிடந்தது கிட்டு.

"கிட்டு" என்று தங்கம் அலறிய சத்தம் கேட்டு செல்லம்மா ஓடி வந்தாள். "அம்மா, கிட்டு செத்துபோச்சும்மா" என்று கத்தி அழத்தொடங்கினாள் தங்கம். அந்நேரத்தில் தோப்பில் இருந்து திரும்பிய சின்னையா, நடந்ததை அறிந்து வருந்தினார். வீட்டின் பின்புறம் ஒரு சிறிய குழிதோண்டி கிட்டுவை அடக்கம் செய்தார். மாலை தான் எதிர்பார்த்த கல்லூரியில் இடம் கிடைத்த உற்சாகத்தில் வீட்டிற்குள் நுழைந்தான் சேகர். தமக்கை சோகமாக இருப்பதை பார்த்து வினவினான். தகவலறிந்து அவன் கண்களும் கலங்கின. கிட்டு புதைக்கப்பட்ட இடத்தை நெடுநேரம் பார்த்துக்கொண்டே நின்றான். அன்று இரவு பிள்ளைகள் உணவு உண்ணாததால் யாரும் உணவு உண்ணவில்லை.

மறுநாள் காலை சோகத்தில் இருந்த இரு பிள்ளைகளிடமும் சின்னையா "மக்ளே, சாவை தவிர்க்க முடியாது. நான், என் அப்பா அம்மா சாவை கடந்துதான் வந்தேன். இன்னைக்கு கிட்டுவுக்கு வந்த சாவு, நாள எனக்கும் வரும். செத்துப்போனவங்கள நினைச்சு நாம வாழாம இருந்தா, இந்த உலகத்துல யாரும் வாழமுடியாது. கிட்டுகூட இருந்த நல்ல நாட்கள நினைச்சிட்டே அடுத்த வேலைய பாருங்க" என்று கூற அக்காவுக்கும் தம்பிக்கும் தெளிவு பிறந்தது.

சனி, 2 ஏப்ரல், 2016

சுனாமி அலைகள்

தென்னைவிளை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு கடற்கரை கிராமம். செல்வராஜ், முப்பது வருட மாநில பணிக்கு பிறகு கடந்த ஒரு வருடமாக சொந்த கிராமமான தென்னைவிளையில் வாழ்ந்து வருபவர். பணிக்காலத்தில் மிகவும் நேர்மையாக பணி செய்த காரணத்தால், நல்ல பெயரைத்தவிர பெரிதாக ஒன்றும் சம்பாதித்து சேர்த்து வைக்காதவர்.

செல்வராஜ் தம்பதியினருக்கு திருமணமாகி  எட்டு வருடங்களுக்கு பிறகு பிறந்த பெண்தான் கலா. பல வருடம் கழித்து பிறந்த ஒரே பெண் என்பதால் செல்வராஜுக்கு மகளின் மேல் பாசம் அதிகம். உண்ணும் உணவாகட்டும், உடுக்கும் உடையாகட்டும், படிக்கும் பள்ளி ஆகட்டும் எல்லாம் தன்னுடைய சக்திக்கு மீறி மகளின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பார்த்து பார்த்து செய்து வந்தார்.  
  
செல்வராஜின் பால்யகால நண்பர் சேகர். தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சேகருடன் கடற்கரையில் அமர்ந்து அரட்டை அடிப்பது செல்வராஜுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. கடல் அழகை கண்டு ரசிப்பதற்கு வசதியாக கடற்கரைக்கு மிக அருகில் உயரமான காட்சி கோபுரம் ஒன்று அமைந்திருந்தது. அந்த காட்சி கோபுரத்தின் உச்சியில்  இருந்து கொண்டு கடல் காற்றை வாங்கியபடியே அளவளாவுவது இருவருக்கும் வழக்கமான நடைமுறை.

"என்னடே செல்வராசு, ஒரு மாதிரி இருக்க?" கேள்வி கேட்ட நண்பர் சேகரை உற்றுப்பார்த்தார் செல்வராஜ்.

“உனக்கே தெரியும், என் தகுதிக்கு மீறி பொண்ணை இன்ஜினியரிங் படிக்க வைச்சிட்டு இருக்கேன். அவளும் இந்த வருஷத்தோட படிச்சு முடிக்க போறா. அப்புறம் அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க பெருசா எந்த சேமிப்பும் இல்லை. அதான் யோசிச்சிட்டு இருக்கேன்.” என்று பதிலுரைத்தார் செல்வராஜ்.

“இதுக்கு ஏண்டே யோசிக்கிற, பொண்ணு எப்படியும் படிச்சிட்டு வேலை பார்க்கும், வேலை பார்க்கிற பொண்ணுக்கு பையன் கிடைக்க மாட்டானா என்ன”

“நீ சொல்றது சரிதான், வேற மாவட்டம்-னா பரவாயில்லை. நம்ம மாவட்டத்தில்தான் பொண்ணு கலெக்டரா இருந்தாலும் 100 பவுன் நகை, கையில அஞ்சு லட்சம் இல்லாம கட்டி கொடுக்க முடியாதே”.

“அதுவும் சரிதான், ஏன்டே, உனக்கு பூர்வீக சொத்து எதுவும் இல்லையா?”

“பூர்வீக சொத்து இருந்திருந்தா, அதை வித்து கல்யாணம் பண்ணி வைக்கலாம். எனக்கு அந்த கொடுப்பினை இல்லை, நானும் எந்த சொத்தையும் சேக்கலை.”

“அரசாங்க வேலையில கொஞ்சம் அப்படி இப்படி இருந்திருந்தா நிறைய சொத்து வாங்கி போட்டிருக்கலாமே” 

“என்னை பத்தி உனக்கு தெரியாதா, முடிஞ்ச அளவுக்கு நேர்மையாவே வாழ்ந்துட்டேன், அதுல வருத்தப்பட ஒன்னும் இல்லை, சந்தோஷம்தான்.” 

"உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியா நடக்கும்” என்று அன்றைய பேச்சுக்கு முற்றுபுள்ளி வைத்தார் சேகர்.

சில நாட்களுக்கு பிறகு, மிகவும் உற்சாகத்துடன் இருந்தார் செல்வராஜ். காலையில் அவர் பெண் கலா கூறிய வார்த்தைகள்தான் காரணம். “அப்பா, நீங்க எதுக்கும் கவலைப்படவேண்டாம், நான் இந்த வருஷம் இன்ஜினியரிங் முடிச்சிட்டு, ஒரு நல்ல வேலையா தேடிட்டு, உங்களையும் அம்மாவையும் நல்லா பார்த்துப்பேன்” என்று சொல்லியிருந்தாள்.

“நீ நல்லபடியா படிப்ப முடிச்சாலே எனக்கு போதும். எங்களுடைய வாழ்க்கைக்கு என்னோட பென்ஷன் இருக்கு” என்று பதில் கூறினாலும், மகள் சொன்ன வார்த்தைகள் மகிழ்ச்சியை கொடுக்க தவறவில்லை.

அன்று வழக்கம்போல் சமைப்பதற்கு மீன் வாங்கி மனைவியிடம் கொடுத்துவிட்டு, வழக்கத்திற்கு மாறாக இருந்த கடலை பார்த்தபடியே நண்பர்கள் இருவரும் காலை பத்து மணிக்கு காட்சி கோபுரத்தில் ஏறி அமர்ந்தார்கள். 

கடல் மிகவும் உள்வாங்கி இருந்தது. கரையில் இருந்த பாறைகள் எல்லாம் தெளிவாய் தெரிந்தன. இந்த திடீர் மாற்றத்தால் குட்டி மீன்கள் மற்றும் நண்டுகள் கடற்கரை மணலில் துடித்துக் கொண்டிருந்தன. அக்கம் பக்கத்து சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மீன்களை பொறுக்கிக் கொண்டிருந்தனர்.

“கடல் ஏண்டே ரொம்ப உள்வாங்கி இருக்கு” என்று கேட்ட சேகருக்கு பதில் சொல்லாமல்,

“நாமும் போய் நண்டு பிடிக்கலாமா” என்று உற்சாகமாக கேட்டார் செல்வராஜ்.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், நான் கேட்டதுக்கு பதில் சொல்லு”

அதற்கு செல்வராஜ் “இந்த கடல் இப்படியே உள்வாங்கி இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்.”

சேகர் குழப்பத்துடன், “ஏண்டே அப்படி சொல்ற?”

“கடல் அப்படியே உள்வாங்கி இருந்தா, அந்த கடற்கரை பூமியை நான் எடுதுக்கலாம்ன்னு இருக்கேன். அதுல தென்னை மரங்களை வளர்த்து தோப்பாக்க போறேன்” என்று உற்சாகமாக சொன்னார். 

சேகர் மேலும் குழப்பத்துடன் அவரை பார்க்க, “டே, ஜாலியா ஒரு விஷயம் சொன்னா, அதை ஆராய்ச்சி பண்ணாம சந்தோஷபடு” என்றார்.

குழப்பம் நீங்கிய சேகர், “அப்படின்னா, எனக்கும் பாதி கடற்கரை வேணும்” என்று கடுமையான தொனியில் கேட்பதுபோல் நடிக்க, நண்பர்கள் இருவரும் சேர்ந்து பலமாக சிரித்தனர். 

அப்போது, கடலின் வெகு தூரத்தில் இருந்து பேரிரைச்சல் சத்தம் கேட்கத் தொடங்கியது. பெரும் அலை வருவதற்கான அறிகுறிகள் தெரிந்தாலும் இருவரும் அலட்டிக்கொள்ளவில்லை. இதைப்போல பல அலைகளை பார்த்தவர்கள்தானே நாம் என்ற எண்ணத்தில் கடற்கரையை வேடிக்கை பார்க்க தொடங்கினர். 

மீன் பொறுக்கி கொண்டிருந்தவர்கள், அலை வருவதை பார்த்தவுடன் சிறிது கலவரமடைந்து விலகி ஓடத்துவங்கினர். சில வினாடிகளில் வந்த பெரிய அலை உள்வாங்கிய கடற்கரை பகுதியை நிரப்பி சென்றது. அதை காட்டிலும் பெரிய அலைகள் தொடந்து வருவதை கண்ட செல்வராஜும் சேகரும் “பெரிய அலை வருது, எல்லாரும் ஓடுங்கள்” என்று பலமாகக் கத்தினர்.

அடுத்த வந்த அலை கடற்கரையில் நின்றவர்களை தனக்குள் சுருட்டிக்கொண்டு கடலுக்குள் செல்ல, இதை பார்த்த நண்பர்கள் இருவரும் விக்கித்து நின்றனர். தங்கள் கண் முன்னாலே மக்கள் அலையால் இழுத்துச் செல்லப்படுவதை பார்த்து பதட்டமடைந்த செல்வராஜ் சேகரிடம், “நாம உடனே இங்கிருந்து போகணும்” என்று கூற நண்பர்கள் இருவரும் கீழே பார்த்தனர். கடலலைகள் கட்டிடத்தின் தரை தளம் வரை வந்திருப்பதை பார்த்த அவர்கள் அந்த எண்ணத்தை கைவிட்டனர். 

“எப்படியும் இந்த கட்டிடம் பனிரெண்டு அடி உயரம் இருக்கும், இந்த உயரத்துக்கு அலை வர வாய்ப்பே இல்ல” என்று சேகர் கூற, இங்கு இருப்பதுதான் பாதுகாப்பு என்ற முடிவுடன், உயிர்ப்பசி கொண்டு ஆவேசத்துடன் வந்து கொண்டிருந்த அலைகளை பயத்தால் உடல் நடுங்கியபடி பார்த்துக்கொண்டிருந்தனர்.

கொஞ்சம் கொஞ்சமாக கடல் விஸ்வரூபமெடுத்து பேரலைகள் மூலம் இந்த பூமியை தன்னுள் சுருட்டி கொள்ளும் ஆவேசத்தில் ஊருக்குள் வர எத்தனிக்க, தற்பொழுது வந்த அலை காட்சி கோபுரத்தின் பாதி வரை தொட்டுச் சென்றது.

இதை கண்டு மிரண்டு போன செல்வராஜும் சேகரும் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிப்பதற்குள் அடுத்த அலை உச்சி வரை வந்து இருவரையும் நனைத்து செல்ல இருவரும் ஆளுக்கொரு தூணை இறுக்கி பிடித்துக்கொண்டனர். 

மேலும் ஒரு அலை வந்து அவர்களை தாக்க, செல்வராஜின் பிடி சிறிது தளர அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட அலை அவரை கடலுக்குள் இழுத்துச்செல்ல, தன் கண்ணெதிரேயே நண்பன் அடித்துச்செல்லப்படுவதை கண்டும் காப்பாற்ற முடியாமல் கதறினார் சேகர்.

ஆழிப்பேரலைகளின் கோரத்தாண்டவம் சிறிது நேரத்தில் அடங்கிவிட, அலைகளின் வேகம் படிப்படியாக குறையத் தொடங்கியது, பாதிக்கப்பட்ட மக்களின் ஓலம் பெருகத் தொடங்கியது. 

மீண்டும் இது போன்ற அலைகள் இனிமேல் வரக்கூடாது என்று இயற்கையிடம் வேண்டியபடியே காட்சி கோபுரத்தின் உச்சியில் நண்பனை இழந்த சோகத்தில் அழுதபடி நின்று கொண்டிருந்தார் சேகர்.
        
கடற்கரையோரத்து மக்களையும், வீடுகளையும், தென்னந்தோப்புகளையும் அழிப்பதற்கு சில நிமிட பேரலைகள் போதுமாக இருந்தன. அதிர்ஷ்டவசமாக அந்த இடத்தில் இருந்த, இந்த காட்சி கோபுரம் மட்டும் கடல் அலையில் இருந்து தப்பிவிட, அதில் இருந்து உயிர் பிழைத்த சேகர் மட்டும் நடந்த எல்லாவற்றிற்கும் சாட்சியாக இருந்தார். அதன் பிறகு சேகர் கடற்கரைக்கு செல்வதே இல்லை.

கலாவின் வருங்காலம் எப்படி இருந்தது. தந்தையை இழந்ததால் தடம் மாறிப்போனதா, இல்லை, தாயையும் காத்து தன்னையும் காத்துக்கொண்டாளா, அந்த சுனாமி அலைகள்தான் பதில் சொல்ல வேண்டும்.

(பின்குறிப்பு: 26 டிசம்பர் 2004 -ஆம் ஆண்டு நடந்த இயற்கை பேரழிவான சுனாமியை பின்னணியாக கொண்டு புனையப்பட்ட கதை.)

சனி, 30 மே, 2015

நௌஸ்வான்ஸ்டைன் காஸில் (Neuschwanstein Castle)

தென்கிழக்கு ஜெர்மனியில் அமைந்திருக்கும் மாநிலம் பவாரியா (Bavaria). நான் வசித்துவரும் பாடன்வுர்டெம்‌பர்க் (Baden-wuerttemberg) மாநிலத்தின் அண்டை மாநிலம் இது. ஜெர்மனியின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான ம்யூனிக் (Munich) இம்மாநிலத்தின் தலைநகரம். அழகிய இந்த மாநிலத்தில் அமைந்த ஒரு கோட்டைதான் நௌஸ்வான்ஸ்டைன்.

19-ஆம் நூற்றாண்டில் ரோமனெஸ்‌க் ரிவைவல் (Romanesque Revival) கட்டிட கலையின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ள கோட்டை இது. இது ஃப்யுஸ்ஸென் (Fuessen) என்னும் இடத்தில் ஹோஹெங்ஸ்சுவன்கௌ (Hohenschwangau) கிராமத்தில் அமைந்துள்ளது. பவாரிய மன்னர் லுட்விக் 2 (Ludwig 11) நிர்ணயித்த கோட்டை இது. கட்டி முடிப்பதற்கு வருடங்கள் 17 பிடித்த இந்த கோட்டை சிறிய மலை குன்றில் அமைந்துள்ளது. டிஸ்னிலான்ட்-ல் (Disneyland) அமைந்திருக்கும் ஸ்லீப்பிங்க் ப்யூட்டீ (Sleeping Beauty) கோட்டைக்கான முன்மாதிரி இந்த கோட்டைதான். இந்த பூவுலகில் அதிக பார்வையாளர்கள் வந்து செல்லும் கோட்டையும் இதுதான். மேலும் அதிகப்படியான தகவல்களுக்கு கூகிள் (Google) மற்றும் விக்கி (wiki) பக்கங்களை நாடவும்.

2012-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நண்பர்கள் யூதா வசந்த் மற்றும் ஆனந்த்துடன் இந்த கோட்டைக்கு முதன் முறை சென்றேன். உலகின் அற்புதங்களில் ஒன்றான இந்த கோட்டை எனக்கு மிகவும் பிடித்து போனதால் அடுத்த முறை மனைவி, குழந்தை ற்றும் நண்பன் நட்ராஜ் குடும்பத்தோடு அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் மறுபடியும் அங்கு சென்றேன். அளவுகடந்த சுற்றுலா பயணிகளின் காரணமாக, அனுமதி சீட்டு கிடைக்காததால் கோட்டைக்கு உள்ளே செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினோம். மீண்டும் 2015-ல் மே மாதம் மனைவி மற்றும் குழந்தையை அழைத்துக்கொண்டு இந்த கோட்டைக்கு வந்தேன். 2012-ல் ஏமாற்றத்தோடு திரும்பிய என் மனைவிக்கு இந்த முறை இந்த பயணம் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

அனுமதி சீட்டு பெற்ற பிறகு கோட்டையை காண மலையேறி சென்றோம். மழையும் இல்லாமல் வெயிலும் இல்லாமல் மந்தமாக இருந்த கால நிலை ஒத்துழைக்க எளிதாக கோட்டையை அடைந்தோம். வந்த வழியில் ஜாமூன் போன்ற மென்மையான இளஞ்சூடான உருண்டைகளை வாங்கி பசியாறினோம், என் குழந்தைக்கு மிகவும் பிடித்து போனது அந்த உணவு. கோட்டைக்கு முன் சில புகைப்படங்களை எடுத்துவிட்டு உள் சென்றோம். இந்தியர்கள், சீனர்கள், ஐரோப்பியர்கள் என்று உலகின் பல பக்கங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் நிரம்பி வழிந்து கொண்டிருந்ததை காண முடிந்தது.


எங்கள் முறை வந்தவுடன் கோட்டைக்குள் சென்றோம். நாங்கள் உட்பட கிட்டத்தட்ட 25 பேர் கொண்ட கூட்டத்திற்கு இளம்பெண் ஒருவர் வழிகாட்டியாக வந்து கோட்டையின் வரலாற்றை விளக்கியபடியே சுற்றி காண்பித்தார். கோட்டைக்குள் புகைப்படம் எடுக்க தடை என்பதால் சொந்த கண்கள் கொண்டு கோட்டையை முழுவதும் ரசிக்க முடிந்தது. கோட்டை கட்டி முடியும் தருவாயில் மன்னர் லுட்விக் மர்மமான முறையில் இறந்து  போனதால், மன்னர் வம்சம் வாழ்வதற்கு முன்னமே பொதுமக்கள் பார்வைக்கு வந்துவிட்டது இந்த கோட்டை.

பலதளங்கள் கொண்ட இந்த கோட்டை சுண்ணாம்பு கற்கள், செங்கற்கள், மார்பிள் கற்கள், மரப்பலகைகள் கொண்டு மிகவும் நேர்த்தியாகவும் வலிமையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தர்பார், இசை வளாகம், மன்னர் அறை, விருந்தினர் அறைகள், மரக்கட்டில்கள், மேஜைகள், நாற்காலிகள். தொங்கும் விளக்குகள், ஓவியங்கள் என்று அனைத்தும் நிறைந்துள்ளன. குறிப்பாக மன்னரின் கட்டில் வேலைப்பாடுகள் செய்ய மட்டும் 4 வருடங்கள் எடுத்துக்கொண்டது என்பதை கேட்ட பொழுது, ஒட்டு மொத்த கோட்டையை இழைப்பதற்கு எவ்வளவு சிரத்தை எடுத்து இருப்பார்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. தினமும் சராசரியாக 6000 சுற்றுலா பயணிகள் வருகை தந்தாலும், மெருகு குறையாத வகையில் மிகவும் கவனமாக பாராமரிக்க பட்டு வருவதை காண முடிந்தது.

இறுதியாக சமையல் அறையை பார்த்துவிட்டு, கோட்டையை ஒத்த நினைவு பொருள் வாங்கிவிட்டு, 1 மணிநேர சுற்றலுக்கு பிறகு வெளியே வந்தோம். கோட்டையின் பிரம்மாண்டத்தை காண்கையில் பார்த்த இடங்கள் மிகவும் குறைவாக தெரிந்ததால், சில இடங்கள் பொது மக்கள் பார்வைக்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்று புரிந்து கொள்ள முடிந்தது.

மலை உச்சியில் அமைந்துள்ள மனித படைப்பின் உச்சமான இந்த படைப்பு சொல்லொண்ணா ஆச்சர்யத்தை எனக்கு அளித்தது என்றால் என் மனைவிக்கும் அதே உணர்வுதான். இது போன்ற கலைபடைப்புகளை பார்க்கும் பொழுது நிர்மாணித்தவர்களை "அவன் ரசிகன்-டா" என்று நம்மூர் சொலவடையில் கூறுவது மன்னர் லுட்விக்-கு மிகப் பொருந்தும். கோட்டைக்கு உள்ளே அற்புதம் என்றால், கோட்டைக்கு உள்ளே இருந்து ஏரிகள், காடுகள் கொண்ட பவாரியன் வெளி அழகை ரசிப்பது அதியற்புதம்.


அடுத்து, இந்த கோட்டையின் அழகை எட்ட நின்று ரசிப்பதற்காகவே இரு மலை குன்றுகளுக்கு இடையே உருவாக்கப்பட்ட மரின்ப்ருக்க (Marienbrucke) பாலத்தை நோக்கி எங்கள் கால்கள் நடந்தன. அந்த பாலத்திற்கு நடுவில் சென்று கோட்டையை பின்னணியாக கொண்ட புகைப்படங்களை சுட்டு தள்ளினோம். மிகச்சிறிய பாலம் என்றாலும் உயரமான இடத்தில் அமைந்திருப்பதால் என் கால்கள் நடுங்குவதை தடுக்க முடியவில்லை.  

இந்த கோட்டையின் அழகுக்கு அழகு சேர்ப்பது அது அமைந்திருக்கும் இடம்தான், அந்த அழகை ரசித்தபடியே கீழே இறங்கினோம். துள்ளி ஓடி வந்து கொண்டிருந்த என் மகளிடம் கேட்டேன், 'நாம எங்கே போயிட்டு வரோம்?', யோசித்தபடியே அவள் கூறினாள் 'பெரிய haselnuss', ரசித்து சிரித்த படியே 'அது castle மகளே' என்றேன்.

யுபெர்லிங்கென் (Ueberlingen) வரும் வழியில் காஃப்பய்ரென் (Kaufbeuren) என்னும் இடத்தில் முதியவர் கூட்டம் ஒன்று பீர் அருந்தியபடியே அப்பாக்கள் தினம் (Father's Day, 14 மே 2015) கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். எங்களை கண்டவுடன் அழைத்த அவர்கள், என்ன வேண்டுமானாலும் வாங்கி கொள்ளுங்கள் என்றனர். அன்பு தொல்லைக்கு செவிமடுத்து காபி வாங்கி பருகினோம். அக்கூட்டத்தில் இருந்த பெண்மணி எங்களை பற்றி கேட்டறிந்து கொண்டு, 'salute to IT people' என்று சல்யூட் செய்தார். கணிப்பொறியாளன் என்பதற்காக நான் மகிழ்ந்த ஒரே தருணம் அதுதான்.

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

யூபெர்லிங்கென் (Ueberlingen) - பூலோக சொர்க்கம்

அழகான ஏரி, கண்கவர் மலர் தோட்டங்கள், பசுமையான பழத்தோட்டங்கள், நீண்ட நெடிய மரங்களை கொண்ட காடுகள், ஏரிக்கரையில் அமைந்த வீடு, அந்த வீட்டில் நமக்கு பிரியமானவர்களுடன் நாம், எல்லோரும் காணும் கனவு இதுதான். அத்தனையும் நிஜமாக அமைந்த ஒரு இடம்தான் யூபெர்லிங்கென்.

பணி நிமித்தமாக கடந்த 2010 மற்றும் 2012 ஆம் ஆண்டுளில் ஜெர்மனி (Germany) நாட்டின் யூபெர்லிங்கெனில் வசிக்க நேரிட்டது. தற்போதைய 2014 ஆண்டிலும் இங்கு வசிக்க நேர்ந்தது இனிய அனுபவமாக இருக்கிறது. கடந்த வருடங்களில் இன்ஸ்ப்ருக் (Innsbruck, Austria), பாரிஸ் (Paris, France), இன்டர்லேகன் (Interlaken, Switzerland), வெனிஸ் (Venice, Italy), பெர்லின் (Berlin, Germany) என்று சில சுற்றுலா பயணங்கள் சென்றிருந்தாலும், அவற்றை எல்லாம்விட யூபெர்லிங்கென் சிறந்த சுற்றுலாதலமாக உணர்ந்தபடியால் அதைப்பற்றி எழுத முனைந்ததில் விழைந்த கட்டுரைதான் இது. இதை ஒரு பயணக்கட்டுரையாக எழுத முயற்ச்சிக்காமல், இங்கு வாழ்ந்த/வாழ்கின்ற அனுபவத்தை எழுத விழைகிறேன்.
யூபெர்லிங்கென் நகரம் தென்மேற்கு ஜெர்மனியில் பேடன்-வுர்ட்டேம்பெர்க் (Baden-Wuerttemberg) மாநிலத்தில் கான்ஸ்டன்ஸ் ஏரிக்கரையில் (Lake Constance) அமைந்துள்ளது. நீண்ட நெடிய வரலாறு கொண்ட இந்த நகரம், முன்னொரு காலத்தில் ரோமானியர்களால் (Romans) ஆளப்பட்டு பின்னர் சுதந்திரமடைந்து ஜெர்மனி ஆட்சியின் கீழ் வந்து, தற்பொழுது மிக முக்கியமான சுற்றுலாதலமாக விளங்குகிறது. கான்ஸ்டன்ஸ் ஏரியை போடன்ஸீ (Bodensee) என்றும் குறிப்பிடுவார்கள். ஜெர்மனி, ஸ்விட்சர்லான்ட் (Switzerland) மற்றும் ஆஸ்ட்ரியா  (Austria) ஆகிய மூன்று நாடுகளையும் போடன்ஸீ இணைக்கிறது.


யூபெர்லிங்கெனை சுற்றி திராட்சை தோட்டங்கள் எங்கும் நிறைந்திருக்கின்றன. பல நூற்றாண்டுகளாக திராட்சை உற்பத்திக்கு பெயர் பெற்ற இடம் இது. ஆப்பிள் (Apple) தோட்டங்களும் நிறைய உள்ளன. இதை தவிர்த்து ஸ்ட்ராபெர்ரி (Strawberry), ஹிம்பெர்ரி (Himberry), ப்ரோம்பெர்ரி (Bromberry) மற்றும் செர்ரி (Cherry) பழங்கள் விளைகின்ற பூமி இது. ஹாஸல்நஸ் (Haselnuss), வால்நஸ் (Walnuss) போன்ற கொட்டைகளும் இங்கு விளைகின்றன.

இங்கு மனைவி மற்றும் குழந்தையுடன் வாழ்ந்த நாட்களை வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாத வகையில், மனம் முழுவதும் இனிமையான நினைவுகளை யூபெர்லிங்கென் வழங்கியுள்ளது.

யூபெர்லிங்கெனில் மார்ச் (March) மாதத்தில் நடைபெறும் குளிர்கால விழா மிகவும் அருமையாக இருக்கும். ஆண்கள் அனைவரும் கருப்பு நிற உடையால் கண்களை தவிர்த்து உடல் முழுவதும் மறைத்து ஊர்வலமாக வருவார்கள். சவுக்கு போன்ற ஒன்றை வைத்து காற்றில் அடித்து ஒலி எழுப்புவார்கள். பெண்கள் சிகப்பு நிற உடை அணிந்து வருவார்கள். வேடிக்கை பார்ப்பவர்களுக்கு இனிப்புகளை வாரி வழங்குவார்கள். குளிரில் நடுங்கிக்கொண்டே இரண்டு முறை இந்த கொண்டாட்டத்தை கண்டு களித்திருக்கிறேன்.

இலையுதிர் காலம், வசந்த காலம், வெயில் காலம், மழை காலம், பனி காலம் என்று எல்லா விதமான கால மாற்றங்களையும் மிகவும் துல்லியமாக பார்த்து உணர்ந்து அனுபவிக்கும் வகையில் வருடம் முழுவதும் கால நிலை அமைந்திருக்கும். குளிர் காலங்களில் குறைந்தபட்சம் -20 டிகிரி வரை வெப்பநிலை இருக்கும். அதிகபட்சம் 30 டிகிரி வரை கோடைகாலங்களில் இருக்கும்.


வருடத்தின் பெரும்பாலான மாதங்கள் கடும் குளிர் நிரம்பி இருந்தாலும், மே (May) மாதம் முதல் ஆகஸ்ட் (August) மாதம் வரை சூரியன் முகம் காட்டும். இந்த மாதங்களில் கோடையை அனுபவிக்க
ஐரோப்பிய (Europe) மக்கள் யூபெர்லிங்கென் நோக்கி படை எடுப்பார்கள். அதனால் தங்குவதற்கு இந்த மாதங்களில் வீடு கிடைப்பது மிகவும் சிரமம். 2012 ஆம் வருடம் மனைவி மற்றும் மகளுடன் வசிப்பதற்கேற்ற இடம் இங்கு கிடைக்காததால் அருகாமையில் இருக்கும் ஃப்ரிக்கிங்கன் (Frickingen) என்ற இடத்தில் 2 மாதங்கள் தங்கி இருந்தோம். ஃப்ரிக்கிங்கன் ஆப்பிள் தோட்டங்கள் நிரம்பிய மிகவும் அழகான கிராமம். ஆப்பிள் தோட்டங்களில் என் மகள் தவழ்ந்து விளையாடிய தருணங்கள் மறக்கமுடியாதவை.

அதன்பிறகு இரண்டு மாதங்கள் ஆன்டல்ஷாஃபன் (Andelshofen) என்னும் இடத்தில் குடியிருந்தோம். இங்கு நிறைய ஸ்ட்ராபெரீ பழத்தோட்டங்கள் இருக்கின்றன. ஒரு நாள் நாங்கள் தங்கி இருந்த வீட்டு உரிமையாளருடைய தோட்டத்தில் பழங்கள் பறித்து என் மகளுக்கு கொடுத்தேன். பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் சுவையில் மயங்கிய என் குழந்தை செடிகளில் இருந்து பழங்களை பறித்து உண்ண
த் தொடங்கினாள். ஒரு கட்டத்திற்கு மேல் பழத்தை பறிக்க பொறுமை இல்லாமல் செடியில் இருந்து நேரடியாகவே சாப்பிட்டாள். என் காமிரா (Camera) கண்களுக்குள் சிக்கிய அந்த தருணம் ஒரு கவிதை.

யூபெர்லிங்கெ
னுக்கு அருகில் திரைபெர்க் (Triberg) என்னும் இடத்தில் ப்ளாக் ஃபாரஸ்ட் (Black Forest) அருவி அமைந்துள்ளது. இங்கு ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் (Cake) தவிர்த்து குக்கூ க்ளாக் (Cuckoo clock) மிகவும் பிரசித்தம். இங்கு வாங்கிய குக்கூ சுவர் கடிகாரம் கன்னியாகுமரியில் என்வீட்டு வரவேற்பு அறையை அலங்கரித்துக்கொண்டிருக்கிறது.

கோடைகாலமான ஜுலை (July), ஆகஸ்ட் மாதங்களில் போடன்ஸீயில் நீச்சல் அடிப்பது எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. சிறிய வயதில் ஊரில் குளம் குட்டைகளில் நீச்சலடித்த சுகானுபவங்களை மீட்டு கொடுக்கிறது போடன்ஸீ. போடன்ஸீ தெர்மே (Therme) என்னும் புகழ்பெற்ற ஸ்பா (Spa) இங்கு அமைந்துள்ளது. உடல் ஆரோக்கியத்திற்கான ஸானா (Sauna), மஸாஜ் (Massage) மற்றும் வெந்நீர் குளியல் இங்கு பிரசித்தம். இங்கு பலமுறை சென்றிருந்தாலும் ஒவ்வொரு முறையும் தெர்மே புத்துணர்ச்சி தரத்தவறுவது இல்லை.

யூபெர்லிங்கெனில் இருந்து போடன்ஸீ ஏரியை தாண்டி கான்ஸ்டன்ஸ் (Konstanz) என்னும் நகரம் உள்ளது. அங்கு மனைவி குழந்தையுடன் சென்று ஸீ வர்ல்ட் (Sea World) என்னும் மீன் அருங்காட்சியகத்தில் பென்குயின் (Penguin) பார்த்தது மறக்க முடியாதது. யூபெர்லிங்கெனுக்கு அருகில் மீர்ஸ்பர்க்-ல் (Meersburg) மிகவும் பழமை வாய்ந்த கோட்டை (Castle) ஒன்று உள்ளது. பழம்பெருமை மாறாமல் இருக்கும் அந்த கோட்டை காணத் தகுந்த இடங்களில் ஒன்று.

போடன்ஸீ ஏரியில் மீன்களை தவிர்த்து வாத்துகள் அதிகமாக வசிக்கின்றன. ஜெர்மனியின் முக்கிய பறவையான அன்னபறவையையும் (Swan) இந்த ஏரியில் காணலாம். ஒருமுறை குடும்பமாக எரிக்கரையில் அமர்ந்திருந்தோம். கரைக்கு வந்த அன்னபறவை ஒன்று நாங்கள் கொடுத்த ப்ரெட் துண்டுகளை சாப்பிடத்தொடங்கியது. திடீரென்று என் மகள் கையில் இருந்த ப்ரெட் துண்டை கொத்தி தின்றது. அந்நிகழ்வுக்கு பிறகு அன்னப்பபறவையை கண்டாலே என் மகள் அழுதாள்.


யூபெர்லிங்கெ
னுக்கு அருகில் இருக்கும் மிகப்பெரிய நகரம் ஃப்ரிட்ரிச்ஷாஃபென் (Friedrichshafen). இங்கு வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் கார் ட்யூனிங்க் ஷோ (Car Tuning Show), ஏர் ஷோ (Air Show) போன்றவை மிகவும் பிரசித்தம். ஃப்ரிட்ரிச்ஷாஃபென் செல்லும் வழியில் சேலம் (Salem) என்று ஒரு இடம் உள்ளது. முதலில் நம்மூரை போல் இங்கேயும் ஒரு சேலம் என்று ஆச்சர்யப்பட்டபோது, இது சேலம் இல்லை ஸாலம் என்று உச்சரிக்க வேண்டும் என்று அறிந்து கொண்டேன்.


எதிர்வருபவர் நமக்கு தெரியாதவராக இருந்தாலும் ஹலோ (Hello) சொல்லி மரியாதை செய்யும் வழக்கத்தை இங்கு எல்லோருமே கடைபிடிக்கிறார்கள். முதலில் இதைக் கண்டு வியப்பாக இருந்தாலும், மிகவும் நல்ல பழக்கம் என்று புரிந்ததால் எளிதில் கைக்கொள்ள முடிந்தது. உடல் ஆரோக்கியம் பேணுவதில் ஜெர்மனியர்கள் அதிக அக்கறை காட்டுகிறார்கள். நம்மூரில் நாம் மிதிவண்டியை (Cycle) மறந்து வரும் நிலையில் இங்கு ஸைகிளிங்க் (Cycling) முக்கிய பொழுது போக்காக உள்ளது.

வாரம் முழுவதும் நன்கு உழைக்கும் மக்கள், வார இறுதி சனிக்கிழமையில் மது, உணவு என்று கொண்டாடிவிட்டு, ஞாயிற்றுக்கிழமை முழுவதும் வீட்டுக்குள் அடைந்து விடுகிறார்கள். அன்று உணவகங்களை தவிர்த்து வேறு எந்தக் கடைகளும் திறப்பதில்லை. ஆட்டோமொபைல் துறையில் முன்னணி நாடான ஜெர்மனியில், மக்கள் அனைவரும் சட்ட திட்டங்களை மதித்து நடப்பதால் இயந்திரத்தனமான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பது மிகை இல்லை என்றாலும், சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வாழ்க்கையை கொண்டாடவும் தவறுவது இல்லை.

இங்கு பெரும்பாலும் தாய் மொழியான ஜெர்மன் மொழிதான் பேசப்படுகிறது. இளம் தலைமுறையினர் ஆங்கிலம் பேசுகிறார்கள். இந்தியர்களாகிய நாம் ஜெர்மன் மொழியில் பேசினோம் என்றால், நம்மை தங்கள் சக நாட்டவராகவே பாவிக்கிறார்கள். உலகமயமாக்கலின் விளைவாக பல நாடுகளுக்கு நாம் சென்று பணியாற்றினாலும், அந்தந்த நாடுகளின் மொழி அறிந்து கொண்டோம் என்றால் நல்ல அங்கீகாரத்தை பெறலாம்.

யூபெர்லிங்கெனுக்கு அருகில் போடன்ஸீ ஏரியை தாண்டி மைனௌ (Mainau) என்று அழைக்கப்படுகிற அழகிய தீவு ஒன்று அமைந்துள்ளது. இத்தீவு முழுவதும் மலர்கள் மலர்கள் மலர்கள். காலநிலையினை பொறுத்து மலர் வகைகள் மாறுபடும். இம்முறை ஏப்ரல் (April) மாதத்தில் சென்ற பொழுது தீவு முழுவதும் துலிப் (Tulip) மலர்களால் நிறைந்திருந்தது. சுற்றுலா பயணிகளில் நிறைய இந்திய புது மண தம்பதிகளை பார்க்க நேர்ந்தது மகிழ்ச்சி அளித்தது. இத்தீவுக்கு அருகே ரேசெநௌ (Reichenau) தீவு உள்ளது, இந்தத்தீவு காய்கறி தோட்டங்களால் ஆனது.

நமது உணவு முறைக்கும், ஜெர்மனிய உணவு முறைக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அரிசி சாதம், அதற்கான குழம்பு வகைகள், அரிசி மற்றும் கோதுமையாலான உணவு வகைகள் என்பது நமது உணவு முறை. இதை தவிர்த்து பழங்கள் காய்கறிகள் மற்றும் மாமிசம் போன்றவையும் நமது உணவுமுறையில் உண்டு. கிட்டத்தட்ட இந்த வகையில்தான் ஜெர்மனிய உணவு முறை என்றாலும், சாப்பிடும் முறை மிகவும் வித்தியாசப்படுகிறது. பொறித்த/வேகவைத்த மாமிசத்துண்டு, பச்சையான இலை தழை காய்கறிகளாலான சாலட், பழங்கள், ப்ரெட் வகைகள் இதுதான் ஒரு வேளைக்கான உணவு பழக்கம்.
  
பாலின பாகுபாடின்றி தனக்கு தேவையான உணவை தானே சமைத்துக்கொள்கிறார்கள். நம்மை போலல்லாமல் எப்பவாவது ஒரு முறை  சாதமும் சேர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் தினம் உருளைக்கிழங்கு உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள். எனக்கு தெரிந்த அளவில் உருளைக்கிழங்கு ஒரு உலகளாவிய உணவு என்று உரக்கச் சொல்லுவேன்.

நாம் அதிகமாக தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள். ஆனால் இங்கு பெரும்பாலும் குளிர் பானங்கள், பழச்சாறுகள், மற்றும் சோடா கலந்த தண்ணீர் அருந்துகிறார்கள். இதய வடிவிலான பிரெட்செல் (Pretzel) என்று அழைக்கப்படும் ப்ரெட் உணவு குறைந்த விலையில் கிடைக்கும். இந்த உணவு கிட்டத்தட்ட ஐரோப்பிய நாடுகளின் தேசிய உணவு என்று சொல்லத்தக்க வகையில் எல்லா இடங்களிலும் கிடைக்கப் பெறுகிறது.


ஆண் பெண் பேதமின்றி பள்ளி பருவத்திலேயே மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு ஆட்பட்டுவிடுகிறார்கள். வளர வளர பெரும்பாலானோர் இந்த பழக்கத்தை கைவிட்டுவிடுகிறார்கள். 'களவும் கற்று மற' என்று நம் முன்னோர் சொன்னதை இவர்கள் சரியாக கடைபிடிக்கிறார்கள்.

பெரும்பாலும் திருமணம் செய்யாமலேயே கணவன் மனைவியாக குழந்தையுடன் வாழ்கிறார்கள். பாய் ஃப்ரென்ட் (Boy Friend) அல்லது கர்ல் ஃப்ரென்ட் (Girl Friend) என்று அறிமுகம் செய்கிறார்கள் என்றால் அவர்கள் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்கிறார்கள் என்று புரிந்து கொள்ளலாம். திருமண பந்தத்தில் இருந்து விடுபடுவது மிகவும் செலவு வைக்கும் என்பதால் இப்படி ஒரு ஒப்பந்தம். திருமணம் புரிந்த ஜோடிகளை போல பெரும்பாலான இவர்களும் வாழ்வு இறுதி வரை ஒன்றாக வாழ்கிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது சம்பிரதாயமான முறைகளை தாண்டியும் நம்பிக்கை வெற்றி பெறுகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

டிஸெம்பர் (December) மாதத்தில் பனி மழை பொழிந்து எங்கும் பனியால் சூழப்பட்டு கருப்பு வெள்ளை காட்சிகளாகவே தெரியும். முதல் பனியில் நடக்கும்பொழுது பஞ்சில் நடப்பது போல் அருமையாக இருக்கும். தொடர்ந்து வரும் நாட்களில் பனி இறுகி பாறைபோல் ஆகிவிட, வழுக்கி விழாமல் செல்ல கவனமாக நடக்க வேண்டும். 

பனி சூழ்ந்த சாலைகளை போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் சரிசெய்ய தினமும் காலையில் பனிக்கட்டிகளை அள்ளி செல்லும் லாரியை தவறாமல் பார்க்கலாம். வீட்டின் முன்னால் குவிந்திருக்கும் பனியை விலக்கி வழி ஏற்படுத்துவது மக்களின் அன்றாட கடமை ஆகிவிடும். இது போன்ற காட்சிகளை நம்மூரில் கற்பனையில் கூட பார்க்க முடியாது. நம்மூரை போலல்லாமல் இங்கு பெரும்பாலான வீடுகள் பனிக் காலத்திற்கு ஏற்ற வகையில் ஓடு வேய்ந்த கூரை வீடுகளாகவே அமைக்கப்பட்டுள்ளன. கம்பி தடுப்புகள் இல்லாத வெறும் கண்ணாடியாலான ஜன்னல்கள் மற்றுமொரு சிறப்பு அம்சம்.

இந்திய வெப்ப சூழ்நிலையில் வளர்ந்துவிட்ட நமக்கு, குளிர்காலத்தை இங்கு எதிர்கொள்வது சிரமமான காரியம்தான். கண்களை தவிர அனைத்தையுமே அங்கி, கையுறை, பூட்ஸ் (Boots), தொப்பி போன்ற குளிர் தாங்கும் வெப்ப அணிகலன்களால் மறைத்தாலும் குளிர் உள்ளே போய் எலும்பை குத்துவதை தவிர்க்க முடியாது. வீடுகளில் ஹீட்டர் (Heater) இருப்பதால் ஓரளவு சமாளித்துக் கொள்ளலாம்.

சக குடும்ப உறுப்பினராகவே பாவித்து செல்ல பிராணியான நாய் வளர்ப்பது, கிட்டத்தட்ட எல்லோருமே இங்கு வழக்கமாக வைத்திருக்கிறார்கள். நாம் செல்லும் இடங்களுக்கு எல்லாம் செல்ல பிராணிகளுக்கும் அனுமதி உண்டு. பஸ் (Bus) மற்றும் டிரெய்னிலும் (Train) நாய்களை கூட்டி செல்லலாம். மனிதர்களை விட ஒழுக்கமாக அந்த நாய்கள் நடந்து கொள்வதை பார்க்கும் பொழுது ஆச்சரியமாக இருக்கும். குறிப்பிட்ட நேரத்தில் வரும் பஸ்ஸும் டிரெய்னும் இன்னுமொரு ஆச்சர்யம்.

கோடைக்காலத்தில் ஒரு படகை வாடகைக்கு எடுத்துக்கொண்டு போடன்ஸீ ஏரியில் பயணிப்பது மிகவும் அலாதியான அனுபவம். அமைதியான ஏரி, தெளிவான குளிர்ந்த நீர், மிதமான சூரியன், மெல்லிய காற்று என்று மிகவும் அற்புதமாக இருக்கும். தெளிந்த வானிலை அமைந்த தருணங்களில் ஏரிக்கு அந்தப்புறம் பனியால் சூழப்பட்ட ஆல்ப்ஸ் (Alps) மலை தொடரின் காட்சி சொல்லொண்ணா அழகைத் தரும்.

தேனிலவு செல்வதற்கு மிகவும் சிறந்த இடம் யூபெர்லிங்கென். மிக அருகாமையில் ஸ்விட்சர்லான்ட் மற்றும் ஆஸ்ட்ரியா நாடுகள் அமைந்துள்ளதால், ஆல்ப்ஸ் மலைசிகரங்களில் அமைந்த மலைவாசத்தலங்களுக்கு செல்வதோடு மட்டுமல்லாமல் போடன்ஸீரிக்கரையில் அமர்ந்து உலகை மறந்து பொழுதுபோக்க மிகவும் அருமையான இடம்.



மாலை வேளைகளில் போடன்ஸீரிக்கரையில் காலாற நடந்து செல்வது மிகவும் உன்னதமான அனுபவம். ஒவ்வொரு முறை நான் நடைபயணிக்கும் பொழுதும் என் உதடுகள் தானாகவே முணுமுணுக்கும் "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!".