செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

லண்டன் ஒலிம்பிக்ஸ் 2012

மீண்டும் ஒரு ஒலிம்பிக்ஸ் லண்டனில் நடந்து முடிந்து விட்டது!

120 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியர்களின் சார்பாக கலந்துகொண்ட 83 இந்தியர்கள், அளப்பெரிய வெற்றிகளை குவிக்கவில்லை என்றாலும் கடந்த காலங்களை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது, இந்த முறை சிறப்பாகவே தங்கள் பங்களிப்பை செய்திருக்கிறார்கள்.

பதக்கம் வென்ற இந்தியர்கள்:

வெள்ளி

துப்பாக்கி சுடுதல் (25m rapid fire pistol) - விஜய் குமார்
மல்யுத்தம் (66kg Freestyle) - சுஷில் குமார்

வெண்கலம் 

துப்பாக்கி சுடுதல் (10m Air Rifle) - ககன் நரங்
பெண்கள் குத்துசண்டை (Flyweight 51kg) - மேரிகோம்
பெண்கள் இறகுப்பந்து - சாய்னா நெஹ்வால்
மல்யுத்தம் (60kg Freestyle) - யோகேஷ்வர் தத்

உலக நாடுகள் எல்லாம் தங்களுடைய ஆளுமையை நிரூபிக்க  ஒலிம்பிக் போட்டிகளை பயன்படுத்திக்கொள்கின்றன. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் விளையாட்டு துறையில் நமது நாடு மிகவும் பின்தங்கியே உள்ளதால் ஒலிம்பிக்கில் ஆளுமை செலுத்த முடியவில்லை. நமது நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகள், மக்களின் அடிப்படைத்தேவைகள், போக்குவரத்து வசதிகள், அனைவருக்கும் கல்வி, வேலை என்று இன்னும் பல வளர்ச்சி பணிகளில் அரசு கவனம் கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதால், விளையாட்டில் முழு கவனமும் செலுத்துவதற்கான சூழ்நிலை இல்லை. ஆனால் இருக்கின்ற வசதிகளை கொண்டு 6 பதக்கங்களை நாம் வென்றிருப்பது மகிழ்ச்சியான ஒன்றே. இந்த முறை பெற்ற பதக்கங்கள், அடுத்து 2016-ல் ரியோ டி ஜெனிரோ-வில் (பிரேசில்) நடக்க இருக்கும் ஒலிம்பிக்ஸ்க்கு உத்வேகமாக இருக்கும் என்பதால், அடுத்தமுறை இரட்டை இலக்கத்தில் பதக்க எண்ணிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வெள்ளி, 1 ஜூன், 2012

குற்றம் - நடந்து கொண்டிருப்பது என்ன? தமிழக அரசியல்

தி.மு.க ஆட்சிக்கு விடைகொடுத்து, அ.தி.மு.க-வுக்கு ஆட்சி பொறுப்பு கொடுத்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை!

திருச்சி, சங்கரன்கோவில் என்று இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் முடிந்து, புதுக்கோட்டை இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. பொதுத்தேர்தலே  முறையற்று நடக்கும்பொழுது இடைத்தேர்தல் எல்லாம் சம்பிரதாயமாகவே நடைபெற்றுவருகின்றன. வருங்காலங்களில் இடைத்தேர்தல் நடத்தாமலே ஆளும்கட்சி ஜெயித்ததாக அறிவித்துவிட்டால், மிச்சமாகும் பணத்தை மக்கள் நல்வாழ்வு திட்டங்களுக்கு பயன்படுத்தலாம்.

தமிழகம் சந்தித்துவரும் மிகப்பெரிய பிரச்சினை மின்சாரத் தட்டுப்பாடு. பல வருடங்களாக இருந்து வரும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தொலைநோக்கு பார்வையில் திட்டங்களை தீட்டாமல், இந்த ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சியை தக்கவைக்கும் பொருட்டு செய்யும் செயல்களால் மின்சாரத் தட்டுப்பாட்டை அதிகமாக்கிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த தி.மு.க ஆட்சி மின்சார தேவை பற்றி கண்டுகொள்ளாமல் இலவச தொலைக்காட்சிப்பெட்டிகளை மக்களுக்கு வழங்க, தற்போதைய ஆளும் அ.தி.மு.க தன்னுடைய பங்கிற்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் போன்ற மின் உபகரணங்களை வழங்கிக்கொண்டிருக்க, மக்கள் மின்சாரத்தை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

எல்லா மக்களுக்கும்  உணவு, உடை, இருப்பிடம், மின்சாரம் போன்ற அடிப்படை தேவைகள் கிடைக்கப்பெற்றபின் அவர்களுக்கு தேவையான பிற வசதிகளை இலவசமாகவோ மானியவிலையிலோ அரசாங்கம் செய்து கொடுப்பதில் தவறில்லை. ஆனால், அடிப்படை வசதி இல்லாமல் பல ஆயிரம் மக்கள் தமிழகத்தில் இன்றும் வாழ்ந்துகொண்டு இருக்கும்பொழுது, அதைப்பற்றி  கவலைப்படாமல் ஓட்டுக்காக இரு கட்சிகளும் இலவச அரசியல் நடத்தி கொண்டிருப்பது நகைப்புக்குரியது. மின்சார தேவையை பெருக்குவதற்கு எல்லா வகையான வழிமுறைகளையும் தொழில்நுட்ப வல்லுநர்களைக்கொண்டு கண்டறிந்து செயல்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு மக்களை அறிவுறுத்துவதும் அரசின் தலையாய பணிகளில் ஒன்று.

சாலை விதிகளை மீறுவது, போதையில் வாகனங்களை இயக்குவது, போதிய ஓய்வு இல்லாமல் தொடந்து வண்டி ஓட்டுவது, நிர்ணயிக்கப்பட்ட வேகத்திற்கு அதிகமாக வண்டி ஓட்டுவது, முறையாக பராமரிக்கப்படாத வாகனங்களை இயக்குவது என்பன போன்ற பல காரணங்களால் தமிழகத்தில் தினம் தினம் நடைபெறும் விபத்துக்களால் உயிரிழப்பவர்கள் ஏராளம். ஆட்சியில் இருப்பவர்கள் விபத்துகளை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து புது திட்டங்களை வகுக்க வேண்டும். வழக்கில் இருக்கும் சட்டங்களை தவறிழைப்போர் மீது முறையாக பிரயோகிக்கும் வகையில் அதிகாரிகளை முடுக்கிவிட்டால் பெரும்பாலான விபத்துகளை தடுக்க முடியும். ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான பிரச்சினைகளில் இதுவும் ஒன்று.

டாஸ்மாக் மது விற்பனை மூலம் அரசுக்கு கிடைத்து வரும் வருமானத்தை கணக்கில்கொண்டு, பூரண மதுவிலக்கு கொண்டுவரும் எண்ணத்தில் அரசு இல்லை என்று தெரிந்தாலும், தீவிர குடிப்பழக்கதிற்கு ஆளாகுபவர்களை கட்டுப்படுத்த அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்க முற்படவில்லை. உயர்ரக மதுபான வகைகளை விற்பனை செய்வதற்காக எலைட் பார்களை திறப்பதில் ஆர்வம் காட்டும் அரசு மக்கள் நலனில் ஆர்வம் காட்டாமல் தவிர்ப்பது வேடிக்கை.

கட்டணம் உயர்ந்திருக்கிறதே தவிர, பேருந்துகளின் தரம் உயர்த்தப்படவில்லை. தமிழக அரசு விரைவு பேருந்து ஒன்றில் நமது முதல்வர் அல்லது மந்திரிகள்  தலைநகர் சென்னையில் இருந்து கடைக்கோடி கன்னியாகுமரி வரைக்கும் ஒரு பயணம் செய்து பார்த்தால்தான் தெரியும், மக்களின் சிரமம் மற்றும் அரசு பேருந்துகளின் அவல நிலைமை. 21-ஆம் நூற்றாண்டில் நாம் இருந்தாலும் அரசு பேருந்துகள் இன்னும் 20-ஆம் நூற்றாண்டை தாண்டவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. வசதியான பேருந்துகள், முறையான பராமரிப்பு இருந்தால்தான் மக்களுக்கு பாதுகாப்பான பயணம் கிடைக்கும்.

கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம் கிடப்பில் போடப்பட்டு மோனோ ரயில் திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. சென்னையின் போக்குவரத்து நெரிசலை மோனோ தீர்த்து வைக்குமா எனபது சந்தேகமே. இந்த திட்டத்தில் மக்களின் வரிப்பணத்தை வீணாக்குவதற்கு முன், அரசு போலி கவுரவத்தை விட்டொழித்து நிபுணர்களை கூட்டி ஆலோசனை செய்து கொள்வது மிகவும் அவசியம். ஏனென்றால் மோனோவுக்கு முன்மாதிரியான ஜப்பானிலேயே மிகவும் குறைந்த அளவில்தான் மோனோ செயல்பட்டு கொண்டிருக்கிறது.

வளர்ந்து வரும் விலைவாசிக்கு முக்கிய காரணம் பெட்ரோல், டீஸல் விலை உயர்வே. பெட்ரோல், டீஸல் விலை உயர்வை மத்திய அரசுடன் சேர்ந்து மாநில அரசு கட்டுப்படுத்த முயற்சி செய்தால் விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வரலாம்.

சேவை மனப்பான்மையில் செய்ய வேண்டிய கல்விக்கொடை, தனியார் பள்ளிகளின் கையில் கொள்ளையாக மாறி மக்களின் ரத்தத்தை உறிஞ்சிக்கொண்டு இருக்கிறது. தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்துவதற்காக கடந்த தி.மு.க ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்றைய அ.தி.மு.க ஆட்சியில் இந்த பிரச்சினை கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அரசு இதில் தலையிட்டு முறைப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் ஆசை.

கடந்த ஆட்சியில் நடைபெற்ற நில மோசடிகளை வெளிக்கொணர்வது மிகவும் நல்ல விஷயம் என்றாலும், நில மோசடியில் தற்போதைய ஆட்சியாளர்கள் ஈடுபடக்கூடாது என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு.

அண்டை மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பிரச்சினைகளை சட்டத்தின் துணைகொண்டு தீர்க்க முற்படுவதைவிட, இருமாநில மக்களின் நெடுநாள் நன்மைக்காக அந்தந்த மாநில முதல்வர்களுடன் கலந்தாலோசித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முற்படுவது சாலச்சிறந்தது.

நியாயமான பிரச்சினைகளுக்கு நியாயமான முறையில் போராடும் மக்களை, சமூக விரோதிகள் போல கையாளுவதை காவல்துறை தவிர்த்தால்தான் மக்களுக்கு நண்பனாக விளங்கமுடியும்.

ஏழை மக்களுக்காக மருத்துவ காப்பீடு திட்டம் நல்ல விஷயம் என்றாலும், அரசு மருத்துவமனைகள் கண்டிப்பாக மேம்படுத்தப்பட வேண்டும்.

முதல்வராய் இருந்தாலும், மந்திரியாய் இருந்தாலும், தான் தலைவன் மட்டுமல்ல, மக்கள் தொண்டன் என்ற எண்ணம் மனதில் இருந்தால் விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் பக்குவம் தானாக வரும். விமர்சனங்களை எதிர்கொண்டு, மக்கள் குறைகளை களைபவன்தான் நல்ல தலைவன். மக்கள் பிரச்சினைகளை விவாதித்து தீர்வு காணவேண்டிய சட்டசபையில், அளவுக்கு மீறிய தனிநபர் துதி தவிர்க்கப்படவேண்டிய ஒன்று.

அரசு இயந்திரம் முறைப்படுத்தபடவேண்டும் என்றால் முதல்வர், மந்திரிகள், உறுப்பினர்கள், அதிகாரிகள் என்று எல்லோரும் மாத ஊதியத்தை தவிர்த்து எந்தவிதமான லஞ்சத்தையும் வாங்க மறுத்து பணி செய்ய வேண்டும். நினைப்பதற்கு கனவு போல் இருந்தாலும் இது நடைமுறைக்கு சாத்தியமானதே.

இப்படி இன்னும் ஏராளமான தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகள் இருக்க, அரசு பல கோடி ரூபாய் செலவழித்து ஓராண்டு சாதனை என்று விளம்பரம்தேட முயற்சிப்பது மக்களாட்சிக்கு அழகல்ல. ஒரு சாமானியன் இவ்வளவு யோசிக்க முடியும் என்றால் அரசு இயந்திரம் எவ்வளவு யோசிக்க வேண்டும். ஒட்டு அரசியலை விட்டொழித்து, மக்கள் நலத்திட்டங்களில் எல்லாம் பண மோசடிகளை தவிர்த்து, மக்கள் நலனில் அக்கறைகொண்டு, எல்லா வளங்களிலும் தன்னிறைவு பெறுவதற்கான தொலை நோக்கு பார்வையில் அரசு செயல்படும் என்றால் புகழ் தானாக தேடி வரும் எனபதில் ஐயமில்லை.

வெள்ளி, 25 மே, 2012

கிரிக்கெட் என்னும் பொன் முட்டையிடும் வாத்து!


கிரிக்கெட் - இந்தியர்களின் ரத்தத்தில் கலந்த விளையாட்டு என்று என் கல்லூரி பேராசிரியர் ஒருவர் அடிக்கடி குறிப்பிடுவார். அப்பொழுதெல்லாம் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்றாலும் அவர் கூறியதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். என்னுடைய தாயார் கிரிக்கெட் பார்க்கும் பழக்கம் இல்லாதவர். சில வருடங்களுக்கு முன்பு எதேச்சையாக கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தவர், இப்பொழுது வெறித்தனமான கிரிக்கெட் ரசிகை.

கிரிக்கெட் - நம்மை ஆண்டவர்களிடமிருந்து நமக்கும் தொற்றிக்கொண்டது. முதலில் விளையாட்டாக ஆரம்பித்த இந்த விளையாட்டு, அதிகப்படியான ரசிகர்கள், அதிகப்படியான பணம், என்று இப்பொழுது பொழுது போக்கிற்கான ஒரு வணிக நிகழ்ச்சியாக மாறிவிட்டது.

கிரிக்கெட் - முன்பெல்லாம் தேசப்பற்றை ஊட்டுவதற்கு இதுவும் காரணியாக விளங்கியது. தான் செய்யும் தவறுகளிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காக அரசும் இதை ஆதரிக்க கிரிக்கெட் தவிர்த்து விளையாட்டுகளே இல்லை என்ற நிலை மக்கள் மனதில் விதைக்கப்பட்டது. இதன் விளைவாக கிரிக்கெட்டில் பணம் கொழிப்பதை உணர்ந்துகொண்ட பெருந்தலைகள் அரசு ஆதரவுடன் கிரிக்கெட் நிர்வாகங்களை ஏற்படுத்த, இன்று 11 பேர் விளையாட அதை 111 கோடி பேர் பார்க்க, 11 ஆயிரம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன் பெறுகிறார்கள்.

கிரிக்கெட் - 4 வருடங்களுக்கு ஒரு உலக கோப்பை, சில பல நாடுகளுக்கு இடையேயான போட்டி தொடர்கள் என்று நடந்து கொண்டிருக்கும் விளையாட்டு. சில வருடங்களுக்கு முன்பு கபில்தேவ் தலைமையில் ICL என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டு பல்வேறு நாட்டு வீரர்கள் கலந்து கொண்ட கிளப் அடிப்படையிலான 20-20 போட்டிகள் நடைபெற்றன. இந்த வகை போட்டிகளுக்கான வரவேற்பு மற்றும் பெரும் பணம் ஈட்டுவதற்கான வாய்ப்பினை தாமதமாக புரிந்து கொண்ட BCCI தன்னுடைய பெரும் அதிகார பலத்தால் ICL-ஐ விழுங்கி உருவாக்கிய போட்டிகள்தான் IPL.

ஒருநாள் முழுவதும் விளையாடும்படியான விளையாட்டை 3 மணி நேரமாக குறைத்தாகிவிட்டது. பல கோடிகளுக்கு அணிகளையும் விற்பனை செய்தாகிவிட்டது. இனி எப்படியெல்லாம் லாபம் பார்ப்பது என்று யோசித்த IPL நிர்வாகம் EPL கால்பந்து போட்டிகளை போல ஒரு அணியின் சொந்த மைதானத்தில் ஒருமுறை, எதிரணியின் சொந்த மைதானத்தில் இன்னொருமுறை மோதுவது என்று இந்தியாவிற்கு சற்றும் பொருந்தாத வகையில் கிட்டத்தட்ட 100 போட்டிகளை ஒரு போட்டித்தொடரில் நடத்துகிறது. IPL போட்டிகளின் துவக்கத்தில் ஆர்வம் காட்டும் மக்கள், இடையில் மறந்து, பிறகு போட்டித்தொடர் முடிவடையும் தருவாயில்தான் பார்க்கிறார்கள். காரணம், அணி உரிமையாளர்களின் லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்ட அதிகமான போட்டிகள்.

ஒரு கிரிக்கெட் போட்டியையாவது மைதானம் சென்று பார்க்க வேண்டும் என்று ஆர்வம் உள்ள இந்தியர்கள் ஏராளம். ஆனால் பெரும்பாலானவர்களை கிட்டே நெருங்கவிடமுடியாத அளவுக்கு போட்டி கட்டணம் இருக்கிறது. 3 மணிநேர சினிமாவிற்கு அதிகபட்சமாக 200 ரூபாய் செலவழிக்கும்போது, 3 மணி நேரம் வரும் IPL பொழுதுபோக்கிற்கும் இந்த அடிப்படையில்தான் கட்டணம் நிர்ணயித்திருக்க வேண்டும். ஆனால் IPL வியாபாரிகளின் பேராசை, அதிகபட்சம் 12000 ரூபாய் வரைக்கும் போட்டி கட்டணம் என்பது ரொம்ப அதிகம்.

IPL தொடர் தோன்றுவதற்கு முன்பே ரஞ்சி கோப்பை, துலீப் கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை, தியோதர் கோப்பை, சயேத் முஷ்டாக் அலி கோப்பை என்று பல போட்டி தொடர்கள் மாநிலங்கள் மற்றும் மண்டலங்களுக்குகிடையில் காலம் காலமாக இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. அந்தந்த மாநிலம் சார்பாக மாநில வீரர்கள் விளையாடும் இந்த போட்டிகளை யாரும் கண்டுகொள்வது இல்லை. ஆனால், தங்கள் மாநிலத்தை சார்ந்த விளையாட்டு வீரர்கள் IPL அணியில் இல்லை என்றாலும் தங்கள் மாநில IPL அணிக்காக கொடி பிடிக்கிறார்கள் என்றால், BCCI, IPL மற்றும் அணி உரிமையாளர்கள், ஊடகங்கள் விரித்துவரும் மிகப்பெரும் சதிவலையில் மக்கள் மாட்டிக்கொண்டுவிட்டார்கள் என்றுதான் சொல்ல தோன்றுகிறது. தங்கள் மாநில அணியை ரஞ்சி போட்டிகளில் ஆதரிக்காத மக்கள் வணிக அடிப்படையிலான IPL போட்டிகளுக்காக அடித்துக்கொள்வது உச்சபட்ச காமெடி.

இந்தியா பிற நாடுகளுடன் விளையாடும் பொழுது தேசப்பற்றை தூண்ட முற்படுவது ஒரு வகையில் சரி என்று ஒத்துக்கொண்டாலும், தற்பொழுது IPL போட்டிகளுக்கும் இந்திய கொடியை காண்பித்து தேசப்பற்றை தூண்டி லாபமடைய நினைப்பது கண்டனத்துக்குரியது.

இது மட்டுமல்லாமல், Karbonn catch, DLF maximum, என்று வணிக நோக்கிலான எரிச்சலூட்டும் விளம்பர வர்ணனைகள்; இதைப்போல single run, double run, wide ball, no ball என்று எல்லாவற்றிக்கும் வருங்காலத்தில் விளம்பர அடைமொழிக்கான வாய்ப்பு இருக்கிறது என்பதை நினைத்தால் அடிவயிற்றில் ஒருவித பீதி கிளம்புவதை தவிர்க்க முடியவில்லை.

இதையெல்லாம் வைத்து பார்க்கும்பொழுது, 'பொன் முட்டையிடும் வாத்து' கதைதான் ஞாபகம் வருகிறது. BCCI, IPL மற்றும் கிரிக்கெட் நிர்வாகிகள் தங்களுடைய பேராசையின் காரணமாக, கிரிக்கெட் என்னும் வாத்து பொன் முட்டை இடும் வரை காத்திருக்க விரும்பாமல், அதை அறுத்துப்பார்க்க துணிந்து விட்டார்கள்.

கிரிக்கெட் ரசிகன் என்னும் வகையில் சிறிது வருத்தமாக இருந்தாலும் கிரிக்கெட் தவிர்த்த பிற விளையாட்டுகளையும் விரும்புபவன் என்னும் முறையில், கிரிக்கெட்டின் அதிகப்படியான திணிப்பு, மக்களை பிற விளையாட்டுகளின் பால் திசை திருப்பும் என்பது குறித்து மகிழ்ச்சியே!