வெள்ளி, 31 மே, 2013

ஆல்ப்ஸ் (Alps) மலை காற்றினிலே ...


பணி நிமித்தமாக கடந்த 2012 ஆம் ஆண்டு முழுவதும் ஜெர்மனி (Germany) நாட்டில் யூபெர்லிங்கென் (Ueberlingen) என்னும் இடத்தில் வசிக்க நேரிட்டது. யூபெர்லிங்கென் நகரம் தென்மேற்கு ஜெர்மனியில் பேடன்-வுர்ட்டேம்பெர்க் (Baden-Wuerttemberg) மாநிலத்தில் கான்ஸ்டன்ஸ் ஏரிக்கரையில் (Lake Constance) அமைந்துள்ளது. பேடன்-வுர்ட்டேம்பெர்க் மாநிலம் ஜெர்மனி சுவிட்சர்லாந்து (Switzerland) எல்லையில் அமைந்துள்ளபடியால் முதல் சுற்றுலா பயணமாக சுவிட்சர்லாந்து செல்வது என்று முடிவெடுக்கப்பட்டது.

சுவிட்சர்லாந்து

செப்டம்பர் 1,2,3 - 2012

முதல் நாள்

நான், எனது மனைவி மற்றும் எங்கள் 10 மாத பெண் குழந்தை ஆகிய மூவரும் காலை 6 மணி யூபெர்லிங்கெனிலிருந்து ட்ரெயின் (train) மூலமாக சஃபாசென் (Schaffhausen) வந்தடைந்தோம். எங்களுடைய முதல் இலக்கு மௌண்ட் டிட்லிஸ் (Mt.Titlis). சஃபாசென்னிலிருந்து சூரிச் (Zurich), லுசெர்ன் (Luzern) வழியாக 10 மணி அளவில் எங்கெல்பெர்க் (Engelberg) வந்தடைந்தோம். எனக்கு ஏற்கனவே பனி பரிச்சயம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. என் மனைவி முதல் முறை பனி மலையில் நடை பழக மிகுந்த ஆவலுடன் இருந்தார். எங்கெல்பெர்கிலிருந்து கிட்டத்தட்ட அரை மணி நேர ரோப் கார் (rope car) பயணத்தில் டிட்லிஸ் சிகரத்தை அடைந்தோம்.

பஞ்சு பொதி போன்று பனி சூழ்ந்திருந்த ஆல்ப்ஸ் மலையின் ஒரு பகுதியான டிட்லிஸ் சிகரத்தை கண்டவுடன் என் மனைவியின் கண்கள் ஆச்சர்யத்தால் விரிவதை நான் பெருமையுடன் பார்க்க, எங்கள் குழந்தை சிரிக்க ஒரு அற்புதமான அனுபவத்திற்கு தயாரானோம். குழந்தையை என் கையில் ஒப்படைத்துவிட்டு கால் முட்டு அளவு பனியில் இறங்கி என் மனைவி விளையாடிக்கொண்டிருக்க நான் வேடிக்கை பார்க்க தொடங்கினேன். மலை உச்சியில் இருந்து அடிவாரத்தை பார்க்க அமைக்கப்பட்ட டவர் (tower), அதிகமான பனி பொழிவின் காரணமாக முழுவதும் பனியால் சூழப்பட்டு இருந்தது. பனிச்சறுக்கு போன்ற விளையாட்டுகள் தடை செய்ய பட்டிருந்தன. சுவிட்சர்லாந்த்தில் உள்ள சுற்றுலாதலங்களுக்கு பெரும்பாலும் இந்தியர்கள்தான் அதிகமாக வருகை புரிவார்கள் எனபதை உணர்த்தும் வகையில் ஷா-ருக்-கான் கஜோல் ஜோடி கட்டவுட்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தன.

தாயார் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்த மகள், தானும் கலந்துகொள்ள என் பிடியில் இருந்து நழுவ எத்தனித்து கொண்டிருந்தாள். அவளை சிறிது நேரம் தாயிடம் ஒப்படைத்து விட்டு என் கேமரா கண்களால் படமெடுக்க தொடங்கினேன். குழந்தை பனியை தொட்டு பார்த்து குதூகலித்துகொண்டிருக்கும் வேளையில் திடீரென்று பனிப்புயல் அடிக்கத் தொடங்க மனைவியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு அங்கு இருந்த கட்டிடதிற்குள் நுழைந்தேன்.

அங்கு இருந்த போட்டோ ஸ்டுடியோ-வில் (photo studio) வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை பார்த்துக்கொண்டிருந்தபொழுது, கிரிக்கெட் வீரர் சேவாக் அவர் மனைவியுடன் சுவிட்சர்லாந்து நாட்டின் பாரம்பரிய உடையணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் கண்ணில் பட்டது. அதுபோல் புகைப்படம் எடுக்க எண்ணி ஸ்டுடியோ-விற்குள் நுழைந்தோம். புகைப்படத்திற்கான கட்டணம் மிகவும் அதிகம் என்றாலும் அந்த பாரம்பரிய உடையால் ஈர்க்கப்பட்டு புகைப்படம் எடுக்க முடிவு செய்தோம். அங்கிருந்த உதவியாளர் உதவியுடன் நான், என் மனைவி மற்றும் குழந்தை ஆடை அணிந்து புகைப்படத்திற்கு தயாரானோம். புகைப்படக்காரர் அறிவுரைப்படி என் மனைவி அமர்ந்திருக்க, நான் குழந்தையை வைத்துக்கொண்டு நின்றிருந்தேன். குழந்தை வழக்கம்போல் அடம்பிடிக்க, முடிவில் அம்மா குழந்தையை வைத்துக்கொள்ள நான் அருகில் அல்ப்ஹொர்ன் (Albhorn) என்னும் மரத்தாலான இசைக்கருவி ஏந்திக்கொண்டிருக்கும் வகையில் புகைப்படம் எடுக்கப்பட்டது.

பனிபொழிவு நின்றுவிட, மேலும் பனியில் நேரம் போவது தெரியாமல் விளையாடிக்கொண்டிருந்தோம். மீண்டும் ரோப் கார் மூலம் கீழிறங்கி மலை அடிவாரத்தை எட்டுகையில் நேரம் மாலை 5 மணி ஆகி இருந்தது. பன், பிரட் வகையறாக்களை சாப்பிட்டு மதிய உணவை தவிர்த்ததால் மிகவும் பசியாக உணர்ந்தோம். நல்ல வேளையாக ஒரு நடமாடும் இந்திய உணவகம் கண்ணில் பட்டது. இட்லியை பார்த்தவுடன் பசி அதிகரிக்க இட்லி வாங்கி சாப்பிட்டோம். குழந்தைக்கு சிறிது இட்லி ஊட்டியவுடன் உற்சாகமான குழந்தை தரையில் விளையாட ஆரம்பிக்க, நாங்கள் குளிருக்கு இதமாக மசாலா டீ (tea) அருந்தினோம்.

முதல் நாள் பயணம் வெற்றிகரமாக முடிய, மீண்டும் லுசெர்ன் வழியாக பெர்ன் (Bern) வந்து, அங்கிருந்து இன்டர்லேகன் (Interlaken) வந்தடைந்தோம். அங்கு தங்குவதற்கு நாங்கள் முன்பதிவு செய்து வைத்திருந்த வீட்டின் முதலாளி, ஸ்டேஷன் வந்து அவரது காரில் அழைத்து சென்றார். அந்த வீடு ப்ரியன்ஸ் ஏரிக்கரையில் (Lake Brienz) அமைந்திருந்தது. வீடிற்கு முன் அருமையான தோட்டம் அமைந்திருந்தது. அடுத்த நாள் அதிகாலையில் தோட்டத்தில் அமர்ந்தபடி ஏரியை ரசித்துக்கொண்டிருந்தது இன்னும் கண்களுக்குள்ளேயே இருக்கிறது.

இரண்டாவது நாள்

டாப் ஆஃப் ஈரோப் (Top of Europe) என்று அழைக்கப்படும் யுங்க்ப்ராயொக் (Jungfraujoch) பனி மலை சிகரத்திற்கு செல்வதுதான் இன்றைய திட்டம். திட்டமிட்டபடி காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி இன்டர்லேகன் வந்தோம். அங்கிருந்து டாப் ஆஃப் ஈரோப் செல்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒரு வழி கிரின்டெல்வேல்ட் (Grindelwald), இன்னொரு வழி லாடெர்ப்ருன்னேன் (Lauterbrunnen). கிரின்டெல்வேல்ட் வழியாக செல்வது என்று முடிவு செய்து ட்ரெயினில் கிளம்பினோம்.

கிரின்டெல்வேல்ட் வரை சாதாரண ட்ரெயினில் சென்று, பின்பு அங்கிருந்து சிறப்பு மலை ட்ரெயின் மூலம் டாப் ஆஃப் ஈரோப் நோக்கி பயணமானோம். வழக்கமான ரயில் தடத்தில் ட்ரெயின் சக்கரம் செல்வதற்க்காக ஒன்றோடு ஒன்று இணையாத இரண்டு இரும்பிலான தடங்கள் இருக்கும். ஆனால் இந்த மலை ட்ரெயின் செல்வதற்கான பாதையில் இரு தடங்களுக்கு மத்தியில் ட்ரெயினில் அமைந்துள்ள பல்சக்கரங்களுக்காக ஒரு தடமும் உள்ளது. இந்த தடம் மலையில் ஏறும்பொழுது ட்ரெயினுக்கு தேவையான பிடிமானத்தை கொடுக்கும். போகும் வழியில் பனியால் சூழ்ந்த மலைகளை ரசிப்பதற்காக ஆங்காங்கே ட்ரெயின் 5 நிமிடம் நின்றபடியே சென்றுகொண்டிருந்தது. மனைவியும் குழந்தையும் பனியை ரசித்துக்கொண்டிருக்க, டாப் ஆஃப் ஈரோப் செல்வதற்கான இந்த பாதையை எப்படி அமைத்திருப்பார்கள் என்று நான் வியந்து கொண்டிருந்தேன். சரியாக காலை 10:30 மணி அளவில் சிகரத்தை அடைந்தோம்.

நாங்கள் சென்ற பொழுது அந்த இடத்திற்கு ட்ரெயின் சேவை தொடங்கப்பட்டு 100 வருடம் நிறைவு செய்ததற்கான கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. நாங்கள் அனுமதி சீட்டுடன் கொடுக்கப்பட்ட அடையாள அட்டையில் அங்கு சென்தற்கான தேதியுடன் கூடிய அடையாளத்தை பதிவு செய்து கொண்டோம்.  

முதலில் பனியில் செதுக்கப்பட்ட சிலைகளை கொண்ட பனி மாளிகைக்கு சென்றோம். வழுக்கி விழுவதற்க்கு ஏதுவான பனியால் அமைக்கப்பட்ட தரையில் மிகவும் கவனமாக நடந்து பனிச்சிலைகளை கண்டு ரசித்தோம். அதன் பிறகு கட்டிடத்திற்க்கு வெளியே வந்து பனியில் விளையாட தொடங்கினோம். மைனஸ் 20 டிகிரி சென்ற்றிக்ரேட் (Degree Centigrade) கால நிலையில் குளிர்ந்த காற்றும் சேர்ந்து வீச, அணிந்திருந்த குளிர் தாங்கும் உள்ளாடைகள் சட்டை ஸ்வெட்டர், ஜாக்கெட் இவை எல்லாவற்றையும் மீறி லேசான வலியினை இதயத்தில் உணர முடிந்தது. குழந்தையை அங்கு அதிக நேரம் வைத்துக்கொண்டிருப்பது ஆபத்து என்பதை உணர்ந்த என் மனைவி கட்டிடத்திற்க்குள் சென்றுவிட நான் மட்டும் பனிமலையில் பிற சுற்றுலா பயணிகளுடன் குளிரை அனுபவித்துக்கொண்டிருந்தேன். எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து விட்டது போன்ற பெருமித உணர்வுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன்

அதன் பிறகு அங்கு இருந்த சீன ரெஸ்டாரென்டில் (Chinese restaurant) ஒரு மசாலா டீ குடித்துவிட்டு 3571 மீட்டர் (meter) - 11782 அடி உயரத்தை குறிக்கும் டவருக்கு லிப்டில் (lift) சென்றோம். அங்கு சென்று புகைப்படம் எடுத்துக்கொண்டு மீண்டும் கீழே வந்தோம். என்னதான் சுவிட்சர்லாந்து அதிக செலவு வைக்கும் சுற்றுலாதலம் என்றாலும் இந்தியர்கள் மிகவும் விரும்பி செல்லும் இடம் என்பதை அங்கேயும் உணர முடிந்தது. பாலிவுட் ரெஸ்டாரென்ட் (Bollywood Restaurant) என்ற பெயரில் ஒரு உணவருந்தும் இடம் டாப் ஆஃப் ஈரோப்-ல் அமைந்துள்ளது.


இந்தியர்களை தவிர்த்து சீன மக்களையும் அங்கு நிறைய காண முடிந்தது. அங்கு சென்று வந்ததற்கான நினைவாக சில நினைவு பொருட்களை வாங்கிக்கொண்டு அங்கு வந்திருந்த இந்தியாவை சேர்ந்தவர்களிடம் சிறிது நேரம் அளவளாவிக்கொண்டு மீண்டும் அடிவாரத்தை நோக்கி ட்ரெயினில் கிளம்பினோம்.

இம்முறை லாடெர்ப்ருன்னேன் வழியாக இன்டர்லேகன் வந்தடைந்தோம். மாலை 5:30 மணி அளவில் வந்து விட்ட படியால் அந்த நகரத்தை சுற்ற கிளம்பினோம். ஜெர்மனியில் பெரும்பாலான மக்கள் ஜெர்மன் மொழியில்தான் பதிலளிப்பார்கள். ஜெர்மனி போல் அல்லாமல் அங்குள்ள மக்களிடம் ஆங்கிலத்தில் சரளமாக உரையாட முடிந்தது. நகர்வலம் முடிந்த பிறகு லிட்டில் இந்தியா (Little India) என்னும் இந்திய உணவகத்தில் உணவருந்திவிட்டு தங்கியிருந்த வீட்டுக்கு வந்தடைந்தோம். அடுத்தநாள் செல்லவேண்டிய இடங்களை திட்டமிட்டபடியே தூங்கிப்போனோம்.

மூன்றாவது நாள்

மூன்றாவது நாள், தங்கியிருந்த வீட்டை காலி செய்துவிட்டு இன்டர்லேகன் நகரத்திற்கு வந்தோம். குழந்தைக்கு தேவையான பொருட்களை மட்டும் கையில் வைத்துக்கொண்டு பிற பொருட்களை ரயில்வே நிலையத்தில் உள்ள பொருட்கள் பாதுகாக்கும் அறையில் வைத்துக்கொண்டு ட்ருமெல்பெக் (Trummelbach) நீர்வீழ்ச்சி நோக்கி ட்ரெயினில் பயணமானோம்.இந்த நீர்வீழ்ச்சியின் சிறப்பு அம்சம் என்ன வென்றால் பாறைகளுக்கு உள்ளே பாயும் வகையில் அமையப் பெற்றது. வெளியில் இருந்து பார்க்கும் பொழுது எதுவும் தெரியாது. பாறைகள் ஊடே பயணித்து மலை உச்சி வரை சென்று பார்க்கும் வகையில் படிகள் மற்றும் லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பாறையில் மோதி விழுவதால் எழும் கடும் இரைச்சல் சத்தம் குழந்தைக்கு ஆபத்து என்று அனுமதிக்க மறுத்து விட்டார்கள். அதனால் தன்னந்தனியாக அருவியை உச்சி வரை சென்று பார்த்து ரசித்து வந்தேன்.

இன்டர்லேகன் நகரம் ப்ரியன்ஸ் மற்றும் துன் (Thun) என்னும் இரண்டு பெரிய ஏரிகள் சங்கமிக்கும் இடத்தில அமைந்துள்ளது. இந்த சங்கமத்தை பறவை பார்வையில் பார்க்கும் வகையில் நகரத்தின் மத்தியில் இருக்கும் மலை குன்றின் மேல் அமைந்துள்ள இடம்தான் ஹர்டர் குல்ம் (Harder Kulm). அங்கு செல்வதற்க்கு செங்குத்தாக மலை மேல் ஏறும் ஒரே ஒரு பெட்டி மட்டும் கொண்ட ட்ரெயின் அமைக்கப்பட்டுள்ளது

அருவியை கண்டு கழித்தபின் மீண்டும் நகரத்திற்க்கு வந்து ஒற்றை பெட்டி ட்ரெயின் மூலம் ஹர்டர் குல்ம் வந்தடைந்தோம். அந்த ரயில் பயணம் குறைவான நேரம் என்றாலும் த்ரில்லான அனுபவத்தை தர தவறவில்லை. மலை விளிம்பில் நின்று கொண்டு பார்க்கும் வகையில் அமைந்த இடத்தை நோக்கி என் மனைவி உற்சாகமாக செல்ல, நான் குழந்தையை வாங்கி கொண்டு பின் வாங்கினேன். உயரம் எனக்கு அலர்ஜி (allergy) என்பதால், விளிம்பில் நின்று கொண்டு இரு ஏரிகளும் இணையும் அழகை ரசித்துக்கொண்டிருந்த என் மனைவியை படம் எடுத்துக்கொண்டிருந்தேன். குழந்தை வழக்கம் போல் அடம் பிடிக்க, குழந்தையை நான் கீழே விட பயம் அறியாத குழந்தை உற்சாகமாக அங்கும் இங்கும் ஓடி விளையாடிக்கொண்டிருந்தது



மாலை ஆகிவிட்டபடியால் ஏற்கனவே திட்டமிட்டபடி இன்டர்லேகனில் இருந்து மீண்டும் யூபெர்லிங்கென் வர வேண்டும். சிறிது நேரம் ஷாப்பிங் (shopping) செய்துவிட்டு, மெக்டொனல்ட்ஸ்-ல் (McDonalds) பர்கர் (burger) சாப்பிட்டோம். பின்னர் ரயில் நிலையத்தில் வைத்திருந்த பெட்டிகளை எடுத்துக்கொண்டு, இன்டர்லேகனில் இருந்து ட்ரெயின் மூலம் பெர்ன் வந்து, அங்கிருந்து சூரிச் வழியாக சஃபாசென் வந்தடைந்தோம். அங்கிருந்து யூபெர்லிங்கென் வந்து வீடு சேர இரவு 10:30 மணி ஆகிவிட்டது. மூன்று நாள் பயணம், காலம் முழுவதும் நினைவு கொள்ளத்தக்க வகையில் வெற்றிகரமாக அமைந்ததால் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தோம்.