திங்கள், 29 நவம்பர், 2010

ஆசிய விளையாட்டு போட்டிகள் 2010 - சில துளிகள்





வரலாற்றுத் துளிகள்!

* ஆசிய விளையாட்டு போட்டிகள் நான்காண்டுகளுக்கு ஒரு முறை ஆசிய நாடுகளின் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்குபெறும் பிரம்மாண்டமான விளையாட்டுப் போட்டிகளாகும்.

* முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 1952-ஆம் ஆண்டு இந்தியாவின் தலை நகரம் புது தில்லியில் நடைபெற்றன.

* உலக அளவில் ஒலிம்பிக்ஸ்-க்கு அடுத்து இரண்டாவது பெரிய விளையாட்டு திருவிழா ஆசிய விளையாட்டு போட்டிகள்.


* தற்பொழுது சீன நகரம் குவாங்சு-வில் நடந்து முடிந்தது 16-வது ஆசிய விளையாட்டு போட்டிகள்.


தங்கத் துளிகள்!

* இந்தியாவின் முதல் தங்கத்தை பில்லியர்ட்ஸ் தனிநபர் பிரிவில் வென்று தங்க வேட்டையை துவக்கி வைத்தார் பங்கஜ் அத்வானி.

* துடுப்பு படகு தனிநபர் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங்லால் தாக்கர் தங்கப்பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார்.

* ஆண்கள் ஒற்றையர் டபுள்டிராப் பிரிவு துப்பாக்கிச்சுடும் போட்டியில் ரஞ்சன் சோதி தங்கம் வென்றார்.

* 10,000 மீட்டர் மகளிர் ஓட்டப்பந்தய பிரிவில் பிரீஜா ஸ்ரீதரன் தங்கம் வென்றார்.

* 3000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் வீராங்கனை சுதா சிங் தங்கப் பதக்கம் வென்றார்.

* டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் சோம்தேவ் தேவ்வர்மன், சனம் சிங் இணை தங்கத்தை வென்றது.

* டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சோம்தேவ் தேவ்வர்மன் தங்கம் வென்றது புதிய வரலாறு, இத்துடன் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்று இந்தியாவின் "தங்க நாயகன்" ஆனார்.

* மகளிர் 400மீ தடை ஓட்ட போட்டியில் அஷ்வினி சிதானந்தா தங்கம் வென்றார்.
* இதே போட்டியின் ஆடவர் பிரிவில் ஜோசப் ஆப்ரகாம் தங்கம் வென்றார்.

* ஆடவர் குத்துச் சண்டை போட்டியில் 60கிலோ உடல் எடைப்பிரிவில் விகாஸ் கிருஷ்ணன் தங்கம் வென்றார்.

* மகளிர் கபடி போட்டியில் தாய்லாந்தை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது.

* ஆடவர் கபடி போட்டியில் ஈரானை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது.
தொடர்ந்து 6-வது முறையாக தங்கம் வென்று சாதனையை தொடர்கிறது இந்திய கபடி அணி.

* மன்ஜீத் கௌர், சினி ஜோஸ், அஸ்வினி சிதானந்தா, மன்தீப் கௌர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி மகளிர் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றது.

* 75 கிலோ எடைப்பிரிவு ஆடவர் குத்துச் சண்டை இறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீரர் விஜேந்தர் சிங் தங்கம் வென்றார். நிறைவு விழாவில் இந்திய தேசியக் கொடியை ஏந்தி இந்திய அணியை வழிநடத்தினார் "தங்க மகன்" விஜேந்தர் சிங்.


குறிப்பிடத்தக்க வெள்ளி துளிகள்!

* 10 மீட்டர் ஏர்ரைபில்ஸ் போட்டியில் ககன்நரங் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

* பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் குழு பிரிவில் ஹீனா சித்து, அனு ராஜ் சிங், சோனாய் ராய் ஆகியோர் ஒரு புள்ளி வித்தியாசத்தில் தங்கத்தை தவற விட்டு வெள்ளி வென்றனர்.

* டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா, விஷ்ணு வர்தன் இணை வெள்ளி வென்றது.

* 10,000 மீட்டர் மகளிர் ஓட்டப்பந்தய பிரிவில் கவிதா ரெளத் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

* 60 கிலோ ஊஷு போட்டி, சான்ஷோ பிரிவில் சந்தியாராணி தேவி வெள்ளி வென்றார்.

* தனிநபர் வில்வித்தை போட்டியில் வில்வித்தை வீரர் தருண்தீப் ராய் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

* குத்துச் சண்டை போட்டியில் சந்தோஷ் குமார் (64 கிலோ), தினேஷ் குமார் (81 கிலோ), மன்பிரீத் சிங் (91 கிலோ) தத்தமது பிரிவுகளில் வெள்ளி பதக்கம் வென்றனர்.


குறிப்பிடத்தக்க வெண்கலத் துளிகள்!

* பில்லியர்ட்ஸ் 8-பால் பூல் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் அலோக் குமார்.

* ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் பிரிவில் ஆஷிஷ் குமார் வெண்கலம் வென்று, இந்த பிரிவில் இதுவரை ஆசியப் போட்டிகளில் பதக்கம் இல்லாத நிலையைப் போக்கினார்.

* நீச்சல் வீரர் வீர்தவால் கடே 50மீ பட்டர்ஃபிளை போட்டியில் வெண்கலம் வென்றார். இப்பிரிவில் முதன் முறையாக பதக்கம் வென்றது இந்தியா.

* வில்வித்தை போட்டி மகளிர் அணி பிரிவில் தீபிகா குமாரி, போரா பானர்ஜி, ரிமில் புரியுல் வெண்கலம் பெற்றுத் தந்தனர்.

* பெண்கள் தனிநபர் சதுரங்க போட்டியில் ஹரிகா துரோணவல்லி வெண்கலம் வென்றார்.

* ஆண்கள் குழு சதுரங்க போட்டியில் சசிகிரண், சூர்ய சேகர் கங்குலி, அதிபன் மற்றும் கோபால் ஆகியோரை கொண்ட அணி வெண்கலம் வென்றது.

* ஆடவர் தனிநபர் ப்ரீ ஸ்கேட்டிங் பிரிவில் இந்திய வீரர் அனுப் குமார் யாமா வெண்கலம் வென்றார். ஜோடிப் பிரிவில் அனுப் - அவானி பஞ்சால் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தைத் தட்டிச் சென்றனர்.


ஏமாற்றத் துளிகள்!

* காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் துப்பாக்கிச் சுடுதலில் தங்க பதக்கத்தை குவித்ததையடுத்து, ஆசிய விளையாட்டு போட்டியிலும் இந்த வெற்றி தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஒரு தங்கம், சில வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை மட்டுமே வெல்ல முடிந்தது பெரிதும் ஏமாற்றமளித்தது.

* நட்சத்திர இறகுப்பந்து வீராங்கனை சாய்னா நெஹ்வால் ஒரு பதக்கம் கூட வெல்ல முடியாமல் போனது மற்றுமொரு ஏமாற்றம்.


நம்பிக்கை துளிகள்!

* குத்துச் சண்டை போட்டியில் 2 தங்கம், 3 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்கள் வென்றுள்ளது, வரும் காலங்களில் இவ்விளையாட்டு மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

* 609 வீரர், வீராங்கனைகளுடன் களம் இறங்கிய இந்தியா 14 தங்கம் உள்பட 64 பதக்கங்களுடன் 6-வது இடம் பிடித்தது.

* கடந்த 2006-ம் ஆண்டு தோகாவில் நடந்த ஆசிய விளையாட்டை விட இப்போது இந்தியாவின் செயல்பாடு மேம்பட்டு இருக்கிறது. கடந்த முறை இந்தியா 10 தங்கம் உள்பட 53 பதக்கத்துடன் 8-வது இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தது.

* அத்துடன் ஒட்டுமொத்த ஆசிய விளையாட்டு வரலாற்றில் இந்தியா அதிகபதக்கங்கள் வென்ற போட்டியாகவும் இது பதிவாகி இருக்கிறது. 1982-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் 57 பதக்கம் வென்றதே இந்தியாவின் முந்தைய அதிகபட்சமாக இருந்தது.


* 199 தங்கப் பதக்கங்களுடன் போட்டிகளை நடத்திய சீனா முதனிலை பெற்றது. தென்கொரியா 2-வது மற்றும் ஜப்பான் 3-வது இடம் பிடித்தன.

* 17 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தென்கொரியா நாட்டின் இன்சான் நகரில்
2014-ல் நடைபெற உள்ளன.


டிஸ்கி:
ஆசிய விளையாட்டு போட்டியில் முதன்முறையாக 20-20 கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட வேறு தொடர்களை காரணம் காட்டி இந்திய கிரிக்கெட் நிர்வாகம் கிரிக்கெட் போட்டிக்கு அணி அனுப்ப மறுத்துவிட்டது. கிரிக்கெட் அணி சென்று இருந்தால், கிரிக்கெட் போட்டியை தவிர்த்து வேறு எந்த போட்டிக்கும் இந்திய ஊடகங்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் முக்கியத்துவம் வழங்கி இருக்க மாட்டார்கள் என்பதால், இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் முடிவு பாராட்டுக்குரியது.

செவ்வாய், 19 அக்டோபர், 2010

காமன்வெல்த் விளையாட்டு திருவிழா 2010

சர்ச்சைகளை தவிர்த்து விட்டு பார்த்தால், முதல் முறையாக காமன்வெல்த் (11-வது) போட்டிகளை தில்லியில் சிறப்பாகவே நடத்தி முடித்திருக்கிறது இந்தியா!


இதோ! சில சாதனை துளிகள்:

* இந்த போட்டியின் "தங்க மகன்" ககன் நரங் இந்தியாவிற்க்கான முதல் தங்கத்தை "ஒலிம்பிக் நாயகன்" அபினவ் பிந்த்ராவுடன் சேர்ந்து 10மீ ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் சுட்டு தந்தார்.

* ககன் நரங் வென்ற தங்க பதக்கங்கள் மொத்தம் நான்கு, இரு தனி நபர் , இரு குழு போட்டி.

* துப்பாக்கிச்சுடும் வீராங்கனை அனிஸா சயீத் வென்ற தங்க பதக்கங்கள் இரண்டு, ஒரு தனி நபர், ஒரு குழு போட்டி.

* மல்யுத்த வீராங்கனை அல்கா டோமர் கனடா வீராங்கனை டோன்யா-வை வீழ்த்தி தங்கம் வென்றார்.

* 16-றே வயதான தீபிகா குமாரி வில்வித்தை போட்டியில் தங்கம் வென்றார்.

* உலக விளையாட்டுப் போட்டிகளில் முதல் முறையாக ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் பதக்கம் வென்றது இந்தியா. ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என இரு பதக்கங்களையும் வென்று இச்சாதைனையை நிகழ்த்தினார் ஆஷிஷ் குமார்.

* நட்சத்திர வீரர்கள் லியான்டர் பயஸ், மகேஷ் பூபதி ஏமாற்றிய நிலையில் சோம்தேவ் தேவ்வர்மன் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்றது சிறப்பு.

* மல்யுத்த போட்டியில் தங்கம் வென்ற சுஷில் குமார் இந்த காமன்வெல்த் போட்டியின் ஆகச்சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டார்.

* "பறக்கும் சீக்கியர்" மில்கா சிங்க்கிற்கு பிறகு 52 வருடங்கள் கழித்து தடகளத்தில் முதல் தங்கம் வட்டு எறிதல் போட்டியில் பெற்று தந்தார் கிருஷ்ணா பூனியா, இப்போட்டியில் இந்திய வீராங்கனைகள் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களையும் வென்று அழகுக்கு அழகு சேர்த்தனர்.

* சரத் கமல் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் போட்டியில் கோட்டைவிட்ட தங்கத்தை சுபாஜித் சஹாவுடன் சேர்ந்து இரட்டையர் போட்டியில் வென்றுகாட்டினார்.

* சமீப காலங்களாக சோபிக்காத இந்திய ஹாக்கி அணி, அரைஇறுதியில் இங்கிலாந்தை வென்று இறுதியை எட்டியது. இறுதி போட்டியில் உலகசாம்பியன் ஆஸ்திரேலியாவிடம் தோற்றுப்போனாலும் முதல் முறை காமன்வெல்த் பதக்கத்தை (வெள்ளி) வென்றது இத்திருவிழாவின் சிறப்புகளில் ஓன்று.

* "தங்க மங்கை" சாய்னா நெஹ்வால் இறகுப்பந்து போட்டியில் தங்கத்தை வென்றதோடு மட்டுமல்லாமல் இந்தியாவின் இரண்டாவது இடத்தையும் உறுதி செய்தது முத்தாய்ப்பு. (முதலிடம்: ஆஸ்திரேலியா, மூன்றாமிடம்: இங்கிலாந்து)


* 10 தங்க பதக்கங்களுக்குமேல் பெற்றுத்தந்து துப்பாக்கிச்சுடுதல் விளையாட்டு இந்தியாவின் முதன்மை பதக்க வேட்டை விளையாட்டாக உருவெடுத்திருக்கிறது.

* கடந்த இரு காமன்வெல்த் போட்டிகளில் பதக்கப்பட்டியலில் நாலாவது இடம் பிடித்த இந்தியா, இம்முறை இரண்டாவது இடம் பிடித்தது இதுவரை நடந்த காமன்வெல்த் போட்டிகளில் சிறப்பான பதிவு.

* 2002 போட்டியில் 30 தங்க பதக்கங்களை குவித்த இந்தியா, இம்முறை 32 பதக்கங்களை பெற்று பழைய சாதனையை முறியடித்தது. ஒட்டுமொத்தமாக 100 பதக்கங்களுக்குமேல் முதல் முறை வென்றது மற்றுமொரு சாதனை.


இந்த காமன்வெல்த் போட்டியில் இந்திய அணியின் சிறந்த செயல்பாடு, அடுத்து வரும் ஆசியா மற்றும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை பெரிதும் எதிர்பார்க்க வைத்திருக்கிறது. 2012 லண்டன் ஒலிம்பிக்ஸ்-ல் பத்து பதக்கங்கள் வரை எதிர் பார்க்கலாம் என்பது என் எண்ணம்.

வெள்ளி, 5 மார்ச், 2010

உலகக்கோப்பை ஹாக்கி திருவிழா 2010 - 2

கிரிக்கெட் உலகின் பிதாமகன் பிராட்மேனுக்கு இணையாக போற்றப்படுபவர் இந்திய ஹாக்கி வீரர் தயான் சந்த். மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் (1928, 1932, 1936) தங்கம் வென்ற இந்திய அணியில் விளையாடியவர் பத்ம பூஷன் தயான் சந்த். ஹாக்கி மந்திரவாதி (Wizard of Hockey) என்று அழைக்கபடுபவர் இந்த தயான் சந்த். இவர் தன்னுடைய இறுதிக் காலங்களை மருத்துவமனையில் கழித்த பொழுது, இந்திய அணியின் அன்றைய நிலைமையைப் பார்த்து, இந்திய ஹாக்கி செத்துக் கொண்டு இருக்கிறது என்று கூறினாராம். நேற்றைய இந்திய ஸ்பெயின் ஆட்டத்தைப் பார்த்தபோது இதுதான் ஞாபகத்துக்கு வந்தது.

முதல் போட்டியில் பாகிஸ்தானை வென்ற நமது அணி, இரண்டாவது போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவிடம் தோற்றுப்போனது. மூன்றாவது போட்டியான ஸ்பெயினுக்கு எதிரான நேற்றைய போட்டியில் கண்டிப்பாக வென்றால்தான் அரைஇறுதிக்கு முன்னேற வாய்ப்பு என்கிற நிலையில் நமது அணி தோற்றது பரிதாபம். இந்திய அணி வீரர்கள் சிறப்பாகத்தான் ஆடினார்கள் என்றாலும் கோல் அடிக்க கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் வீணாக்கினார்கள். ஆனால் ஸ்பெயின் அணி வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் அத்தனையும் கோலாக மாற்றினார்கள். இனி அரைஇறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு மிகவும் அரிது என்றாலும் மீதமிருக்கும் இரு போட்டிகளை வென்றால் ஒரு கெளரவமான இடத்தை பிடிக்கலாம்.

இந்திய அணியின் தோல்வி, விளையாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் என்றாலும், பிற அணிகள் மோதும் போட்டிகளும் மிகவும் சிறப்பாகவே உள்ளன. பொதுவாக விளையாட்டு ரசிகர்கள் எந்த அணி விளையாடுகிறது என்பதை விட விளையாட்டு எவ்வளவு சுவாரஸ்யம் தருகிறது என்பதை பொறுத்தே ரசிப்பார்கள். அந்த வகையில் இந்த உலகக்கோப்பையின் போட்டிகள் அனைத்தும் விறுவிறுப்பாகவே உள்ளன. இறுதி போட்டிகள் நெருங்கி வருகின்ற வேளையில் கோப்பையை வெல்லப் போவது யார் என்ற ஆர்வமும் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

செவ்வாய், 2 மார்ச், 2010

உலகக்கோப்பை ஹாக்கி திருவிழா 2010 - 1

நண்பர்களே, 12-வது உலகக்கோப்பை ஹாக்கி 28/02/2010-அன்று இந்திய தலைநகரம் நியூ டெல்லி தயான் சந்த் விளையாட்டு அரங்கில் தொடங்கிய செய்தி எல்லோரும் அறிந்திருப்பீர்கள். பணம்கொழிக்கும் பொழுதுபோக்கான கிரிக்கெட்டுக்கு-முன் இந்த ஹாக்கி உலகக்கோப்பை அமுங்கிப்போய் விடுவதற்க்கான வாய்ப்புகள் அதிகம். கிளப் (club) அளவிலான போட்டிகளான ஐபில் (IPL) கிரிக்கெட் போட்டிகளின் டிக்கெட் விற்பனைக்கு நாட்டுப்பற்றை பயன்படுத்த முயற்ச்சிக்கும் விளம்பரங்களை தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். ஹாக்கிக்கு போதிய விளம்பரங்கள் இல்லை என்றாலும் நடந்துகொண்டிருப்பது ஒரு உலகக்கோப்பை என்பதை விளையாட்டு ஆர்வலர்கள் மனதில் கொண்டால் போதும். டெல்லி-க்கு சென்று போட்டிகளை காணமுடியாது என்றாலும் தொலைக்காட்சியில் பார்ப்பதன் மூலம் நமது ஹாக்கி விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் கொடுக்கலாம்.

ஹாக்கி நமது தேசிய விளையாட்டு என்பது நீங்கள் அறிந்ததே. 8 முறை ஒலிம்பிக் தங்க பதக்கத்தை வெற்றி கொண்டுள்ள இந்திய அணி ஒரே ஒருமுறை (1975) உலகக்கோப்பையையும் வென்று உள்ளது. இப்படி ஒருகாலத்தில் உலகின் வல்லரசாக விளங்கிய இந்திய ஹாக்கி அணியின் தற்போதைய நிலைமை கொஞ்சம் கவலைக்கிடம்தான். கடந்த உலகக்கோப்பையில் நமது அணி பிடித்த இடம் 11. இந்த உலககோப்பையிலும் பணபிரச்சினை, தலைமை பதவி பிரச்சினை போன்ற பலதரப்பட்ட சிக்கல்களுக்கிடையில் நமது அணி கலந்து கொள்கிறது. நமது அணியை தவிர்த்து பாகிஸ்தான், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நெதர்லாண்ட்ஸ் போன்ற 11 பிற அணிகளும் கலந்துகொள்கின்றன. தீவிரவாத அச்சுறுத்தல்கள் இருந்தாலும் எந்த அணியும் பின்வாங்காமல் போட்டியில் பங்குகொள்ள வந்து இருப்பது விளையாட்டுக்கு கிடைத்த வெற்றி.

கடந்த ஞாயிறு (28/02/2010) நடந்த முதல் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை மிகவும் எளிதாக தோற்க்கடித்தது. தவறுதலாக குண்டடிபட்டதன் காரணமாக கடந்த உலகக்கோப்பையில் பங்குகொள்ளாத சந்தீப்சிங் சிறப்பாக ஆடி இரண்டு பெனால்டி கார்னர் (penalty corner) வாய்ப்புகளை கோல்-ஆக (goal) மாற்றினார். முதல் போட்டியில் இந்திய அணி ஆடிய விதத்தை வைத்து பார்க்கும்பொழுது ராஜ்பால்சிங் தலைமையிலான இந்திய அணி இம்முறை அரையிறுதிவரையாவது முன்னேற முடியும் என்ற நம்பிக்கை துளிர் விட்டுள்ளது.

கிரிக்கெட் போலவே ஹாக்கியிலும் ஆஸ்திரேலியா முதல் ராங்கிங்கில் (ranking) உள்ள அணி என்பதால் கோப்பையை வெற்றிக்கொள்ள முனைந்து செயல்படும். கடந்த இருதடவை கோப்பையை வென்ற அணியான ஜெர்மனி ஹாட்-ட்ரிக் (hat-trick) வெற்றிகொள்ள முயலும். நெதர்லாண்ட்ஸ், கொரியா, ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற அணிகளும் கோப்பையை வெல்ல முயற்சி செய்யும். கடந்த முறையைவிட சிறப்பான நிலையை பெறுவதற்கு இந்திய அணி முயற்சி செய்யும் என்பதில் ஐயம் இல்லை. மேலும் இந்த உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடப்பது நமது அணிக்கு சாதகமான அம்சம்.

இந்திய அணி கோப்பையை வென்று கிரிக்கெட் தவிர்த்து பிற விளையாட்டுகளின் மேல் விளையாட்டு ஆர்வலர்களின் கவனம் திரும்ப செய்வதோடு மட்டுமல்லாமல், ஹாக்கி-யில் இன்றும் நாங்கள் வல்லரசுதான் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதே என்னை போன்ற விளையாட்டு ஆர்வலர்களின் விருப்பம்.