வெள்ளி, 31 மே, 2013

ஆல்ப்ஸ் (Alps) மலை காற்றினிலே ...


பணி நிமித்தமாக கடந்த 2012 ஆம் ஆண்டு முழுவதும் ஜெர்மனி (Germany) நாட்டில் யூபெர்லிங்கென் (Ueberlingen) என்னும் இடத்தில் வசிக்க நேரிட்டது. யூபெர்லிங்கென் நகரம் தென்மேற்கு ஜெர்மனியில் பேடன்-வுர்ட்டேம்பெர்க் (Baden-Wuerttemberg) மாநிலத்தில் கான்ஸ்டன்ஸ் ஏரிக்கரையில் (Lake Constance) அமைந்துள்ளது. பேடன்-வுர்ட்டேம்பெர்க் மாநிலம் ஜெர்மனி சுவிட்சர்லாந்து (Switzerland) எல்லையில் அமைந்துள்ளபடியால் முதல் சுற்றுலா பயணமாக சுவிட்சர்லாந்து செல்வது என்று முடிவெடுக்கப்பட்டது.

சுவிட்சர்லாந்து

செப்டம்பர் 1,2,3 - 2012

முதல் நாள்

நான், எனது மனைவி மற்றும் எங்கள் 10 மாத பெண் குழந்தை ஆகிய மூவரும் காலை 6 மணி யூபெர்லிங்கெனிலிருந்து ட்ரெயின் (train) மூலமாக சஃபாசென் (Schaffhausen) வந்தடைந்தோம். எங்களுடைய முதல் இலக்கு மௌண்ட் டிட்லிஸ் (Mt.Titlis). சஃபாசென்னிலிருந்து சூரிச் (Zurich), லுசெர்ன் (Luzern) வழியாக 10 மணி அளவில் எங்கெல்பெர்க் (Engelberg) வந்தடைந்தோம். எனக்கு ஏற்கனவே பனி பரிச்சயம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. என் மனைவி முதல் முறை பனி மலையில் நடை பழக மிகுந்த ஆவலுடன் இருந்தார். எங்கெல்பெர்கிலிருந்து கிட்டத்தட்ட அரை மணி நேர ரோப் கார் (rope car) பயணத்தில் டிட்லிஸ் சிகரத்தை அடைந்தோம்.

பஞ்சு பொதி போன்று பனி சூழ்ந்திருந்த ஆல்ப்ஸ் மலையின் ஒரு பகுதியான டிட்லிஸ் சிகரத்தை கண்டவுடன் என் மனைவியின் கண்கள் ஆச்சர்யத்தால் விரிவதை நான் பெருமையுடன் பார்க்க, எங்கள் குழந்தை சிரிக்க ஒரு அற்புதமான அனுபவத்திற்கு தயாரானோம். குழந்தையை என் கையில் ஒப்படைத்துவிட்டு கால் முட்டு அளவு பனியில் இறங்கி என் மனைவி விளையாடிக்கொண்டிருக்க நான் வேடிக்கை பார்க்க தொடங்கினேன். மலை உச்சியில் இருந்து அடிவாரத்தை பார்க்க அமைக்கப்பட்ட டவர் (tower), அதிகமான பனி பொழிவின் காரணமாக முழுவதும் பனியால் சூழப்பட்டு இருந்தது. பனிச்சறுக்கு போன்ற விளையாட்டுகள் தடை செய்ய பட்டிருந்தன. சுவிட்சர்லாந்த்தில் உள்ள சுற்றுலாதலங்களுக்கு பெரும்பாலும் இந்தியர்கள்தான் அதிகமாக வருகை புரிவார்கள் எனபதை உணர்த்தும் வகையில் ஷா-ருக்-கான் கஜோல் ஜோடி கட்டவுட்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தன.

தாயார் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்த மகள், தானும் கலந்துகொள்ள என் பிடியில் இருந்து நழுவ எத்தனித்து கொண்டிருந்தாள். அவளை சிறிது நேரம் தாயிடம் ஒப்படைத்து விட்டு என் கேமரா கண்களால் படமெடுக்க தொடங்கினேன். குழந்தை பனியை தொட்டு பார்த்து குதூகலித்துகொண்டிருக்கும் வேளையில் திடீரென்று பனிப்புயல் அடிக்கத் தொடங்க மனைவியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு அங்கு இருந்த கட்டிடதிற்குள் நுழைந்தேன்.

அங்கு இருந்த போட்டோ ஸ்டுடியோ-வில் (photo studio) வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை பார்த்துக்கொண்டிருந்தபொழுது, கிரிக்கெட் வீரர் சேவாக் அவர் மனைவியுடன் சுவிட்சர்லாந்து நாட்டின் பாரம்பரிய உடையணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் கண்ணில் பட்டது. அதுபோல் புகைப்படம் எடுக்க எண்ணி ஸ்டுடியோ-விற்குள் நுழைந்தோம். புகைப்படத்திற்கான கட்டணம் மிகவும் அதிகம் என்றாலும் அந்த பாரம்பரிய உடையால் ஈர்க்கப்பட்டு புகைப்படம் எடுக்க முடிவு செய்தோம். அங்கிருந்த உதவியாளர் உதவியுடன் நான், என் மனைவி மற்றும் குழந்தை ஆடை அணிந்து புகைப்படத்திற்கு தயாரானோம். புகைப்படக்காரர் அறிவுரைப்படி என் மனைவி அமர்ந்திருக்க, நான் குழந்தையை வைத்துக்கொண்டு நின்றிருந்தேன். குழந்தை வழக்கம்போல் அடம்பிடிக்க, முடிவில் அம்மா குழந்தையை வைத்துக்கொள்ள நான் அருகில் அல்ப்ஹொர்ன் (Albhorn) என்னும் மரத்தாலான இசைக்கருவி ஏந்திக்கொண்டிருக்கும் வகையில் புகைப்படம் எடுக்கப்பட்டது.

பனிபொழிவு நின்றுவிட, மேலும் பனியில் நேரம் போவது தெரியாமல் விளையாடிக்கொண்டிருந்தோம். மீண்டும் ரோப் கார் மூலம் கீழிறங்கி மலை அடிவாரத்தை எட்டுகையில் நேரம் மாலை 5 மணி ஆகி இருந்தது. பன், பிரட் வகையறாக்களை சாப்பிட்டு மதிய உணவை தவிர்த்ததால் மிகவும் பசியாக உணர்ந்தோம். நல்ல வேளையாக ஒரு நடமாடும் இந்திய உணவகம் கண்ணில் பட்டது. இட்லியை பார்த்தவுடன் பசி அதிகரிக்க இட்லி வாங்கி சாப்பிட்டோம். குழந்தைக்கு சிறிது இட்லி ஊட்டியவுடன் உற்சாகமான குழந்தை தரையில் விளையாட ஆரம்பிக்க, நாங்கள் குளிருக்கு இதமாக மசாலா டீ (tea) அருந்தினோம்.

முதல் நாள் பயணம் வெற்றிகரமாக முடிய, மீண்டும் லுசெர்ன் வழியாக பெர்ன் (Bern) வந்து, அங்கிருந்து இன்டர்லேகன் (Interlaken) வந்தடைந்தோம். அங்கு தங்குவதற்கு நாங்கள் முன்பதிவு செய்து வைத்திருந்த வீட்டின் முதலாளி, ஸ்டேஷன் வந்து அவரது காரில் அழைத்து சென்றார். அந்த வீடு ப்ரியன்ஸ் ஏரிக்கரையில் (Lake Brienz) அமைந்திருந்தது. வீடிற்கு முன் அருமையான தோட்டம் அமைந்திருந்தது. அடுத்த நாள் அதிகாலையில் தோட்டத்தில் அமர்ந்தபடி ஏரியை ரசித்துக்கொண்டிருந்தது இன்னும் கண்களுக்குள்ளேயே இருக்கிறது.

இரண்டாவது நாள்

டாப் ஆஃப் ஈரோப் (Top of Europe) என்று அழைக்கப்படும் யுங்க்ப்ராயொக் (Jungfraujoch) பனி மலை சிகரத்திற்கு செல்வதுதான் இன்றைய திட்டம். திட்டமிட்டபடி காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி இன்டர்லேகன் வந்தோம். அங்கிருந்து டாப் ஆஃப் ஈரோப் செல்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒரு வழி கிரின்டெல்வேல்ட் (Grindelwald), இன்னொரு வழி லாடெர்ப்ருன்னேன் (Lauterbrunnen). கிரின்டெல்வேல்ட் வழியாக செல்வது என்று முடிவு செய்து ட்ரெயினில் கிளம்பினோம்.

கிரின்டெல்வேல்ட் வரை சாதாரண ட்ரெயினில் சென்று, பின்பு அங்கிருந்து சிறப்பு மலை ட்ரெயின் மூலம் டாப் ஆஃப் ஈரோப் நோக்கி பயணமானோம். வழக்கமான ரயில் தடத்தில் ட்ரெயின் சக்கரம் செல்வதற்க்காக ஒன்றோடு ஒன்று இணையாத இரண்டு இரும்பிலான தடங்கள் இருக்கும். ஆனால் இந்த மலை ட்ரெயின் செல்வதற்கான பாதையில் இரு தடங்களுக்கு மத்தியில் ட்ரெயினில் அமைந்துள்ள பல்சக்கரங்களுக்காக ஒரு தடமும் உள்ளது. இந்த தடம் மலையில் ஏறும்பொழுது ட்ரெயினுக்கு தேவையான பிடிமானத்தை கொடுக்கும். போகும் வழியில் பனியால் சூழ்ந்த மலைகளை ரசிப்பதற்காக ஆங்காங்கே ட்ரெயின் 5 நிமிடம் நின்றபடியே சென்றுகொண்டிருந்தது. மனைவியும் குழந்தையும் பனியை ரசித்துக்கொண்டிருக்க, டாப் ஆஃப் ஈரோப் செல்வதற்கான இந்த பாதையை எப்படி அமைத்திருப்பார்கள் என்று நான் வியந்து கொண்டிருந்தேன். சரியாக காலை 10:30 மணி அளவில் சிகரத்தை அடைந்தோம்.

நாங்கள் சென்ற பொழுது அந்த இடத்திற்கு ட்ரெயின் சேவை தொடங்கப்பட்டு 100 வருடம் நிறைவு செய்ததற்கான கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. நாங்கள் அனுமதி சீட்டுடன் கொடுக்கப்பட்ட அடையாள அட்டையில் அங்கு சென்தற்கான தேதியுடன் கூடிய அடையாளத்தை பதிவு செய்து கொண்டோம்.  

முதலில் பனியில் செதுக்கப்பட்ட சிலைகளை கொண்ட பனி மாளிகைக்கு சென்றோம். வழுக்கி விழுவதற்க்கு ஏதுவான பனியால் அமைக்கப்பட்ட தரையில் மிகவும் கவனமாக நடந்து பனிச்சிலைகளை கண்டு ரசித்தோம். அதன் பிறகு கட்டிடத்திற்க்கு வெளியே வந்து பனியில் விளையாட தொடங்கினோம். மைனஸ் 20 டிகிரி சென்ற்றிக்ரேட் (Degree Centigrade) கால நிலையில் குளிர்ந்த காற்றும் சேர்ந்து வீச, அணிந்திருந்த குளிர் தாங்கும் உள்ளாடைகள் சட்டை ஸ்வெட்டர், ஜாக்கெட் இவை எல்லாவற்றையும் மீறி லேசான வலியினை இதயத்தில் உணர முடிந்தது. குழந்தையை அங்கு அதிக நேரம் வைத்துக்கொண்டிருப்பது ஆபத்து என்பதை உணர்ந்த என் மனைவி கட்டிடத்திற்க்குள் சென்றுவிட நான் மட்டும் பனிமலையில் பிற சுற்றுலா பயணிகளுடன் குளிரை அனுபவித்துக்கொண்டிருந்தேன். எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து விட்டது போன்ற பெருமித உணர்வுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன்

அதன் பிறகு அங்கு இருந்த சீன ரெஸ்டாரென்டில் (Chinese restaurant) ஒரு மசாலா டீ குடித்துவிட்டு 3571 மீட்டர் (meter) - 11782 அடி உயரத்தை குறிக்கும் டவருக்கு லிப்டில் (lift) சென்றோம். அங்கு சென்று புகைப்படம் எடுத்துக்கொண்டு மீண்டும் கீழே வந்தோம். என்னதான் சுவிட்சர்லாந்து அதிக செலவு வைக்கும் சுற்றுலாதலம் என்றாலும் இந்தியர்கள் மிகவும் விரும்பி செல்லும் இடம் என்பதை அங்கேயும் உணர முடிந்தது. பாலிவுட் ரெஸ்டாரென்ட் (Bollywood Restaurant) என்ற பெயரில் ஒரு உணவருந்தும் இடம் டாப் ஆஃப் ஈரோப்-ல் அமைந்துள்ளது.


இந்தியர்களை தவிர்த்து சீன மக்களையும் அங்கு நிறைய காண முடிந்தது. அங்கு சென்று வந்ததற்கான நினைவாக சில நினைவு பொருட்களை வாங்கிக்கொண்டு அங்கு வந்திருந்த இந்தியாவை சேர்ந்தவர்களிடம் சிறிது நேரம் அளவளாவிக்கொண்டு மீண்டும் அடிவாரத்தை நோக்கி ட்ரெயினில் கிளம்பினோம்.

இம்முறை லாடெர்ப்ருன்னேன் வழியாக இன்டர்லேகன் வந்தடைந்தோம். மாலை 5:30 மணி அளவில் வந்து விட்ட படியால் அந்த நகரத்தை சுற்ற கிளம்பினோம். ஜெர்மனியில் பெரும்பாலான மக்கள் ஜெர்மன் மொழியில்தான் பதிலளிப்பார்கள். ஜெர்மனி போல் அல்லாமல் அங்குள்ள மக்களிடம் ஆங்கிலத்தில் சரளமாக உரையாட முடிந்தது. நகர்வலம் முடிந்த பிறகு லிட்டில் இந்தியா (Little India) என்னும் இந்திய உணவகத்தில் உணவருந்திவிட்டு தங்கியிருந்த வீட்டுக்கு வந்தடைந்தோம். அடுத்தநாள் செல்லவேண்டிய இடங்களை திட்டமிட்டபடியே தூங்கிப்போனோம்.

மூன்றாவது நாள்

மூன்றாவது நாள், தங்கியிருந்த வீட்டை காலி செய்துவிட்டு இன்டர்லேகன் நகரத்திற்கு வந்தோம். குழந்தைக்கு தேவையான பொருட்களை மட்டும் கையில் வைத்துக்கொண்டு பிற பொருட்களை ரயில்வே நிலையத்தில் உள்ள பொருட்கள் பாதுகாக்கும் அறையில் வைத்துக்கொண்டு ட்ருமெல்பெக் (Trummelbach) நீர்வீழ்ச்சி நோக்கி ட்ரெயினில் பயணமானோம்.இந்த நீர்வீழ்ச்சியின் சிறப்பு அம்சம் என்ன வென்றால் பாறைகளுக்கு உள்ளே பாயும் வகையில் அமையப் பெற்றது. வெளியில் இருந்து பார்க்கும் பொழுது எதுவும் தெரியாது. பாறைகள் ஊடே பயணித்து மலை உச்சி வரை சென்று பார்க்கும் வகையில் படிகள் மற்றும் லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பாறையில் மோதி விழுவதால் எழும் கடும் இரைச்சல் சத்தம் குழந்தைக்கு ஆபத்து என்று அனுமதிக்க மறுத்து விட்டார்கள். அதனால் தன்னந்தனியாக அருவியை உச்சி வரை சென்று பார்த்து ரசித்து வந்தேன்.

இன்டர்லேகன் நகரம் ப்ரியன்ஸ் மற்றும் துன் (Thun) என்னும் இரண்டு பெரிய ஏரிகள் சங்கமிக்கும் இடத்தில அமைந்துள்ளது. இந்த சங்கமத்தை பறவை பார்வையில் பார்க்கும் வகையில் நகரத்தின் மத்தியில் இருக்கும் மலை குன்றின் மேல் அமைந்துள்ள இடம்தான் ஹர்டர் குல்ம் (Harder Kulm). அங்கு செல்வதற்க்கு செங்குத்தாக மலை மேல் ஏறும் ஒரே ஒரு பெட்டி மட்டும் கொண்ட ட்ரெயின் அமைக்கப்பட்டுள்ளது

அருவியை கண்டு கழித்தபின் மீண்டும் நகரத்திற்க்கு வந்து ஒற்றை பெட்டி ட்ரெயின் மூலம் ஹர்டர் குல்ம் வந்தடைந்தோம். அந்த ரயில் பயணம் குறைவான நேரம் என்றாலும் த்ரில்லான அனுபவத்தை தர தவறவில்லை. மலை விளிம்பில் நின்று கொண்டு பார்க்கும் வகையில் அமைந்த இடத்தை நோக்கி என் மனைவி உற்சாகமாக செல்ல, நான் குழந்தையை வாங்கி கொண்டு பின் வாங்கினேன். உயரம் எனக்கு அலர்ஜி (allergy) என்பதால், விளிம்பில் நின்று கொண்டு இரு ஏரிகளும் இணையும் அழகை ரசித்துக்கொண்டிருந்த என் மனைவியை படம் எடுத்துக்கொண்டிருந்தேன். குழந்தை வழக்கம் போல் அடம் பிடிக்க, குழந்தையை நான் கீழே விட பயம் அறியாத குழந்தை உற்சாகமாக அங்கும் இங்கும் ஓடி விளையாடிக்கொண்டிருந்தது



மாலை ஆகிவிட்டபடியால் ஏற்கனவே திட்டமிட்டபடி இன்டர்லேகனில் இருந்து மீண்டும் யூபெர்லிங்கென் வர வேண்டும். சிறிது நேரம் ஷாப்பிங் (shopping) செய்துவிட்டு, மெக்டொனல்ட்ஸ்-ல் (McDonalds) பர்கர் (burger) சாப்பிட்டோம். பின்னர் ரயில் நிலையத்தில் வைத்திருந்த பெட்டிகளை எடுத்துக்கொண்டு, இன்டர்லேகனில் இருந்து ட்ரெயின் மூலம் பெர்ன் வந்து, அங்கிருந்து சூரிச் வழியாக சஃபாசென் வந்தடைந்தோம். அங்கிருந்து யூபெர்லிங்கென் வந்து வீடு சேர இரவு 10:30 மணி ஆகிவிட்டது. மூன்று நாள் பயணம், காலம் முழுவதும் நினைவு கொள்ளத்தக்க வகையில் வெற்றிகரமாக அமைந்ததால் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தோம்.

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

லண்டன் ஒலிம்பிக்ஸ் 2012

மீண்டும் ஒரு ஒலிம்பிக்ஸ் லண்டனில் நடந்து முடிந்து விட்டது!

120 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியர்களின் சார்பாக கலந்துகொண்ட 83 இந்தியர்கள், அளப்பெரிய வெற்றிகளை குவிக்கவில்லை என்றாலும் கடந்த காலங்களை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது, இந்த முறை சிறப்பாகவே தங்கள் பங்களிப்பை செய்திருக்கிறார்கள்.

பதக்கம் வென்ற இந்தியர்கள்:

வெள்ளி

துப்பாக்கி சுடுதல் (25m rapid fire pistol) - விஜய் குமார்
மல்யுத்தம் (66kg Freestyle) - சுஷில் குமார்

வெண்கலம் 

துப்பாக்கி சுடுதல் (10m Air Rifle) - ககன் நரங்
பெண்கள் குத்துசண்டை (Flyweight 51kg) - மேரிகோம்
பெண்கள் இறகுப்பந்து - சாய்னா நெஹ்வால்
மல்யுத்தம் (60kg Freestyle) - யோகேஷ்வர் தத்

உலக நாடுகள் எல்லாம் தங்களுடைய ஆளுமையை நிரூபிக்க  ஒலிம்பிக் போட்டிகளை பயன்படுத்திக்கொள்கின்றன. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் விளையாட்டு துறையில் நமது நாடு மிகவும் பின்தங்கியே உள்ளதால் ஒலிம்பிக்கில் ஆளுமை செலுத்த முடியவில்லை. நமது நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகள், மக்களின் அடிப்படைத்தேவைகள், போக்குவரத்து வசதிகள், அனைவருக்கும் கல்வி, வேலை என்று இன்னும் பல வளர்ச்சி பணிகளில் அரசு கவனம் கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதால், விளையாட்டில் முழு கவனமும் செலுத்துவதற்கான சூழ்நிலை இல்லை. ஆனால் இருக்கின்ற வசதிகளை கொண்டு 6 பதக்கங்களை நாம் வென்றிருப்பது மகிழ்ச்சியான ஒன்றே. இந்த முறை பெற்ற பதக்கங்கள், அடுத்து 2016-ல் ரியோ டி ஜெனிரோ-வில் (பிரேசில்) நடக்க இருக்கும் ஒலிம்பிக்ஸ்க்கு உத்வேகமாக இருக்கும் என்பதால், அடுத்தமுறை இரட்டை இலக்கத்தில் பதக்க எண்ணிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வெள்ளி, 1 ஜூன், 2012

குற்றம் - நடந்து கொண்டிருப்பது என்ன? தமிழக அரசியல்

தி.மு.க ஆட்சிக்கு விடைகொடுத்து, அ.தி.மு.க-வுக்கு ஆட்சி பொறுப்பு கொடுத்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை!

திருச்சி, சங்கரன்கோவில் என்று இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் முடிந்து, புதுக்கோட்டை இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. பொதுத்தேர்தலே  முறையற்று நடக்கும்பொழுது இடைத்தேர்தல் எல்லாம் சம்பிரதாயமாகவே நடைபெற்றுவருகின்றன. வருங்காலங்களில் இடைத்தேர்தல் நடத்தாமலே ஆளும்கட்சி ஜெயித்ததாக அறிவித்துவிட்டால், மிச்சமாகும் பணத்தை மக்கள் நல்வாழ்வு திட்டங்களுக்கு பயன்படுத்தலாம்.

தமிழகம் சந்தித்துவரும் மிகப்பெரிய பிரச்சினை மின்சாரத் தட்டுப்பாடு. பல வருடங்களாக இருந்து வரும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தொலைநோக்கு பார்வையில் திட்டங்களை தீட்டாமல், இந்த ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சியை தக்கவைக்கும் பொருட்டு செய்யும் செயல்களால் மின்சாரத் தட்டுப்பாட்டை அதிகமாக்கிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த தி.மு.க ஆட்சி மின்சார தேவை பற்றி கண்டுகொள்ளாமல் இலவச தொலைக்காட்சிப்பெட்டிகளை மக்களுக்கு வழங்க, தற்போதைய ஆளும் அ.தி.மு.க தன்னுடைய பங்கிற்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் போன்ற மின் உபகரணங்களை வழங்கிக்கொண்டிருக்க, மக்கள் மின்சாரத்தை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

எல்லா மக்களுக்கும்  உணவு, உடை, இருப்பிடம், மின்சாரம் போன்ற அடிப்படை தேவைகள் கிடைக்கப்பெற்றபின் அவர்களுக்கு தேவையான பிற வசதிகளை இலவசமாகவோ மானியவிலையிலோ அரசாங்கம் செய்து கொடுப்பதில் தவறில்லை. ஆனால், அடிப்படை வசதி இல்லாமல் பல ஆயிரம் மக்கள் தமிழகத்தில் இன்றும் வாழ்ந்துகொண்டு இருக்கும்பொழுது, அதைப்பற்றி  கவலைப்படாமல் ஓட்டுக்காக இரு கட்சிகளும் இலவச அரசியல் நடத்தி கொண்டிருப்பது நகைப்புக்குரியது. மின்சார தேவையை பெருக்குவதற்கு எல்லா வகையான வழிமுறைகளையும் தொழில்நுட்ப வல்லுநர்களைக்கொண்டு கண்டறிந்து செயல்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு மக்களை அறிவுறுத்துவதும் அரசின் தலையாய பணிகளில் ஒன்று.

சாலை விதிகளை மீறுவது, போதையில் வாகனங்களை இயக்குவது, போதிய ஓய்வு இல்லாமல் தொடந்து வண்டி ஓட்டுவது, நிர்ணயிக்கப்பட்ட வேகத்திற்கு அதிகமாக வண்டி ஓட்டுவது, முறையாக பராமரிக்கப்படாத வாகனங்களை இயக்குவது என்பன போன்ற பல காரணங்களால் தமிழகத்தில் தினம் தினம் நடைபெறும் விபத்துக்களால் உயிரிழப்பவர்கள் ஏராளம். ஆட்சியில் இருப்பவர்கள் விபத்துகளை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து புது திட்டங்களை வகுக்க வேண்டும். வழக்கில் இருக்கும் சட்டங்களை தவறிழைப்போர் மீது முறையாக பிரயோகிக்கும் வகையில் அதிகாரிகளை முடுக்கிவிட்டால் பெரும்பாலான விபத்துகளை தடுக்க முடியும். ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான பிரச்சினைகளில் இதுவும் ஒன்று.

டாஸ்மாக் மது விற்பனை மூலம் அரசுக்கு கிடைத்து வரும் வருமானத்தை கணக்கில்கொண்டு, பூரண மதுவிலக்கு கொண்டுவரும் எண்ணத்தில் அரசு இல்லை என்று தெரிந்தாலும், தீவிர குடிப்பழக்கதிற்கு ஆளாகுபவர்களை கட்டுப்படுத்த அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்க முற்படவில்லை. உயர்ரக மதுபான வகைகளை விற்பனை செய்வதற்காக எலைட் பார்களை திறப்பதில் ஆர்வம் காட்டும் அரசு மக்கள் நலனில் ஆர்வம் காட்டாமல் தவிர்ப்பது வேடிக்கை.

கட்டணம் உயர்ந்திருக்கிறதே தவிர, பேருந்துகளின் தரம் உயர்த்தப்படவில்லை. தமிழக அரசு விரைவு பேருந்து ஒன்றில் நமது முதல்வர் அல்லது மந்திரிகள்  தலைநகர் சென்னையில் இருந்து கடைக்கோடி கன்னியாகுமரி வரைக்கும் ஒரு பயணம் செய்து பார்த்தால்தான் தெரியும், மக்களின் சிரமம் மற்றும் அரசு பேருந்துகளின் அவல நிலைமை. 21-ஆம் நூற்றாண்டில் நாம் இருந்தாலும் அரசு பேருந்துகள் இன்னும் 20-ஆம் நூற்றாண்டை தாண்டவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. வசதியான பேருந்துகள், முறையான பராமரிப்பு இருந்தால்தான் மக்களுக்கு பாதுகாப்பான பயணம் கிடைக்கும்.

கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம் கிடப்பில் போடப்பட்டு மோனோ ரயில் திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. சென்னையின் போக்குவரத்து நெரிசலை மோனோ தீர்த்து வைக்குமா எனபது சந்தேகமே. இந்த திட்டத்தில் மக்களின் வரிப்பணத்தை வீணாக்குவதற்கு முன், அரசு போலி கவுரவத்தை விட்டொழித்து நிபுணர்களை கூட்டி ஆலோசனை செய்து கொள்வது மிகவும் அவசியம். ஏனென்றால் மோனோவுக்கு முன்மாதிரியான ஜப்பானிலேயே மிகவும் குறைந்த அளவில்தான் மோனோ செயல்பட்டு கொண்டிருக்கிறது.

வளர்ந்து வரும் விலைவாசிக்கு முக்கிய காரணம் பெட்ரோல், டீஸல் விலை உயர்வே. பெட்ரோல், டீஸல் விலை உயர்வை மத்திய அரசுடன் சேர்ந்து மாநில அரசு கட்டுப்படுத்த முயற்சி செய்தால் விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வரலாம்.

சேவை மனப்பான்மையில் செய்ய வேண்டிய கல்விக்கொடை, தனியார் பள்ளிகளின் கையில் கொள்ளையாக மாறி மக்களின் ரத்தத்தை உறிஞ்சிக்கொண்டு இருக்கிறது. தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்துவதற்காக கடந்த தி.மு.க ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்றைய அ.தி.மு.க ஆட்சியில் இந்த பிரச்சினை கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அரசு இதில் தலையிட்டு முறைப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் ஆசை.

கடந்த ஆட்சியில் நடைபெற்ற நில மோசடிகளை வெளிக்கொணர்வது மிகவும் நல்ல விஷயம் என்றாலும், நில மோசடியில் தற்போதைய ஆட்சியாளர்கள் ஈடுபடக்கூடாது என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு.

அண்டை மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பிரச்சினைகளை சட்டத்தின் துணைகொண்டு தீர்க்க முற்படுவதைவிட, இருமாநில மக்களின் நெடுநாள் நன்மைக்காக அந்தந்த மாநில முதல்வர்களுடன் கலந்தாலோசித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முற்படுவது சாலச்சிறந்தது.

நியாயமான பிரச்சினைகளுக்கு நியாயமான முறையில் போராடும் மக்களை, சமூக விரோதிகள் போல கையாளுவதை காவல்துறை தவிர்த்தால்தான் மக்களுக்கு நண்பனாக விளங்கமுடியும்.

ஏழை மக்களுக்காக மருத்துவ காப்பீடு திட்டம் நல்ல விஷயம் என்றாலும், அரசு மருத்துவமனைகள் கண்டிப்பாக மேம்படுத்தப்பட வேண்டும்.

முதல்வராய் இருந்தாலும், மந்திரியாய் இருந்தாலும், தான் தலைவன் மட்டுமல்ல, மக்கள் தொண்டன் என்ற எண்ணம் மனதில் இருந்தால் விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் பக்குவம் தானாக வரும். விமர்சனங்களை எதிர்கொண்டு, மக்கள் குறைகளை களைபவன்தான் நல்ல தலைவன். மக்கள் பிரச்சினைகளை விவாதித்து தீர்வு காணவேண்டிய சட்டசபையில், அளவுக்கு மீறிய தனிநபர் துதி தவிர்க்கப்படவேண்டிய ஒன்று.

அரசு இயந்திரம் முறைப்படுத்தபடவேண்டும் என்றால் முதல்வர், மந்திரிகள், உறுப்பினர்கள், அதிகாரிகள் என்று எல்லோரும் மாத ஊதியத்தை தவிர்த்து எந்தவிதமான லஞ்சத்தையும் வாங்க மறுத்து பணி செய்ய வேண்டும். நினைப்பதற்கு கனவு போல் இருந்தாலும் இது நடைமுறைக்கு சாத்தியமானதே.

இப்படி இன்னும் ஏராளமான தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகள் இருக்க, அரசு பல கோடி ரூபாய் செலவழித்து ஓராண்டு சாதனை என்று விளம்பரம்தேட முயற்சிப்பது மக்களாட்சிக்கு அழகல்ல. ஒரு சாமானியன் இவ்வளவு யோசிக்க முடியும் என்றால் அரசு இயந்திரம் எவ்வளவு யோசிக்க வேண்டும். ஒட்டு அரசியலை விட்டொழித்து, மக்கள் நலத்திட்டங்களில் எல்லாம் பண மோசடிகளை தவிர்த்து, மக்கள் நலனில் அக்கறைகொண்டு, எல்லா வளங்களிலும் தன்னிறைவு பெறுவதற்கான தொலை நோக்கு பார்வையில் அரசு செயல்படும் என்றால் புகழ் தானாக தேடி வரும் எனபதில் ஐயமில்லை.

வெள்ளி, 25 மே, 2012

கிரிக்கெட் என்னும் பொன் முட்டையிடும் வாத்து!


கிரிக்கெட் - இந்தியர்களின் ரத்தத்தில் கலந்த விளையாட்டு என்று என் கல்லூரி பேராசிரியர் ஒருவர் அடிக்கடி குறிப்பிடுவார். அப்பொழுதெல்லாம் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்றாலும் அவர் கூறியதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். என்னுடைய தாயார் கிரிக்கெட் பார்க்கும் பழக்கம் இல்லாதவர். சில வருடங்களுக்கு முன்பு எதேச்சையாக கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தவர், இப்பொழுது வெறித்தனமான கிரிக்கெட் ரசிகை.

கிரிக்கெட் - நம்மை ஆண்டவர்களிடமிருந்து நமக்கும் தொற்றிக்கொண்டது. முதலில் விளையாட்டாக ஆரம்பித்த இந்த விளையாட்டு, அதிகப்படியான ரசிகர்கள், அதிகப்படியான பணம், என்று இப்பொழுது பொழுது போக்கிற்கான ஒரு வணிக நிகழ்ச்சியாக மாறிவிட்டது.

கிரிக்கெட் - முன்பெல்லாம் தேசப்பற்றை ஊட்டுவதற்கு இதுவும் காரணியாக விளங்கியது. தான் செய்யும் தவறுகளிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காக அரசும் இதை ஆதரிக்க கிரிக்கெட் தவிர்த்து விளையாட்டுகளே இல்லை என்ற நிலை மக்கள் மனதில் விதைக்கப்பட்டது. இதன் விளைவாக கிரிக்கெட்டில் பணம் கொழிப்பதை உணர்ந்துகொண்ட பெருந்தலைகள் அரசு ஆதரவுடன் கிரிக்கெட் நிர்வாகங்களை ஏற்படுத்த, இன்று 11 பேர் விளையாட அதை 111 கோடி பேர் பார்க்க, 11 ஆயிரம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன் பெறுகிறார்கள்.

கிரிக்கெட் - 4 வருடங்களுக்கு ஒரு உலக கோப்பை, சில பல நாடுகளுக்கு இடையேயான போட்டி தொடர்கள் என்று நடந்து கொண்டிருக்கும் விளையாட்டு. சில வருடங்களுக்கு முன்பு கபில்தேவ் தலைமையில் ICL என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டு பல்வேறு நாட்டு வீரர்கள் கலந்து கொண்ட கிளப் அடிப்படையிலான 20-20 போட்டிகள் நடைபெற்றன. இந்த வகை போட்டிகளுக்கான வரவேற்பு மற்றும் பெரும் பணம் ஈட்டுவதற்கான வாய்ப்பினை தாமதமாக புரிந்து கொண்ட BCCI தன்னுடைய பெரும் அதிகார பலத்தால் ICL-ஐ விழுங்கி உருவாக்கிய போட்டிகள்தான் IPL.

ஒருநாள் முழுவதும் விளையாடும்படியான விளையாட்டை 3 மணி நேரமாக குறைத்தாகிவிட்டது. பல கோடிகளுக்கு அணிகளையும் விற்பனை செய்தாகிவிட்டது. இனி எப்படியெல்லாம் லாபம் பார்ப்பது என்று யோசித்த IPL நிர்வாகம் EPL கால்பந்து போட்டிகளை போல ஒரு அணியின் சொந்த மைதானத்தில் ஒருமுறை, எதிரணியின் சொந்த மைதானத்தில் இன்னொருமுறை மோதுவது என்று இந்தியாவிற்கு சற்றும் பொருந்தாத வகையில் கிட்டத்தட்ட 100 போட்டிகளை ஒரு போட்டித்தொடரில் நடத்துகிறது. IPL போட்டிகளின் துவக்கத்தில் ஆர்வம் காட்டும் மக்கள், இடையில் மறந்து, பிறகு போட்டித்தொடர் முடிவடையும் தருவாயில்தான் பார்க்கிறார்கள். காரணம், அணி உரிமையாளர்களின் லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்ட அதிகமான போட்டிகள்.

ஒரு கிரிக்கெட் போட்டியையாவது மைதானம் சென்று பார்க்க வேண்டும் என்று ஆர்வம் உள்ள இந்தியர்கள் ஏராளம். ஆனால் பெரும்பாலானவர்களை கிட்டே நெருங்கவிடமுடியாத அளவுக்கு போட்டி கட்டணம் இருக்கிறது. 3 மணிநேர சினிமாவிற்கு அதிகபட்சமாக 200 ரூபாய் செலவழிக்கும்போது, 3 மணி நேரம் வரும் IPL பொழுதுபோக்கிற்கும் இந்த அடிப்படையில்தான் கட்டணம் நிர்ணயித்திருக்க வேண்டும். ஆனால் IPL வியாபாரிகளின் பேராசை, அதிகபட்சம் 12000 ரூபாய் வரைக்கும் போட்டி கட்டணம் என்பது ரொம்ப அதிகம்.

IPL தொடர் தோன்றுவதற்கு முன்பே ரஞ்சி கோப்பை, துலீப் கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை, தியோதர் கோப்பை, சயேத் முஷ்டாக் அலி கோப்பை என்று பல போட்டி தொடர்கள் மாநிலங்கள் மற்றும் மண்டலங்களுக்குகிடையில் காலம் காலமாக இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. அந்தந்த மாநிலம் சார்பாக மாநில வீரர்கள் விளையாடும் இந்த போட்டிகளை யாரும் கண்டுகொள்வது இல்லை. ஆனால், தங்கள் மாநிலத்தை சார்ந்த விளையாட்டு வீரர்கள் IPL அணியில் இல்லை என்றாலும் தங்கள் மாநில IPL அணிக்காக கொடி பிடிக்கிறார்கள் என்றால், BCCI, IPL மற்றும் அணி உரிமையாளர்கள், ஊடகங்கள் விரித்துவரும் மிகப்பெரும் சதிவலையில் மக்கள் மாட்டிக்கொண்டுவிட்டார்கள் என்றுதான் சொல்ல தோன்றுகிறது. தங்கள் மாநில அணியை ரஞ்சி போட்டிகளில் ஆதரிக்காத மக்கள் வணிக அடிப்படையிலான IPL போட்டிகளுக்காக அடித்துக்கொள்வது உச்சபட்ச காமெடி.

இந்தியா பிற நாடுகளுடன் விளையாடும் பொழுது தேசப்பற்றை தூண்ட முற்படுவது ஒரு வகையில் சரி என்று ஒத்துக்கொண்டாலும், தற்பொழுது IPL போட்டிகளுக்கும் இந்திய கொடியை காண்பித்து தேசப்பற்றை தூண்டி லாபமடைய நினைப்பது கண்டனத்துக்குரியது.

இது மட்டுமல்லாமல், Karbonn catch, DLF maximum, என்று வணிக நோக்கிலான எரிச்சலூட்டும் விளம்பர வர்ணனைகள்; இதைப்போல single run, double run, wide ball, no ball என்று எல்லாவற்றிக்கும் வருங்காலத்தில் விளம்பர அடைமொழிக்கான வாய்ப்பு இருக்கிறது என்பதை நினைத்தால் அடிவயிற்றில் ஒருவித பீதி கிளம்புவதை தவிர்க்க முடியவில்லை.

இதையெல்லாம் வைத்து பார்க்கும்பொழுது, 'பொன் முட்டையிடும் வாத்து' கதைதான் ஞாபகம் வருகிறது. BCCI, IPL மற்றும் கிரிக்கெட் நிர்வாகிகள் தங்களுடைய பேராசையின் காரணமாக, கிரிக்கெட் என்னும் வாத்து பொன் முட்டை இடும் வரை காத்திருக்க விரும்பாமல், அதை அறுத்துப்பார்க்க துணிந்து விட்டார்கள்.

கிரிக்கெட் ரசிகன் என்னும் வகையில் சிறிது வருத்தமாக இருந்தாலும் கிரிக்கெட் தவிர்த்த பிற விளையாட்டுகளையும் விரும்புபவன் என்னும் முறையில், கிரிக்கெட்டின் அதிகப்படியான திணிப்பு, மக்களை பிற விளையாட்டுகளின் பால் திசை திருப்பும் என்பது குறித்து மகிழ்ச்சியே!

திங்கள், 11 ஏப்ரல், 2011

குற்றம் - நடக்கப்போவது என்ன? தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2011

ஆளும் தி.மு.க தலைமையில் ஒரு கூட்டணி, அ.தி.மு.க தலைமையில் ஒரு கூட்டணி, தாங்கள்தான் தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்று கூறிக்கொள்ளும் காங்கிரஸ், பா.ம.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகள் மேற்கண்ட எதாவது ஒரு அணியில் ஐக்கியமாகிவிட, தேர்தல் அரசியலின் சூட்சுமம் தெரியாத ம.தி.மு.க ஒதுங்கிவிட, கம்யூனிஸ்ட் கட்சிகள் அ.தி.மு.க அணியில் சேர்ந்துகொள்ள, மூன்றாவது அணி என்று பெயரளவில் பா.ஜ.க போட்டியிட, தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

ஒரு சாதாரண குடிமகன், நல்லவன், பொதுநலம் மிக்கவன், ஆளுமை பண்பு உடையவன். தன்னுடைய தொகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பவன். தன்னால் இயன்ற அளவு பொது சேவை செய்து வருபவன். தொகுதி முழுவதும் அறிமுகம் உடையவன். ஆனால், எந்த அரசியல் கட்சியையும் சாராதவன். இப்படிப்பட்ட ஒருவன் தேர்தலில் போட்டியிடுகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள், அவனால் வெற்றி பெற முடியாது என்பது மட்டுமல்ல, அவன் கட்டிய வைப்புத்தொகை (deposit) கூட அவனுக்கு கிடைக்காது என்பதுதான் நிதர்சனம்.

அரசியல்வாதியின் வாரிசு, சினிமா நடிகன் இவர்கள்தான் மக்கள் பணி செய்ய முடியும் என்கிற அவல நிலைதான் தற்பொழுது இருக்கிறது. கட்சிகளும் உண்மையான தொண்டனை கண்டுகொள்வதில்லை. வாரிசுகளை தவிர்த்து, யாரால் கோடிகணக்காக செலவு செய்ய முடியும், யாரால் குறிப்பிட்ட சாதி அல்லது மத ஓட்டுகளை பெற முடியும், யாருக்கு போதுமான படைபலம் உள்ளது என்ற அடிப்படையிலேயே கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்கின்றன.

ஒரு வேட்பாளருடைய தேர்தல் செலவிற்கு தேர்தல் கமிஷன் தற்பொழுது நிர்ணயித்துள்ள தொகை 16 லட்சம். ஆனால், பிரபல கட்சி வேட்பாளர்கள் 2 கோடி முதல் 20 கோடி வரை செலவு செய்கிறார்கள் என்றாலும், 16 லட்சம் கணக்கு காட்ட முடிகிறது என்றால் சட்டசபை உறுப்பினர் ஆவதற்கு முன்னதாகவே ஊழல் ஆரம்பித்து விடுகிறது. மக்களாட்சியின் அடிப்படையே இந்த இடத்தில இருந்துதான் ஆட்டம் காண்கிறது. இவ்வளவு பணம் ஒரு வேட்பாளருக்கு எப்படி கிடைக்கிறது. சொந்த பணம், கட்சி நிதி, ஆட்சியில் இருந்த பொழுது ஊழல் செய்த பணம், என்று பல வகைகளில் இந்த பணம் வருகிறது. இத்தனை கோடிகள் செலவு செய்து அதை அடுத்த 5 வருட ஆட்சிக் காலத்தில் சம்பாதிக்க முற்படும்போது 'மக்களாட்சி' வியாபாரமாக மாறி விடுகிறது.

உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தற்பொழுது உங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்றால், கடந்த தேர்தலின்பொழுது அவர் தாக்கல் செய்த சொத்து விவரத்தையும், தற்பொழுது தாக்கல் செய்துள்ள சொத்து விவரத்தையும் ஒப்பிட்டு பாருங்கள். தன்னுடைய மக்கள் பணிக்காக மாதம் 30 ஆயிரம் ஊதியம் பெற்ற ஒரு சட்டமன்ற உறுப்பினரின் சொத்து மதிப்பு இடைப்பட்ட காலத்தில் எப்படி இவ்வளவு உயர்ந்தது என்று ஆச்சர்யப்பட்டு போவீர்கள்.

தேர்தலின் பொழுது ஓட்டுக்காக மக்கள் காலில் விழுந்து ஓட்டு சேகரிக்கும் வேட்பாளர்கள், சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று விட்டால், மக்கள் தொண்டன் என்பதை மறந்து, 'நானே அரசன்' என்கிற மனநிலைக்கு வந்து விடுகிறார்கள். அரசாங்க அதிகாரிகளும் காலில் விழாத குறையாக இவர்கள் உத்தரவுக்கு காத்திருக்க, சாதாரண மனிதர்கள் போல இவர்கள் நடந்து கொள்ள மாட்டார்கள் என்கிற அதிகாரம் தெரிந்தோ தெரியாமலோ இவர்களுக்கு வழங்கப்பட்டுவிட, பதவி மோகம் இவர்களை ஆட்கொண்டு விடுகிறது. அதனால், சாகும் வரை பதவியில் இருந்துவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள்.

முன்பெல்லாம் கட்சி நிதிக்காக உண்டியல் ஏந்தி பொதுமக்களிடம் நிதி திரட்டப்படுவதை நாம் நிறைய பார்த்திருக்கிறோம். ஆனால், தற்பொழுது அப்பழக்கம் கிட்டத்தட்ட வழக்கொழிந்து விட்டது. பெரிய பெரிய தொழில் நிறுவனங்களிடம் கட்சிகள் நிதி பெற்று கொள்கின்றன. இதற்கு கைமாறாக கட்சிகள் ஆட்சிக்கு வந்தபின் தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்கின்றன. அதுமட்டுமல்லாமல், மக்களுக்காக செய்யப்படும் எல்லாவிதமான வளர்ச்சி திட்டங்களிலும் ஊழல் செய்வது, அரசியல் வாதிகளின் குடும்பத்திற்காக மட்டுமல்ல, கட்சிக்கும் சேர்த்துதான். உண்டியல் ஏந்தித்தான் அரசியல் நடத்த வேண்டும் என்கிற நிலை மீண்டும் வர வேண்டும், அப்பொழுதுதான் ஊழல் குறைவதற்கான சூழ்நிலை உருவாகும்.

எவ்வளவுதான் ஊழல் புகார்கள் எழுந்தாலும், அரசியல்வாதிகள் ஊழல் செய்ய துணிகிறார்கள் என்றால், என்ன காரணம். பிக்பாக்கெட் திருடனுக்கு கிடைக்கும் தண்டனை கூட ஊழல் அரசியல்வாதிகளுக்கு கிடைப்பதில்லை. நீதிமன்றம் தண்டிப்பதை விட்டுவிட்டு, அரசியல்வாதிகளை எச்சரித்து விடுதலை செய்யும் கொடுமையை என்னவென்று சொல்வது. ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கோரி, பிரபல சமூக சேவகரும், காந்தியவாதியுமான அன்னா ஹசாரே போராடி வருவது வரவேற்கத்தக்கது.

மக்களாட்சி முறை கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து மன்னராட்சி முறை நோக்கி சென்று கொண்டு இருக்கும் அவலத்தை நாம்தான் தடுத்து நிறுத்த வேண்டும். ஒவ்வொரு தேர்தல் வரும்பொழுதும் அடுத்த முன்னேற்றத்திற்கான படி என்று எண்ண தோன்றாமல், 'குற்றம் - நடக்கப்போவது என்ன' என்ற பீதிதான் கிளம்புகிறது.

இம்முறை தேர்தல் நியாயமாக நடைபெற, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாரபட்சம் பார்க்காமல், பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் எடுத்து வருகிறது. இம்முயற்சி மக்களாட்சியை மீட்டெடுக்க ஓரளவேனும் உதவும்.

மக்களாட்சியின் தற்போதைய நிலை குறித்து சிந்தித்தால் வெறுப்புதான் மிஞ்சும், ஒதுங்கி போக மனம் எண்ணும். நாம் ஒதுங்கி செல்லச் செல்ல சீரழிவு அதிகமாகி கொண்டேயிருக்கும். மக்களாட்சி தழைத்தோங்க நம்மால் முடிந்தவற்றை நாம் செய்யலாம். ஓட்டுக்கு பணம் பெறுவதை தவிர்க்கலாம். இலவசங்களை பொருட்படுத்தாமல், கட்சி, சாதி, மத வேறுபாடு இல்லாமல் நல்ல வேட்பாளருக்கு வாக்களிக்கலாம். எந்த ஒரு வேட்பாளரும் தகுதி இல்லை என்று எண்ணும் பட்சத்தில் 49-ஓ பயன்படுத்தலாம். மக்களாட்சி தத்துவத்தை சரியான பாதையில் பயணிக்க வைக்க 'ஓட்டு' என்னும் ஆயுதத்தை தவறாமல் பயன்படுத்துவோம்.

திங்கள், 29 நவம்பர், 2010

ஆசிய விளையாட்டு போட்டிகள் 2010 - சில துளிகள்





வரலாற்றுத் துளிகள்!

* ஆசிய விளையாட்டு போட்டிகள் நான்காண்டுகளுக்கு ஒரு முறை ஆசிய நாடுகளின் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்குபெறும் பிரம்மாண்டமான விளையாட்டுப் போட்டிகளாகும்.

* முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 1952-ஆம் ஆண்டு இந்தியாவின் தலை நகரம் புது தில்லியில் நடைபெற்றன.

* உலக அளவில் ஒலிம்பிக்ஸ்-க்கு அடுத்து இரண்டாவது பெரிய விளையாட்டு திருவிழா ஆசிய விளையாட்டு போட்டிகள்.


* தற்பொழுது சீன நகரம் குவாங்சு-வில் நடந்து முடிந்தது 16-வது ஆசிய விளையாட்டு போட்டிகள்.


தங்கத் துளிகள்!

* இந்தியாவின் முதல் தங்கத்தை பில்லியர்ட்ஸ் தனிநபர் பிரிவில் வென்று தங்க வேட்டையை துவக்கி வைத்தார் பங்கஜ் அத்வானி.

* துடுப்பு படகு தனிநபர் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங்லால் தாக்கர் தங்கப்பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார்.

* ஆண்கள் ஒற்றையர் டபுள்டிராப் பிரிவு துப்பாக்கிச்சுடும் போட்டியில் ரஞ்சன் சோதி தங்கம் வென்றார்.

* 10,000 மீட்டர் மகளிர் ஓட்டப்பந்தய பிரிவில் பிரீஜா ஸ்ரீதரன் தங்கம் வென்றார்.

* 3000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் வீராங்கனை சுதா சிங் தங்கப் பதக்கம் வென்றார்.

* டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் சோம்தேவ் தேவ்வர்மன், சனம் சிங் இணை தங்கத்தை வென்றது.

* டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சோம்தேவ் தேவ்வர்மன் தங்கம் வென்றது புதிய வரலாறு, இத்துடன் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்று இந்தியாவின் "தங்க நாயகன்" ஆனார்.

* மகளிர் 400மீ தடை ஓட்ட போட்டியில் அஷ்வினி சிதானந்தா தங்கம் வென்றார்.
* இதே போட்டியின் ஆடவர் பிரிவில் ஜோசப் ஆப்ரகாம் தங்கம் வென்றார்.

* ஆடவர் குத்துச் சண்டை போட்டியில் 60கிலோ உடல் எடைப்பிரிவில் விகாஸ் கிருஷ்ணன் தங்கம் வென்றார்.

* மகளிர் கபடி போட்டியில் தாய்லாந்தை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது.

* ஆடவர் கபடி போட்டியில் ஈரானை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது.
தொடர்ந்து 6-வது முறையாக தங்கம் வென்று சாதனையை தொடர்கிறது இந்திய கபடி அணி.

* மன்ஜீத் கௌர், சினி ஜோஸ், அஸ்வினி சிதானந்தா, மன்தீப் கௌர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி மகளிர் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றது.

* 75 கிலோ எடைப்பிரிவு ஆடவர் குத்துச் சண்டை இறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீரர் விஜேந்தர் சிங் தங்கம் வென்றார். நிறைவு விழாவில் இந்திய தேசியக் கொடியை ஏந்தி இந்திய அணியை வழிநடத்தினார் "தங்க மகன்" விஜேந்தர் சிங்.


குறிப்பிடத்தக்க வெள்ளி துளிகள்!

* 10 மீட்டர் ஏர்ரைபில்ஸ் போட்டியில் ககன்நரங் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

* பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் குழு பிரிவில் ஹீனா சித்து, அனு ராஜ் சிங், சோனாய் ராய் ஆகியோர் ஒரு புள்ளி வித்தியாசத்தில் தங்கத்தை தவற விட்டு வெள்ளி வென்றனர்.

* டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா, விஷ்ணு வர்தன் இணை வெள்ளி வென்றது.

* 10,000 மீட்டர் மகளிர் ஓட்டப்பந்தய பிரிவில் கவிதா ரெளத் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

* 60 கிலோ ஊஷு போட்டி, சான்ஷோ பிரிவில் சந்தியாராணி தேவி வெள்ளி வென்றார்.

* தனிநபர் வில்வித்தை போட்டியில் வில்வித்தை வீரர் தருண்தீப் ராய் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

* குத்துச் சண்டை போட்டியில் சந்தோஷ் குமார் (64 கிலோ), தினேஷ் குமார் (81 கிலோ), மன்பிரீத் சிங் (91 கிலோ) தத்தமது பிரிவுகளில் வெள்ளி பதக்கம் வென்றனர்.


குறிப்பிடத்தக்க வெண்கலத் துளிகள்!

* பில்லியர்ட்ஸ் 8-பால் பூல் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் அலோக் குமார்.

* ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் பிரிவில் ஆஷிஷ் குமார் வெண்கலம் வென்று, இந்த பிரிவில் இதுவரை ஆசியப் போட்டிகளில் பதக்கம் இல்லாத நிலையைப் போக்கினார்.

* நீச்சல் வீரர் வீர்தவால் கடே 50மீ பட்டர்ஃபிளை போட்டியில் வெண்கலம் வென்றார். இப்பிரிவில் முதன் முறையாக பதக்கம் வென்றது இந்தியா.

* வில்வித்தை போட்டி மகளிர் அணி பிரிவில் தீபிகா குமாரி, போரா பானர்ஜி, ரிமில் புரியுல் வெண்கலம் பெற்றுத் தந்தனர்.

* பெண்கள் தனிநபர் சதுரங்க போட்டியில் ஹரிகா துரோணவல்லி வெண்கலம் வென்றார்.

* ஆண்கள் குழு சதுரங்க போட்டியில் சசிகிரண், சூர்ய சேகர் கங்குலி, அதிபன் மற்றும் கோபால் ஆகியோரை கொண்ட அணி வெண்கலம் வென்றது.

* ஆடவர் தனிநபர் ப்ரீ ஸ்கேட்டிங் பிரிவில் இந்திய வீரர் அனுப் குமார் யாமா வெண்கலம் வென்றார். ஜோடிப் பிரிவில் அனுப் - அவானி பஞ்சால் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தைத் தட்டிச் சென்றனர்.


ஏமாற்றத் துளிகள்!

* காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் துப்பாக்கிச் சுடுதலில் தங்க பதக்கத்தை குவித்ததையடுத்து, ஆசிய விளையாட்டு போட்டியிலும் இந்த வெற்றி தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஒரு தங்கம், சில வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை மட்டுமே வெல்ல முடிந்தது பெரிதும் ஏமாற்றமளித்தது.

* நட்சத்திர இறகுப்பந்து வீராங்கனை சாய்னா நெஹ்வால் ஒரு பதக்கம் கூட வெல்ல முடியாமல் போனது மற்றுமொரு ஏமாற்றம்.


நம்பிக்கை துளிகள்!

* குத்துச் சண்டை போட்டியில் 2 தங்கம், 3 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்கள் வென்றுள்ளது, வரும் காலங்களில் இவ்விளையாட்டு மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

* 609 வீரர், வீராங்கனைகளுடன் களம் இறங்கிய இந்தியா 14 தங்கம் உள்பட 64 பதக்கங்களுடன் 6-வது இடம் பிடித்தது.

* கடந்த 2006-ம் ஆண்டு தோகாவில் நடந்த ஆசிய விளையாட்டை விட இப்போது இந்தியாவின் செயல்பாடு மேம்பட்டு இருக்கிறது. கடந்த முறை இந்தியா 10 தங்கம் உள்பட 53 பதக்கத்துடன் 8-வது இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தது.

* அத்துடன் ஒட்டுமொத்த ஆசிய விளையாட்டு வரலாற்றில் இந்தியா அதிகபதக்கங்கள் வென்ற போட்டியாகவும் இது பதிவாகி இருக்கிறது. 1982-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் 57 பதக்கம் வென்றதே இந்தியாவின் முந்தைய அதிகபட்சமாக இருந்தது.


* 199 தங்கப் பதக்கங்களுடன் போட்டிகளை நடத்திய சீனா முதனிலை பெற்றது. தென்கொரியா 2-வது மற்றும் ஜப்பான் 3-வது இடம் பிடித்தன.

* 17 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தென்கொரியா நாட்டின் இன்சான் நகரில்
2014-ல் நடைபெற உள்ளன.


டிஸ்கி:
ஆசிய விளையாட்டு போட்டியில் முதன்முறையாக 20-20 கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட வேறு தொடர்களை காரணம் காட்டி இந்திய கிரிக்கெட் நிர்வாகம் கிரிக்கெட் போட்டிக்கு அணி அனுப்ப மறுத்துவிட்டது. கிரிக்கெட் அணி சென்று இருந்தால், கிரிக்கெட் போட்டியை தவிர்த்து வேறு எந்த போட்டிக்கும் இந்திய ஊடகங்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் முக்கியத்துவம் வழங்கி இருக்க மாட்டார்கள் என்பதால், இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் முடிவு பாராட்டுக்குரியது.

செவ்வாய், 19 அக்டோபர், 2010

காமன்வெல்த் விளையாட்டு திருவிழா 2010

சர்ச்சைகளை தவிர்த்து விட்டு பார்த்தால், முதல் முறையாக காமன்வெல்த் (11-வது) போட்டிகளை தில்லியில் சிறப்பாகவே நடத்தி முடித்திருக்கிறது இந்தியா!


இதோ! சில சாதனை துளிகள்:

* இந்த போட்டியின் "தங்க மகன்" ககன் நரங் இந்தியாவிற்க்கான முதல் தங்கத்தை "ஒலிம்பிக் நாயகன்" அபினவ் பிந்த்ராவுடன் சேர்ந்து 10மீ ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் சுட்டு தந்தார்.

* ககன் நரங் வென்ற தங்க பதக்கங்கள் மொத்தம் நான்கு, இரு தனி நபர் , இரு குழு போட்டி.

* துப்பாக்கிச்சுடும் வீராங்கனை அனிஸா சயீத் வென்ற தங்க பதக்கங்கள் இரண்டு, ஒரு தனி நபர், ஒரு குழு போட்டி.

* மல்யுத்த வீராங்கனை அல்கா டோமர் கனடா வீராங்கனை டோன்யா-வை வீழ்த்தி தங்கம் வென்றார்.

* 16-றே வயதான தீபிகா குமாரி வில்வித்தை போட்டியில் தங்கம் வென்றார்.

* உலக விளையாட்டுப் போட்டிகளில் முதல் முறையாக ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் பதக்கம் வென்றது இந்தியா. ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என இரு பதக்கங்களையும் வென்று இச்சாதைனையை நிகழ்த்தினார் ஆஷிஷ் குமார்.

* நட்சத்திர வீரர்கள் லியான்டர் பயஸ், மகேஷ் பூபதி ஏமாற்றிய நிலையில் சோம்தேவ் தேவ்வர்மன் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்றது சிறப்பு.

* மல்யுத்த போட்டியில் தங்கம் வென்ற சுஷில் குமார் இந்த காமன்வெல்த் போட்டியின் ஆகச்சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டார்.

* "பறக்கும் சீக்கியர்" மில்கா சிங்க்கிற்கு பிறகு 52 வருடங்கள் கழித்து தடகளத்தில் முதல் தங்கம் வட்டு எறிதல் போட்டியில் பெற்று தந்தார் கிருஷ்ணா பூனியா, இப்போட்டியில் இந்திய வீராங்கனைகள் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களையும் வென்று அழகுக்கு அழகு சேர்த்தனர்.

* சரத் கமல் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் போட்டியில் கோட்டைவிட்ட தங்கத்தை சுபாஜித் சஹாவுடன் சேர்ந்து இரட்டையர் போட்டியில் வென்றுகாட்டினார்.

* சமீப காலங்களாக சோபிக்காத இந்திய ஹாக்கி அணி, அரைஇறுதியில் இங்கிலாந்தை வென்று இறுதியை எட்டியது. இறுதி போட்டியில் உலகசாம்பியன் ஆஸ்திரேலியாவிடம் தோற்றுப்போனாலும் முதல் முறை காமன்வெல்த் பதக்கத்தை (வெள்ளி) வென்றது இத்திருவிழாவின் சிறப்புகளில் ஓன்று.

* "தங்க மங்கை" சாய்னா நெஹ்வால் இறகுப்பந்து போட்டியில் தங்கத்தை வென்றதோடு மட்டுமல்லாமல் இந்தியாவின் இரண்டாவது இடத்தையும் உறுதி செய்தது முத்தாய்ப்பு. (முதலிடம்: ஆஸ்திரேலியா, மூன்றாமிடம்: இங்கிலாந்து)


* 10 தங்க பதக்கங்களுக்குமேல் பெற்றுத்தந்து துப்பாக்கிச்சுடுதல் விளையாட்டு இந்தியாவின் முதன்மை பதக்க வேட்டை விளையாட்டாக உருவெடுத்திருக்கிறது.

* கடந்த இரு காமன்வெல்த் போட்டிகளில் பதக்கப்பட்டியலில் நாலாவது இடம் பிடித்த இந்தியா, இம்முறை இரண்டாவது இடம் பிடித்தது இதுவரை நடந்த காமன்வெல்த் போட்டிகளில் சிறப்பான பதிவு.

* 2002 போட்டியில் 30 தங்க பதக்கங்களை குவித்த இந்தியா, இம்முறை 32 பதக்கங்களை பெற்று பழைய சாதனையை முறியடித்தது. ஒட்டுமொத்தமாக 100 பதக்கங்களுக்குமேல் முதல் முறை வென்றது மற்றுமொரு சாதனை.


இந்த காமன்வெல்த் போட்டியில் இந்திய அணியின் சிறந்த செயல்பாடு, அடுத்து வரும் ஆசியா மற்றும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை பெரிதும் எதிர்பார்க்க வைத்திருக்கிறது. 2012 லண்டன் ஒலிம்பிக்ஸ்-ல் பத்து பதக்கங்கள் வரை எதிர் பார்க்கலாம் என்பது என் எண்ணம்.